அடர்ந்த காடு ஒன்றின், சூரிய ஒளியே நுழைய முடியாத இருண்ட பகுதியில் ஒரு கருங்குயில் வாழ்ந்து வந்தது.
சூரிய ஒளி புகாத அந்த இருண்ட வனத்தில், ஒரு பெரிய ஆலமரத்தின் கிளையில் அந்தக் கருங்குயில் எப்போதும் தனியாக அமர்ந்திருக்கும். ஆனால், அந்த கருங்குயிலுக்கோ சூரியனின் வெதுவெதுப்பான இளஞ்சூட்டை உணர வேண்டும் என்ற ஆசை இருந்தது.
பல நாட்களாக இதே யோசனையில் ஆழ்ந்திருந்ததால், அந்தக் கருங்குயில் பறப்பது எப்படி என்பதையே மறந்து போனது.
கருங்குயில் வாழ்ந்த காட்டின் அந்த பகுதிக்கு மற்ற பறவைகள் அவ்வளவாக வருவதில்லை. அவை அனைத்தும் காட்டின் உயர்ந்த மரங்களின் உச்சிக் கிளைகளில் ஒய்யாரமாகப் பறந்து திரிந்தன.
எப்போதாவது அந்தப் பறவைகள் கருங்குயிலையும் தங்களோடு பறந்து விளையாட வருமாறு அழைக்கும். ஆனால் கருங்குயிலோ, “எனக்குப் பறக்க விருப்பமில்லை” என்று கூறி, மற்ற பறவைகளுடன் பறந்து செல்வதை தவிர்த்தது.
பறக்க மறுத்த கருங்குயில், நாள் முழுவதும் ஆலமரக் கிளையிலேயே அமர்ந்து, சூரியனின் இளஞ்சூட்டை எப்படி உணர்வது என்ற யோசனையிலேயே மூழ்கியிருந்தது. பல நாட்களாகப் பறந்து திரியாததால், வானில் பறக்கும்போது இறக்கைகள் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்லும் அந்த உன்னதமான உணர்வைக் கூட கருங்குயில் மறந்துவிட்டது.
அன்று ஒரு நாள், காட்டிற்குப் புதிதாக மஞ்சள் நிற மைனா ஒன்று பறந்து வந்தது.
எங்கெல்லாம் அந்த மஞ்சள் மைனா பறந்து சென்றதோ, அங்கெல்லாம் தன் அழகான மஞ்சள் இறகுகளால் ‘மந்திர மகரந்தத் துகள்களை’த் தூவிச் சென்றது. அந்தத் துகள்கள் விழுந்த இடத்தில் எல்லாம் புதிய பச்சை நிற இலைகள் துளிர்த்தன.
பறந்து பறந்து அந்த மஞ்சள் மைனா, கருங்குயில் இருந்த ஆலமரத்தின் உச்சிக் கிளையில் வந்து அமர்ந்தது. மரத்தின் மேலிருந்து கீழே பார்த்தபோது, ஆலமரத்தின் பருத்த கிளையில் தனியே அமர்ந்து இருந்த கருங்குயிலை கண்டது.
உடனே, “ஓய்! இங்க பாரு, மேல பாரு” என்று மஞ்சள் மைனா கருங்குயிலைப் பார்த்து அழைத்தது.
ஆனால், கருங்குயிலோ மைனா அங்கே இருப்பதைக் கவனிக்கவே இல்லை. அது அழைத்ததும் இதன் காதில் விழவில்லை.
அன்று இரவு முழுவதும் மைனா அந்த ஆலமரத்தில் அமர்ந்தபடி இனிமையான பாடல் ஒன்றை முணுமுணுத்தது .
மஞ்சள் நிற மைனாவின் மென்மையான மெல்லிசை அந்தக் காடு முழுவதும் ஒலித்தது. ஆனால் கருங்குயிலோ வேறு யோசனையில் இருந்தது. அதனால் அதன் காதுகளில் மைனாவின் இனிமையான பாடல் கேட்கவே இல்லை.
மறுநாள் காலை, மஞ்சள் மைனா உச்சிக் கிளையிலிருந்து இறங்கி, கருங்குயிலுக்கு அருகே இருந்த கிளையில் வந்து அமர்ந்தது. அது பொறுமையாகக் காத்திருந்தது; அதற்கு எந்த அவசரமும் இருந்ததாகத் தெரியவில்லை.
முதல் நாள், கருங்குயில் மஞ்சள் மைனாவைக் கண்டுகொள்ளவில்லை.
இரண்டாம் நாள், கருங்குயிலுக்கு மஞ்சள் மைனாவின் மென்மையான பாடல் கேட்டது.
மூன்றாம் நாள், கருங்குயில் தன் தலையைச் சற்றே உயர்த்திப் பார்த்தது.
மைனாவின் மென்மையான பாடலும், அதன் மஞ்சள் நிற மந்திர மகரந்தத் துகள்களும் கருங்குயிலின் வாழ்வை வசந்தமாக்கின. நாட்கள் செல்லச் செல்ல, கருங்குயிலும் மைனாவும் ஒன்றாகத் தங்கள் நேரத்தைச் செலவழித்து மகிழ்ந்தன.
தன் மந்திர இறக்கையால் மைனா கருங்குயிலை மெல்ல அணைத்தது. அந்த நொடியில், கருங்குயில் சூரிய ஒளியின் வெதுவெதுப்பை உணர்ந்தது. இத்தனை நாட்களாகத் தான் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தத் தருணம் வந்தது. அதை நினைத்து கருங்குயில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
பல மாதங்களுக்குப் பிறகு, அன்றுதான் கருங்குயில் முதல்முறையாகப் பாடத் துவங்கியது. அன்றிலிருந்து மைனாவும் குயிலும் சேர்ந்து அந்த காட்டில் புதுவிதமான பல பாடல்களைப் பாடி மகிழ்ந்தன. அந்தப் பாடல்கள் அனைத்தும் நம்பிக்கையையும் புத்துணர்வையும் தூண்டுவதாக இருந்தன.
பின்னொரு நாளில், தன் இறக்கைகளை விரித்துக்கொண்டு வானில் பறக்கத் தயாரானது கருங்குயில்.
மைனாவுடன் சேர்ந்து பாடல்களைப் பாடியபடி, கருங்குயில் ஆலமரத்தின் உச்சிக் கிளைக்குப் பறந்து சென்றது. மேலே செல்லச் செல்ல சூரியனின் வெப்பமும், பச்சை வனத்தின் அழகும், பறந்து விரிந்த நீலவானின் வனப்பும் அதனை ஈர்த்தன.
கருங்குயிலுக்கு பறப்பது மிகவும் பிடித்திருந்தது. உயரப் பறக்க ஆரம்பித்தது. இப்போது கருங்குயிலும் மைனாவுடன் சேர்ந்து காடு முழுவதும் மந்திர மகரந்தத்தைத் தூவியபடி பறந்து சென்றது.
– தீபா சிந்தன்
மிகவும் அருமையான கதை. புதிய ஒளியை பாய்ச்சியது போன்று உள்ளது. மிக்க நன்றி தீபா சிந்தன் அவர்களே 🙏
சிறப்பான சிறார் கதை 😍💐