இலக்கியம்சிறார் இலக்கியம்

அணில்குட்டிக்கு பள்ளி திறந்தாச்சி (சிறார் கதை) – தீபா சிந்தன்

புள்ளி

இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்றுதான் பள்ளி மீண்டும் திறக்கிறது. காலை ஆறு மணி ஆனது. அப்போது அருள் என்கிற அணில் மெல்லக் கண் விழித்தான்.

பின்பு பல் துலக்கி, குளித்து முடித்து, காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“சீக்கிரம் சாப்பிட்டு முடி அருள். இந்த இட்லியைச் சாப்பிட்டதும் வேகமாகப் பள்ளிக்குப் போகணும்” என்றார் அருளின் அம்மா.

ஆனால் அருள் ஒவ்வொரு வாயாக மெதுவாக மென்று தின்று கொண்டிருந்தான். 

“பள்ளிக்குப் போய் ரொம்ப நாள் ஆச்சு இல்லையா? என்னவெல்லாம் கொண்டு போகணும்னு நினைவிருக்கா அருள்?” என்று கேட்டார் அருளின் அம்மா.

“ஆமாம்மா. நல்லா ஞாபகம் இருக்கு. மதிய உணவிற்கு சம்படம், தண்ணீர் பாட்டில், இடைவேளையில் சாப்பிட ஏதாவது பழங்கள் அல்லது தின்பண்டங்கள்” என்று தனக்குத் தெரிந்த ஒவ்வொன்றாகக் கூறினான் அருள்.

“நல்லா ஞாபகம் வச்சிருக்கியே” என்று அம்மா வியப்புடன் கேட்டார்.

“அம்மா, சாப்பாட்டைப் போய் நான் மறப்பேனா அம்மா? என்ன கேள்வி இது?” என்று புன்முறுவலோடு சொன்னான் அருள்.

அருள் சொன்ன எல்லாவற்றையும் ஒரு ஸ்பைடர்மேன் பையில் எடுத்து வைத்தார் அருளின் அம்மா. அருளும் ஒருவழியாகச் சாப்பிட்டு முடித்தான்.

“சரி வா அருள். போகலாம்” என்று அம்மா அழைத்தார்.

அப்பாவுக்கு விடை கொடுத்துவிட்டு அம்மாவுடன் பள்ளிக்குப் புறப்பட்டான் அருள். 

அம்மாவும் அருளும் வீட்டிலிருந்து சிறிது தூரம்  நடந்தனர். அங்கே ஒரு ஓடை இருந்தது. ஒரு பாலத்தின் மீது நடந்து அந்த ஓடையைக் கடந்தனர். 

அப்போது தூரத்தில் அருளின் பள்ளி தெரிந்தது. பள்ளியைப் பார்த்ததும் பயந்துபோய் அருள் அங்கேயே நின்றான்.

“அம்மா, அம்மா” என்று தயங்கியபடி அம்மாவை அழைத்தான்.

“வாடா அருள். ஏன் இங்கேயே நிற்கிறாய்? ஏற்கெனவே நேரம் ஆகிவிட்டது” என்றார் அருளின் அம்மா.

“அது வந்து… அது வந்து… எனக்கு வயிறு வலிக்கிற மாதிரி இருக்கு அம்மா. நாம வீட்டுக்குத் திரும்பிப் போயிடலாமா?” என்று அம்மாவிடம் கேட்டான் அருள்.

அருளுக்கு அருகில் வந்தார் அம்மா. அவனை மெல்லத் தடவிக் கொடுத்தார். அருளைத் தூக்கி ஒரு மரக்கட்டையில் உட்கார வைத்தார்.

அருளைத் தடவிக்கொண்டே, “ரெண்டு மாசத்துக்கு அப்புறம் இன்னிக்கிதான் திரும்பவும் பள்ளிக்குப் போகப் போறோம். அதான் உனக்கு படபடப்பா இருக்கு. நீ பயப்படாத. கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும்” என்று ஆறுதல் சொன்னார் அம்மா.

“ஆனா என்னோட மலர் டீச்சர் இப்போ புது வகுப்புல இருக்க மாட்டாங்களே! புது வகுப்பில் புது டீச்சர்தான் இருப்பாங்க” என்றான் அருள். 

“அது மட்டுமில்ல. என்னோட வகுப்பில் இப்போ யாரையும் எனக்குத் தெரியாதே. என்னோட நண்பர்கள்லாம் இந்த வகுப்பில் இருப்பாங்களா என்றும் எனக்குத் தெரியாது” என்று அழுதபடி சொன்னான் அருள்.

“இதுக்குப்போய் ஏன் அழுவுற அருள்? புது டீச்சர் கூட உனக்குப் பிடிச்ச மாதிரி இருக்கலாம். உன் நண்பர்களும் உன்னோட புது வகுப்பில் படிக்கலாம். முதல் நாள் பள்ளிக்குப் போய் பாத்தாதான தெரியும்?” என்றார் அருளின் அம்மா. 

ஆனாலும் அருள் சமாதானம் ஆகவில்லை.

“சரி அருள். பயப்படாம இரு. நான் வேணும்னா உன்னோட புது டீச்சர் வர்ற வரைக்கும் உன்னோடவே இருக்கேன்” என்று கூறி அருளைச் சமாதானம் செய்தார் அருளின் அம்மா. 

“ஆனால் பள்ளியில் மணி அடிச்சதும் நீங்க கிளம்பிடுவீங்களே” என்று சொல்லி அம்மாவின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொண்டான் அருள். 

“அருள், புதுசா ஒன்னு செய்யும் போது நமக்கு பயம் வரும்தான். நம்ம பழைய வீட்டில இருந்து புதுவீட்டுக்கு மாறி வந்தப்ப நீ இப்படி தான் பயந்த. உனக்குத் தம்பி பாப்பா பிறந்தப்போவும் நீ இப்படி தான் பயந்த. ஆனா, நீ பயந்த மாதிரி இது எதுவுமே உனக்குப் பிரச்சினையா இல்லையே. அது எல்லாமே உனக்கு நல்ல அனுபவமா தான இருந்திச்சி. இதுவும் அப்படி ஒரு புது அனுபவமா இருக்கும் பாரு” என்று அருளுக்குத் தைரியம் கூறினார் அம்மா.

ஆனாலும் அருள் சமாதானம் ஆகவில்லை.

“ஓ! இன்னமும் உனக்கு பயமா தான் இருக்கா. அப்போ, இந்தா இது என்னுடைய கைக்குட்டை. இதை நீ வெச்சிக்கோ. எப்போலாம் உனக்கு தனியா இருக்கிற மாதிரி தோணுதோ, அப்போ இந்த கைக்குட்டைய கையில இறுக்கமா புடிசிக்கோ. நான் உன் பக்கத்துல இருக்கிற மாதிரி நினைச்சிக்கோ. எல்லாம் சரி ஆகிடும்” என்று அம்மா அருளிடம் ஆறுதலாகப் பேசினார். அப்படி பேசிக்கொண்டே நடந்து இருவரும் பள்ளிக்கு வந்து சேர்ந்தனர்.

பள்ளியின் மைதானத்தில் எல்லா விலங்குகளும் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக நின்று இருந்தன. எல்லா விலங்குகளும் வந்த பின்னர் அவர்கள் அனைவரும் வரிசையாக அவரவர் வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தனர். 

அருளும் அம்மாவுக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பினான். பிறகு, ஓடிவந்து ஒன்றாம் வகுப்பு வரிசையில் வந்து நின்றான்.

அருளின் வகுப்பு விலங்குகளும் வரிசையாக வகுப்பறைக்குச் சென்றன. ஒன்றாம் வகுப்பின் வகுப்பாசிரியர் வீணா, அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.  அதன்பின் ஒவ்வொருவருக்கும் வீணா டீச்சர் ஒரு சின்னம் வழங்கினார். அருளுக்கு யானையையோ அல்லது டிராகனையோ தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருள் டிராகனைத் தனது சின்னமாகத் தேர்ந்தெடுத்தான்.

“சரியான தேர்வு” என்று அருளைப் பாராட்டினார் ஆசிரியர் வீணா. அந்தச் சின்னம் இருக்கும் ஆணியில் அருளின் பையைத் தொங்கவிட்டு, வகுப்பிற்கு உள்ளே வந்து அமருமாறு சொன்னார் ஆசிரியர்.

முதலில் ஒவ்வொருவராகத் தங்களை வகுப்பில் அறிமுகப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் எல்லோருடைய கண்களையும் மூடச் சொன்னார் ஆசிரியர். ஒருவர் மட்டும் ஏதாவது பேச வேண்டும். மற்றவர்கள் கண்களைத் திறக்காமல், பேசுவது யாரென்று கண்டுபிடிக்க வேண்டும். முதலில் அவர்கள் இந்த விளையாட்டை விளையாடினார்கள். மதன் என்ற முயல் பேசியதும், அது மதன்தான் என்று அருள் சரியாகக் கண்டுபிடித்தான். அதே போல, கவின் என்ற கரடியையும் கண்ணை மூடிக்கொண்டே கண்டுபிடித்தான் அருள். 

காலை இடைவேளை வந்தது. அவர்கள் அனைவரும் கொண்டு வந்த தின்பண்டங்களையும், பழங்களையும் பகிர்ந்து சாப்பிட்டனர்.

மீண்டும் வகுப்பில் நிறங்களையும், வடிவங்களையும் கண்டுபிடிக்கும் விளையாட்டுகளை விளையாடினர். 

பின் மதிய உணவு சாப்பிடும் நேரம் வந்தது. மதனுடனும், கவினுடனும் சேர்ந்து உணவு உண்ணும் அறைக்குச் சென்றான் அருள். அனைவரும் வேகமாகச் சாப்பிட்டுவிட்டு மைதானத்திற்கு விளையாட ஓடினர். 

விலங்குகள் எல்லாம் சேர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டு விளையாட முடிவு செய்தனர். அருளின் அம்மா அவனுக்காக கொடுத்து அனுப்பிய கைக்குட்டையை வைத்து  கண்களை இறுக கட்டிக்கொண்டான் அருள். முதலில் அருள் யாரை தொடுகிறானோ அவர்கள் அடுத்த ஆட்டத்தில் கண்களை கட்டிக்கொண்டு விளையாட்டை தொடர வேண்டும். இப்படியாக உணவு இடைவேளை முடிந்தது. பின்னர் சோர்வாக வகுப்பிற்கு சென்று அமர்ந்தனர்.

“அப்புறம், முதல் நாள் வகுப்பு எப்படி இருந்தது? பள்ளி உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கா? நீங்க எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கீங்களா?” என்று ஆசிரியர் வீணா கேட்டார். 

“ஆமா டீச்சர்” என்று அனைவரும் ஒரே நேரத்தில் பதில் கூறினர்.

‘ஆம்’ என்று சொன்னவர்களில் அருளும் ஒருவன். மாலை பள்ளி முடிந்து மணியடித்தது. அருளின் அம்மா அவனுக்காகப் பள்ளி வாசலில் காத்துக் கொண்டு இருந்தார். 

பள்ளியில் நடந்தவற்றை ஒன்றுவிடாமல் அம்மாவிடம் ஒப்பித்தான் அருள். அம்மாவும் அருளின் கதைகளைத் தலையசைத்தபடி கேட்டுக்கொண்டே இருவரும் வீடு நோக்கி நடந்தனர். 

மறுநாள் காலையில் பள்ளி செல்லச் சுறுசுறுப்பாகத் தயாரானான் அருள்.

– தீபா சிந்தன்

Leave a Reply