அகிலா மாஞ்சோலை மலை அடிவாரத்தில் தன் குடும்பத்தோடு வசித்து வந்தாள். அவளது அப்பா தச்சு வேலைகளை செய்யும் தச்சர். அதென்ன தச்சு வேலை? மரப்பலகைகளில் இருந்து கலை பொருட்கள் செய்வதும், கட்டிடங்களுக்குத் தேவையான கதவுகள், ஜன்னல்கள் செய்வதும் அவரது தொழில். அதற்காக மாஞ்சோலை மலை அடிவாரத்தில் குடிசை அமைத்து அவர்கள் வசித்து வந்தனர். அந்த பகுதிக்கு அருகே ஒரு அடர்ந்த வனப் பகுதியை இருந்தது.
அந்த மலைக் குன்றில் ஆங்காங்கே ஓரிரு வீடுகள் இருந்தன. அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் அகிலாவின் வயதுக் குழந்தைகள் யாரும் இல்லை. ஆனாலும் அகிலா அதைப் பற்றி எல்லாம் பெரிதாகக் கவலைபட்டது இல்லை. ஏனெனில், அவளிடம் அவள் அப்பா செய்து தந்த சில மரப்பாச்சி பொம்மைகள் இருந்தன. மரத்தினால் செய்யப்பட்ட கரடி பொம்மை, நரி பொம்மை, யானை பொம்மையுடன் விளையாடி அவள் பொழுதைக் கழிப்பாள்.
அவள் வீட்டின் பின்புறத்தில் உள்ள புளியமரத்தில் உலக்கையால் கட்டப்பட்ட ஊஞ்சல் ஒன்று இருந்தது. அகிலா அதில் விளையாடச் சென்றாலும், தன் பொம்மைகளை எடுத்துச் செல்வாள். நல்ல வெயில் காலத்தில் ஆற்றங்கரையோரம் மரப்பாச்சிகளுடன் அமர்ந்து கூழாங்கற்களை நீருக்குள் எறிந்து விளையாடுவாள். வசந்த காலத்தில் இலைகள் பச்சை பசேலென்று துளிர் விடும்போது தன் மரப்பாச்சிகளுடன் காட்டிற்குள் சுற்றுலா செல்வாள். ஒரு கூடையில் நிறைய பழங்கள், திண்பண்டங்கள், தரை விரிப்பு என சகல வசதிகளுடன் மரப்பாச்சிகளையும் கூடையில் ஒன்றாக தூக்கிக்கொண்டு காட்டின் நடுவே இருக்கும் பரந்த புல்வெளிக்கு செல்வாள்.
அங்கு சென்றதும் கூடையை கீழே வைத்து விட்டு தரை விரிப்பை விரித்து, நரி பொம்மை, கரடிபொம்மை, யானை பொம்மை என எல்லாவற்றையும் வரிசையாக அடுக்கி வைத்து விளையாடுவாள். பசி எடுக்கும் போது கொண்டு வந்த பழங்களையோ, திண்பண்டங்களையோ சாப்பிடுவாள். அங்கிருக்கும் செடிகளில் பூத்து குலுங்கும் வண்ண வண்ண பூக்களை பறித்து மாலையாக கட்டுவாள். கட்டிய மாலைகளை தன் பொம்மைகளுக்கு போட்டு அழகு பார்ப்பாள். சற்று நேரம் விளையாடி களைத்ததும், எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வீடு திரும்புவாள்.
அன்றும் அப்படித்தான் அகிலா தன் மரப்பாச்சிகளுடன் சுற்றுலா சென்றாள். தன் மரப்பாச்சி பொம்மைகளை விரிப்பில் வைத்து விட்டு அருகில் இருந்த பூச்செடிகளில் பூக்களை பறித்து கொண்டு திரும்பினாள். திரும்பி வந்தபோது அவளுடைய நரி பொம்மையை காணவில்லை. விரிப்பின் அடியில் உள்ளதா என்று தேடி பார்த்தாள். அங்கும் நரி பொம்மை இல்லை. கூடையின் உள்ளே உள்ளதா என்று தேடினாள் அங்கும் இல்லை. பூக்களை பறிக்க சென்ற இடத்தில் உள்ள புதரில் உள்ளதா என்றும் தேடினாள். எங்கு தேடியும் நரிபொம்மையை காணவில்லை. ஒருவேளை வீட்டில் இருந்து வரும் வழியில் எங்காவது தொலைந்துவிட்டதா என்று யோசித்தாள்.
அப்போது அங்கே இருந்த ஒத்தையடி பாதையில் சில காலடி தடங்கள் இருப்பதை அகிலா கவனித்தாள். அகிலா அந்த காலடி தடத்தை பின் தொடர்ந்து சென்றாள். புல்வெளியில் இருந்து அந்த பாதை நீண்டு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றது.
போகும் வழி எங்கும் தன் நரி பொம்மையை தேடிசெல்ல அவள் மறக்கவில்லை. ஆனால் அது எங்கேயும் தென்படவே இல்லை.
அப்போது அங்கு ஒரு குகை இருப்பதை கண்டாள் அகிலா. அந்த குகைக்குள் குட்டி நரி ஒன்று பதுங்கி இருந்ததை அகிலா கவனித்தாள். அந்த குட்டிநரியின் கையில் அவளது நரி பொம்மை இருந்ததை பார்த்தாள்.
‘ஹேய் நரி அது என்னோட பொம்மை. நீ ஏன் எடுத்துட்டு வந்த? இந்த பொம்மையை காணோம்னு இவ்ளோ நேரமா நான் தேடிட்டு இருந்தேன் தெரியுமா?’ என்று குட்டி நரியிடம் சொன்னாள் அகிலா.
குட்டி நரியோ அந்த பொம்மையை அகிலாவிடம் கொடுக்காமல் அதனை இறுக அணைத்துக் கொண்டது.
“எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு. நான் இந்த நரி பொம்மையை வெச்சுக்கட்டுமா” என்று அகிலாவிடம் கேட்டது குட்டி நரி.
“சரி நீயே வெச்சிக்கோ” என்று சொன்னாள். அதன் பின் அவளுக்கு ஒரு சந்தேகம் வந்தது.
“இந்த குட்டி வயசுல நீ ஏன் தனியா இருக்க? உன்னோட அம்மா எங்க?” என்று நரியிடம் கேட்டாள் அகிலா.
“அது வந்து.. அது வந்து…” என்று பதில் தெரியாமல் தவித்தது குட்டி நரி. அந்த நரியைப் பார்க்க அகிலாவுக்குப் பாவமாக இருந்தது.
‘அம்மா இல்லைனா நாம என்ன பண்ணுவோம்’ என்று ஒருநிமிடம் யோசித்தாள். பின்னர் அந்த நரியைத் தனியே விட்டுச் செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.
“ஏ நரி, வா, உன்னோட அம்மா எங்க இருக்காங்கன்னு தேடிப் பார்க்கலாம்” என்று கூறினாள் அகிலா. நரியும் “சரி” என்றது. பிறகு நரியை காட்டிற்குள் கூட்டிச் சென்றாள் அகிலா.
ஓவ்வொரு இடமாகத் தேடினாள். ஒரு குகைக்குள் ஒரு கரடி இருந்தது. அதன் அருகில் புல்வெளியில் கூட்டமாக முயல்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அகிலா அவற்றிடம் அம்மா நரியைப் பற்றி விசாரித்தாள். ஆனால் அம்மா நரி எங்கு உள்ளது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
அகிலாவுக்கு இப்போதும் நரியை தனியே விட்டுச் செல்ல விருப்பம் இல்லை. அகிலாவுடன் சேர்ந்து மற்ற விலங்குகளும் அம்மா நரியைத் தேடின.
இப்போது சூரியன் மெல்ல மறைய ஆரம்பித்தது. இருள் சூழ்ந்தது. அவர்கள் நடந்து நடந்து வெகு தூரம் வந்தடைந்ததை உணர்ந்தாள் அகிலா.
திடீரென தூரத்தில் பச்சை நிற விளக்கு ஒன்று மின்னுவதைக் கண்டாள் அகிலா. அதைப் பார்த்ததும் அகிலா அதே இடத்தில் பயந்து நின்றாள். குட்டி நரியோ அந்த விளக்கொளியை நோக்கி வேகமாக ஓடியது.
‘ஏ குட்டி நரி நில்லு. நான் சொல்றத கேளு…” என்று உரக்கக் கத்தினாள் அகிலா. அப்போது அந்த விளக்கொளி அருகில் நெருங்கி வருவதை உணர்ந்தாள் அகிலா.
பக்கத்தில் வந்ததும், அந்த பச்சை நிற ஒளி அம்மா நரியின் கண்களில் இருந்து வந்ததை அறிந்து கொண்டாள் அகிலா. அம்மா நரியும் குட்டி நரியும் கட்டிப்பிடித்து ஒன்று சேர்ந்துவிட்டன. எல்லா விலங்குகளும் கைதட்டி ஆரவாரம் செய்தன.
அம்மா நரியும் குட்டி நரியும் ஒன்றாக வந்து அகிலாவுக்கு நன்றி தெரிவித்தன. அகிலாவின் நரி பொம்மையையும் அவளிடம் திருப்பிக் கொடுத்தது குட்டி நரி.
இப்போது தான் அகிலாவுக்கு அவளின் அம்மா நியாபகமே வந்தது.
“ஐயயோ, என்னோட அம்மா என்னைத் தேடுவாங்களே” என்று யோசித்தபடியே சுற்றிமுற்றி பார்த்துகொண்டு இருந்தாள்.
“வீட்டுக்கு எப்படி போகணும்னு தெரியலையே” என்று சொல்லி பயந்தாள். காட்டிற்குள் வெகுதூரம் வந்ததால், வீட்டிற்கு செல்லும் வழி தெரியாமல் தவித்தாள் அகிலா.
“என்ன அகிலா என்ன யோசிக்கிற?” என்று அகிலாவிடம் கேட்டது அம்மா நரி.
“எந்த வழியா போனா எங்க வீடு வரும்னு தெரியல” என்று சோகமாகக் கூறினாள் அகிலா.
“அதுக்கென்ன நான் உன்னக் கூட்டிட்டு போறேன்” என்று சொல்லி அம்மா நரி முன்னே சென்றது. அதன் பின்னால் அகிலாவும், குட்டி நரியும், மற்ற விலங்குகளும் பின்தொடர்ந்து சென்றன.
ஒரு வழியாக வீடுவந்து சேர்ந்தாள் அகிலா. குட்டி நரியும், அம்மா நரியும் அகிலாவுக்கு விடைக்கொடுத்து காட்டிற்குள் ஓடி மறைந்தன.
அம்மா அவளுக்காக வீட்டு வாசலில் காத்திருந்தார்.
“ஏன் அகிலா இவ்ளோ நேரம்? எங்க போன? இருட்டிடுச்சி பாரு..” என்று கேட்டுக்கொண்டே அகிலாவை உள்ளே அழைத்துச் சென்றார் அவளின் அம்மா.
இரவு உணவை சாப்பிட்டபடியே காட்டில் நடந்தவற்றை எல்லாம் அம்மாவிடம் சொன்னாள் அகிலா.
“ஓ! குட்டி நரிய அம்மா நரிகிட்ட விட்டுட்டு வரத்தான் இவ்ளோ நேரம் ஆயிடுச்சா. இப்போ அந்தக் குட்டி நரியும் அதோட அம்மா நரியோட நிம்மதியா தூங்கும்ல” என்று சொல்லிக்கொண்டே அகிலாவைத் தூங்க வைத்தார் அவளின் அம்மா.
அன்றிலிருந்து அகிலா காட்டிற்குள் விளையாட வரும்போது, அவளுடன் விளையாட நரிகளும், முயல்களும், கரடியும் தவறாமல் வந்துவிடும்.
– தீபா சிந்தன்