மாணவர்களிடம் சென்று சேர்ந்த பாடக் கருத்துக்கள் எந்த அளவுக்கு அவர்களது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன?
மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது?!
என்பனவற்றை மதிப்பீடு செய்வதற்கே மதிப்பீட்டு முறைகள் உருவாக்கப்படுகின்றன.
கல்வியில் நவீனமயமாக்கம்
கல்விக் கொள்கைகள் மாறிவரும் சமூகச் சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றம் கண்டு வருகின்றன.
கல்விக் கொள்கைகள் மாற்றம் அடையும்போது, அதற்கு ஏற்றாற்போல் கலைத்திட்டமும் நவீனமாகி வருகிறது. கலைத்திட்டத்தில் வந்து சேரும் புதியபுதிய கலை அறிவியல் கருத்துக்கள் அனைத்தையும் மாணவர்களின் பருவத்திற்கு ஏற்றவாறு வழங்குவதற்கு பாடத்திட்டங்களும் காலத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன.
பாடப்புத்தகங்களின் பரிணாமம்
அந்தக் காலத்தில் பாடப்புத்தகங்கள் கருப்பு-வெள்ளை நிறத்தில் மட்டுமே இருந்தன. படங்கள் அரிதாகவே இடம்பெற்றன; அதுவும் கையால் வரையப்பட்டவையாக இருக்கும். தற்போது பாடப்புத்தகங்களில் வண்ணப் படங்கள் இடம்பெறுகின்றன. பாடப்புத்தகங்கள் சார்ந்த கருத்துக்களைக் காணொளி வடிவில் காண QR கோடு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆக, மாணவர்களுக்குத் தேடல் இருந்தால் அவர்களின் கைக்கு எட்டும் தொலைவிலேயே அனைத்துப் பாடக் கருத்துகளையும் பல்வேறு வடிவங்களில் கொண்டு வந்து சேர்க்கும் பெரும் பணியை செய்ய வல்ல நவீனப்படுத்தப்பட்ட பாட புத்தகங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. அநேகமாக பிற மாநிலங்களில் இவ்வளவு நவீனமயமாக்கம் இல்லை.
“மணற்கேணி” செயலி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடம் சார்ந்த காணொளிகளைப் பார்க்கும் வகையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆக, பாடப்புத்தக வடிவமைப்பிலும், அதற்கான நவீன கற்பித்தல் துணைக்கருவிகளிலும் (Innovative Supporting Tools) தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது என்றால் மிகையில்லை.
கற்பித்தல் முறைகளின் மாற்றம்
எந்தப் பாடமாக இருந்தாலும் “விரிவுரை முறையை (Lecture Method) ஒருபோதும் கைவிடமாட்டோம்” என்று பிடிவாதமாக இருந்த கற்பித்தல் முறை தற்போது மலையேறிப் போய்விட்டது.
தற்போதுள்ள கற்பித்தல் முறைகள் நவீனமாகவும் பன்முகத் தன்மை கொண்டதாகவும் உள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
ஆசிரியர்கள் நடனம், பாடல், பொருத்தமான காணொளிகள், படங்கள், பவர்பாயிண்ட் விளக்கக்காட்சிகள் போன்ற நவீன முறைகளைக் கொண்டு கற்றல்-கற்பித்தல் செயல்முறையை உயிரோட்டமாகக் கொண்டு செல்கின்றனர்.
மதிப்பீட்டு முறைகளின் மாறாமை
ஆக, கல்வியமைப்பில் உள்ள ஐந்து அடுக்குகளும் (கொள்கை, பாடத்திட்டம், கற்பித்தல் முறை, பாடப்புத்தகம், மதிப்பீடு) காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இன்றுவரை பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல், பழைய முறையே மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தப்படுகிறது.
தேர்வு, பேனா, பேப்பர், மதிப்பெண்கள் எனும் இந்த முறை மட்டும் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து கொண்டே வருவது வருத்தத்திற்கு உரியதாக இருக்கிறது.
ஆனால் பாருங்கள், இந்த அதரப் பழசான தேர்வு முறையை நாம் எவ்வளவு நவீனமயமாக நடத்தி வருகிறோம்!
முன்பெல்லாம்:
- மாணவர்களின் பெயர்பட்டியல் தயாரிப்பது ஒரு பெரிய வேலையாக இருந்தது (பத்தாம் வகுப்பு சான்றிதழில் இடம்பெறும் பெயர் என்பதால்).
- பெயர்பிழைகளைச் சரிசெய்வது ஒரு மாபெரும் சிக்கலாக இருந்தது.
- ஹால்டிக்கெட்டுகளில் புகைப்படங்கள் ஒட்டி, ஆள்மாறாட்டம் தவிர்க்கும் வகையில் தேர்வுகளை நடத்த வேண்டியிருந்தது.
- மாணவர்களை அறைவாரியாகப் பிரித்து அமரவைத்து, தேர்வு எழுதவைத்து, பேப்பர்களைப் பெற்று அடுக்கி, மதிப்பீட்டு மையத்துக்கு அனுப்புவது ஒரு சிக்கலான, பொறுப்புமிக்க, தலைவலியூட்டும் பணியாக இருந்தது.
தற்போது:
- ஒவ்வொரு மாணவரின் புகைப்படமும் தேர்வுப் பேப்பரிலேயே அச்சிடப்படுகிறது.
- பேப்பர் மாறிப் போவதற்கோ ஆள்மாறாட்டம் செய்வதற்கோ வாய்ப்பே இல்லை.
- தேர்வு நடத்தும் முறை முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்டு, எந்தச் சிறிய தவறுக்கும் இடமின்றி சிறப்பாக நடத்தப்படுகிறது.
நவீன மதிப்பீட்டு முறையின் குறைபாடுகள்
இவ்வளவு நவீனமயமாக்கப்பட்ட மதிப்பீட்டு முறையில் என்ன பிரச்சினை இருக்கக்கூடும் என நீங்கள் நினைக்கலாம்.
- ஒரே வாய்ப்பு: மாணவர்கள் பன்முகக் கற்றல் முறைகளில் கற்றாலும், அவர்களின் புரிதலை வெளிப்படுத்த ஒரே வாய்ப்பு (இறுதுத் தேர்வு) மட்டுமே உள்ளது. அதுவும் பேப்பர் மற்றும் பேனாவுடனே முடிந்து போகிறது.
- மாற்றுத்திறன் மாணவர்கள்: இவர்களைத் தேர்வு முறைக்குள் உள்ளடக்குவது ஒரு பெரும் சவாலாக உள்ளது. “சொல்வதை எழுதுபவர்” (scribe) எனும் ஆசிரியரை நியமிப்பதன் மூலம் மாணவர்களுக்கும் தேர்வுக்கும் இடையிலான அந்த இடைவெளி ஓரளவுக்குத்தான் சரிசெய்யப்படுகிறது.
- மனப்பாட முறை: 90% தேர்வுகள் பாடப்பொருளின் நுண்ணறிவைச் சோதிப்பதற்குப் பதிலாக மனப்பாடத்தையே சோதிக்கின்றன.
உணவின் சுவையை உணராமல், அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கும் கொண்டவர்களைப் போல, மாணவர்கள் பாடக்கருத்துகளைப் புரிந்து கொள்ளாமல் அள்ளிவிழுங்கி, தேர்வுகளில் எழுதித் தள்ளுகிறார்கள். இந்த அவலநிலை மாற வேண்டும். “கரண்ட் எப்படிப்பா தயார் பண்றாங்க?” என்றால் திணறும் ஒரு நல்ல மதிப்பெண் பெற்ற மாணவரிடம், “ஏசி மின்னியற்றி எவ்வாறு வேலை செய்கிறது?” என்று கேட்கப்பட்டால் மூச்சுவிடாமல் விளக்குகிறார்.
ஒரு வெளிச்சக் கீற்று தென்படுவது போல, தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீட்டு முறை (Continuous and Comprehensive Evaluation – CCE) எனும் ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அது ஓரளவுக்காவது தனிப்பட்ட வகுப்பறை செயல்பாடுகள் மற்றும் தொடர் மதிப்பீட்டு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய மதிப்பீட்டு முறையைக் கொண்டிருந்தது. அங்கே மதிப்பெண்களுக்குப் பதிலாக தரப்படுத்தப்பட்ட கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறை படிப்படியாகப் பத்தாம் வகுப்பு வரை விரிவாக்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் எட்டாம் வகுப்புக்கு மேல் இம்முறையை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பதால் ஏமாற்றமே மிஞ்சியது.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இம்முறை எட்டாம் வகுப்பில் இருந்து பின்வாங்கி, இறுதியில் ஏழாம் வகுப்பில் மட்டுமே காணப்படுகிறது.
ஆக, எல்லாவற்றையும் எண்களாகவே பார்த்துப் பழகிய பெற்றோர்களுக்கு, மதிப்பீடு என்பது எண்களால் குறிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற பிடிவாதம் நிலவுகிறது. மேலும், மதிப்பீட்டுக்கு எண்கள் வழங்கினால் ஒப்பீடு செய்வது எளிதாக இருக்கும் என்பதும் ஒரு காரணமாக உள்ளது.
“உங்கள் மகன் நன்றாகப் படிக்கிறான்” என்பதுபோன்ற ஒரு பொதுவான பதில் பெற்றோர்களுக்குத் திருப்தி அளிப்பதில்லை. “என் மகன் யாரைவிட எல்லாம் சிறப்பாகப் படிக்கிறான்?” என்பதுபோன்ற ஒப்பீட்டு மதிப்பீட்டு முறைக்கே அவர்கள் பழக்கப்பட்டுள்ளனர். வர்ணாசிரம அடுக்குமுறையைக் கொண்ட இந்தச் சமூகம், எல்லோருக்கும் ஒரே மாதிரியான தரப்படுத்தப்பட்ட கிரேடுகளை வழங்கும் முறையை ஏற்றுக்கொள்வது சற்றுக் கடினமாகவே உள்ளது.
இந்த மதிப்பீட்டு முறை, எல்லோரும் போற்றும் பின்லாந்தின் கல்விமுறையில் எவ்வாறு உள்ளது? பின்லாந்தைப் பொறுத்தவரை, அடிப்படை வகுப்புகளுக்குத் தேசிய அளவிலான கட்டாயத் தேர்வுகள் எதுவும் இல்லை. சில இடைநிலை வகுப்புகளுக்குக் கணிதம், ஆங்கிலம், ஸ்வீடிஷ் போன்ற பாடங்களுக்குத் தேசியத் தேர்வுகள் இருந்தாலும், அவற்றை எழுத வேண்டுமா வேண்டாமா என்பதை ஆசிரியர்களின் முடிவிற்கே விட்டுவிடுகின்றனர்.
அங்கு, தங்கள் மாணவர்களின் புரிதலை அளக்கும் மதிப்பீட்டு முறைகளை ஆசிரியர்களே உருவாக்கும் சுதந்திரம் உள்ளது. மாணவர்கள் முதன்முதலாக எழுதும் தேசிய அளவிலான தேர்வு என்பது மேல்நிலை வகுப்புகளின் இறுதிக் கட்டத்தில் மட்டுமே நடைபெறுகிறது. கீழ்நிலை வகுப்புகளுக்கு WILMA எனப்படும் ஒரு இணையவழி மூலமாகத் தொடர் மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இங்கே EMIS போர்ட்டல் மூலம் அவ்வப்போது இத்தகைய தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அடுத்ததாக, எல்லோரும் பாராட்டும் தென்கொரியாவின் கல்விமுறையில், மதிப்பீடு என்பது மாணவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை (Holistic Development) கருத்தில் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. வகுப்புத் தேர்வுகள், திட்டப்பணிகள், பாடத்தொடர்பான செயல்பாடுகளில் பங்கேற்பு போன்றவற்றுக்கெல்லாம் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
தென்கொரியாவில், இடைநிலை வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்பிலும் இடைப்பட்ட தேர்வுகளும் ஆண்டுத் தேர்வுகளும் உள்ளன. அங்கு தரப்படுத்தப்பட்ட கிரேடு முறைதான் மதிப்பீட்டிற்குப் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு தரவரிசை வழங்கப்படுவதில்லை.
கனடா போன்ற முன்னணி நாடுகளில், கல்விக் கொள்கைகள் கூட அந்தந்த மாகாணங்களின் தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்வான தன்மையுடன் அமைகின்றன. மதிப்பீட்டு முறைகளையும் மாகாணங்களே தீர்மானிக்கின்றன.
இங்கே, நம் மக்கள் எண்களைக் கண்டு மயங்கிக் கிடக்கும் அந்த அறியாமையிலிருந்து வெளியே வர வேண்டும். மழலையர் பள்ளி வகுப்புகளிலேயே எண்களையும் தரவரிசைகளையும் நுழைப்பது ஒரு வன்முறையாகும். எல்லாவற்றையும் எண்களாகவே பார்க்கும் இந்தப் போக்கை மாற்ற வேண்டும். அதேபோல், எட்டு வகுப்புகள் வரை மாணவர்களுக்கு தரவரிசை வழங்கும் இந்த முறையையும் ஒழிக்க வேண்டும். இது மாணவர்களிடையே பெரும் பாகுபாட்டையும், பின்தங்கிய மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்துகிறது.
நம் சமூகச் சூழலில், பள்ளியின் இறுதி வகுப்புகளில் முழுமையாகக் கிரேடு முறையைப் பின்பற்றுவதில் ஒரு சிக்கல் உள்ளது. கல்வி நிறுவனங்கள் அரசு மற்றும் தனியார் என இருபெரும் பிரிவுகளாக உள்ளன. அரசு நடத்தும் நிறுவனங்களில் சேர்க்கை செய்வதற்கும், காலத்திற்கேற்ற பிரபலமான பாடங்களில் சேர்க்கை செய்வதற்கும் பெரும் போட்டி இருப்பதால், எண்களால் குறிக்கப்படும் மதிப்பெண்கள் இருந்தால்தான் தரவரிசை தயாரித்து மாணவர்களை முறையாகச் சேர்க்கை செய்ய முடியும்.
அதேநேரம், ஒரே ஒரு இறுதித் தேர்வு மட்டுமே ஒரு ஆண்டு முழுவதும் மாணவர் கற்ற திறனைச் சோதிக்கும் உரைகல்லாக இருப்பதை மாற்றி, ஆண்டு முழுவதும் நடைபெறும் வகுப்பறைச் செயல்பாடுகளை மதிப்பீட்டுப் புலத்தில் சேர்க்க முயற்சிக்கலாம். உதாரணமாக, பின்வரும் விடயங்களை முயற்சி செய்யலாம்:
- ஒவ்வொரு பாடப்பகுதியும் முடிந்ததும் அலகுத் தேர்வு நடத்தி அதை ஆவணப்படுத்தலாம்.
- பாடப்பகுதி சார்ந்த திறன்களை வளர்க்கும் வகையில், மாணவர்கள் தனியாகவோ குழுவாகவோ திட்டப்பணிகளைச் செய்து சமர்ப்பிக்க வழிகாட்டலாம்.
- பாடப்பகுதியிலிருந்து ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, மாணவர்கள் முழுமையாகத் தயாரித்து வகுப்பில் கற்பிக்கச் செய்யலாம்.
- ராஜபாளையத்தில் நடைபெற்ற தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் பாடகர் டி.எம்.கிருஷ்ணா அவர்கள், பாடப்பொருளைக் கலை வடிவில் மாற்றுதல் பற்றி விரிவாகப் பேசினார். பாடப்பொருள் சார்ந்த திறன்களை ஓவியம், நாடகம், பேச்சு, கைவினைப்பொருட்கள் மூலம் வெளிப்படுத்தி படைப்புகளைச் சமர்ப்பிக்கச் செய்யலாம்.
- முக்கியமாக நல்லொழுக்கம் சார்ந்த கூறுகளான நேரத்தைக் கடைப்பிடித்தல், வருகைப் பதிவு, ஒழுங்கான செயல்பாடுகள் போன்றவற்றை நட்சத்திர மதிப்பீட்டு முறையில் வகைப்படுத்தி, அவற்றுக்கேற்ப மதிப்பெண்கள் வழங்குவதையும் தொடர் மதிப்பீட்டில் சேர்க்கலாம்.
இதற்காக உள்கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டியதில்லை. மேற்கூறிய அனைத்து செயல்பாடுகளையும் மதிப்பெண்களாக ஆவணப்படுத்த EMIS தரவுத்தளம் பெரிதும் உதவியாக இருக்கும். ஏற்கனவே இந்தத் தளத்தில் மாணவர்களுக்குப் பருவம்தோறும் ஆன்லைன் தேர்வுகள் நடத்தும் வழக்கம் உள்ளதால், இருக்கும் கட்டமைப்பே போதுமானது.
அனைவருக்கும் தேர்ச்சி வழங்கும் முறை (இதில் ஆசிரியர்களின் செயல்திறனை அளவிட பாடச் சராசரி மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்), கிரேடு முறைக்குப் பதிலாக மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட தொடர் மற்றும் விரிவான மதிப்பீட்டு முறை (CCE based on marks instead of grade), மற்றும் நல்லொழுக்கம் சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கிய மதிப்பீடு போன்ற பல கூறுகளைப் பள்ளியின் இறுதி வகுப்பு மாணவர்களின் மதிப்பீட்டில் இணைத்துக்கொள்ளலாம்.
இது சார்ந்து ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை வல்லுநர்களிடமிருந்து இன்னும் பல கருத்துகளைப் பெற முடியும். எனவே, ஆசிரியர்களின் திறனை மதிப்பிடுவதற்கும், மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்கும், முற்றிலும் புதியதும் பன்முகத்தன்மை கொண்டதுமான ஒரு மதிப்பீட்டு முறை உருவாக்கப்பட வேண்டும்.
– ஜெயராஜ்.மு. (பள்ளித் தலைமை ஆசிரியர்)
மிகவும் சிறப்பான பார்வை. ஆம் ஆண்டு முழுவதும் கல்வி செயல்பாடுகள் இருக்கும்போது எல்லோருக்கும் பொதுவான தேர்வு என்பது இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் தொடர்வது என்பது மிகவும் முரணானது. கல்வியில் பரிணாம வளர்ச்சி நடக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மிகச் சிறப்பான இக் கட்டுரையை எழுதிய தலைமை ஆசிரியர் தோழர் ஜெயராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி!🙏
தங்களது பாராட்டுக்கு நன்றி சார்.
கற்றல் கற்பித்தலில் இருக்கும் பன்முகத்தன்மை தேர்வு முறைக்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஸ்கிரைப் என்கிற ஒன்று மட்டும் அல்லாமல் அவர்களாகவே செய்ய இயலும் பிரத்தியேக வழிமுறைகளையும் தேர்வு முறையில் இணைக்கலாம் என்றும் யோசித்தத விளைவு தான் இந்த கட்டுரை
மகிழ்ச்சிங்க தலைமை ஆசிரியரே… நல்ல கட்டுரை. மதிப்பீட்டு முறையில் வந்துள்ள மாற்றங்கள் போல தேர்வு முறைகளிலும் வர வேண்டும் என்று ஒவ்வொரு ஆசிரியரரும் குரல் கொடுக்கும் போது தேர்வு முறைகளில் மாற்றம் வரும் என நம்புகிறேன்.