இலக்கியம்சிறார் இலக்கியம்

அமீராவும் ஆலிவ் மரமும் (சிறார் கதை) – தீபா சிந்தன்

உச்சநீ

அன்று காலை, அமீரா எழுந்ததும் முதன்முதலில் பார்த்தது, கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மேசையின் மீது இருந்த ஒரு ஆலிவ் விதையைத் தான்.


“அம்மா! அம்மா! இந்த ஆலிவ் விதையை யார் இங்கே வைத்தார்கள்?” என்று கேட்டுக்கொண்டே, தன் அறையில் இருந்து வெளியே வந்தாள் அமீரா.

அமீராவின் அம்மாவும், தாத்தா முஹமதும் திண்ணையில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தனர். 

அமீரா கையில் வைத்திருந்த ஆலிவ் விதையைப் பார்த்ததும், “இதுக்காகவா எழுந்தவுடன் ‘அம்மா, அம்மா’ என்று ஓடிவந்தாய்?” என்று கேட்டார் அம்மா.

“ஆமாம்மா. இது எப்படி வந்தது?” என்று கேட்டாள் அமீரா.

“இது ஆலிவ் மரங்கள் காய்க்கும் காலம்” என்றார் தாத்தா முஹமது.
“ஓ, அப்படியா! ஆலிவ் மரங்களுக்கும் நேரம், காலம் எல்லாம் தெரியுமா?” என்றாள் அமீரா.

“அதுசரி, இந்த ஆலிவ் விதையைப் பற்றி உங்களுக்கு நிறைய கதைகள் இருக்கும் போலிருக்கே தாத்தா!” என்று கேட்டுக்கொண்டே, அம்மாவின் அருகில் அமர்ந்தாள் அமீரா.

அப்போது, காபி குடித்துக் கொண்டிருந்த அமீராவின் தாத்தா முஹமது, “ஆமா அமீரா, ஆலிவ் விதையைப் பற்றி சொல்ல என்னிடம் நிறைய கதைகள் இருக்குதான்” என்றார்.
அதற்கு அமீரா, “சொல்லுங்கள், தாத்தா! ஆலிவ் விதையைப் பற்றிய கதையை நானும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றாள்.

தாத்தா கதையைத் தொடங்கினார்:
“உன்னைப் போன்ற ஒரு சின்னக் குழந்தையாக நான் இருந்தபோது, நாங்கள் இந்த ஊரில் வசிக்கவில்லை. எங்கள் குடும்பம் வேறு ஒரு ஊரில் வாழ்ந்தது. அந்த ஊர், இந்தக் கடலையும் மலையையும் தாண்டி, இந்தக் கண்டத்தின் மறுபுறத்தில் இருந்தது.”

“அவ்வளவு தூரமா இருந்ததா, தாத்தா?” என்று ஆச்சர்யமாகக் கேட்டாள் அமீரா.

“ஆமாம், அமீரா. இயேசு நாதர் பிறந்ததாக நம்பப்படும் ஊருக்கு அருகில் இருந்தது எங்கள் பூர்வீகம். என் பெற்றோரும் சகோதரர்களும் நானும் அங்கே குடும்பமாக வாழ்ந்தோம்.”

அமைதியாகக் கதை கேட்டுக் கொண்டிருந்தாள் அமீரா.

“ஒரு நாள் இரவு, திடீரென எங்கள் மீது தாக்குதல் நடந்தது. எங்கள் வீடுகள்மீது குண்டுகள் போடப்பட்டன. எங்கள் பள்ளிகள் புல்டோசர்களால் தரைமட்டமாக்கப்பட்டன. எங்கள் வீடுகளுக்குள் வாழவே பயமாக இருந்தது. அதனால், நாங்கள் எங்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்கள் மட்டுமல்ல; எங்களைப் போல பல குடும்பங்களும் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறினர்.”

அதைக் கேட்டதும் அதிர்ச்சியாகத் தாத்தாவையே பார்த்தாள் அமீரா.

“அந்தச் சூழலில், எங்கள் வீட்டிலிருந்து எதையும் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆளுக்கொரு சிறிய கைப்பையுடன் மட்டுமே ஊரை விட்டு வெளியேறினோம்.”

“ஒரே ஒரு கைப்பையா, தாத்தா? அதில் எப்படி எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல முடியும்?”

“எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல முடியவில்லை, அமீரா. ஆனால், என் அம்மா ‘தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்’ என்று சொன்னார்கள். நான் ஒரு கைப்பையில் மாற்று உடைகள், வழியில் சாப்பிட ஒரு பிரெட் துண்டு, பள்ளிக்கு கொண்டுசெல்லும் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை எடுத்துக்கொண்டேன். அவற்றுடன் நான் வீட்டை விட்டு வெளியேறினேன். எங்கள் கிராம மக்கள் அனைவரும் ஒவ்வொருவரும் ஒரு பையுடன் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் எங்கள் வீட்டு முற்றத்தில் இருந்த பெரிய ஆலிவ் மரத்திற்கு அருகில் கூடினர். பிறகு, எங்கு செல்வது என்று முடிவு செய்து, ஒருவர் பின் ஒருவராக மேற்கு நோக்கிப் பயணம் செய்தோம்.”

“அந்த ஆலிவ் மரத்தில் ஒரு ஊஞ்சல் கட்டப்பட்டிருந்தது. அந்த மரமும், அதில் தொங்கிய ஊஞ்சலும், பள்ளி முடிந்ததும் நான் தினமும் பொழுது போக்கும் இடமாக இருந்தன. எனக்கு அந்த மரத்தை விட்டுப் பிரிய மனமில்லை. ஆனால், அங்கே தங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், அந்த ஆலிவ் மரத்தின் நினைவாக, சில ஆலிவ் காய்களைப் பறித்துக்கொண்டு வந்தேன்.”

“பிறகு என்னாச்சு தாத்தா?” என்று ஆர்வத்தோடு கேட்டாள் அமீரா.

“எங்கள் ஊரிலிருந்து வெகு தொலைவில் இருந்த கடலுக்கு வந்து சேர்ந்தோம். அந்தப் பயணம் மிகவும் கடினமாகவும் சோர்வாகவும் இருந்தது. வழியில் பசி எடுத்தபோது, நான் கொண்டுவந்த பிரெட் துண்டுகளையும் ஆலிவ் காய்களையும் சாப்பிட்டு பசியைத் தணித்தோம். ஆலிவ் காய்களைச் சாப்பிட்ட பிறகு, என்னிடம் மிச்சமிருந்தது ஒரே ஒரு ஆலிவ் விதைதான்.”

“இந்த ஆலிவ் விதையா, தாத்தா?” என்று தன் கையிலிருந்த விதையைத் தாத்தாவிடம் நீட்டினாள் அமீரா.

“இல்லை, இதுபோன்ற வேறொரு விதை” என்றார் தாத்தா.

“சரி, கடலுக்கு வந்த அப்புறம் என்னாச்சுன்னு சொல்லுங்க தாத்தா” என்று மீண்டும் கதைக்குள் தாத்தாவை இழுத்தாள் அமீரா. 

“அந்தப் பெருங்கடலை அடைந்ததும், அதைக் கடக்க வழி தெரியாமல் தவித்தோம். பல போராட்டங்களுக்குப் பிறகு, ஒரு வழியாக அதைக் கடந்து, இந்தப் புதுக் கண்டத்திற்கு வந்தோம். இங்கேயே எங்கள் புது வாழ்க்கையைத் தொடங்கினோம்.”

“ஓ, அப்படித்தான் இங்கே வந்தீர்களா?”

“ஆமாம். இங்கே ஒரு சிறிய பூந்தொட்டியில் நான் கொண்டுவந்த ஆலிவ் விதையை நட்டேன். சில நாட்களில் அது முளைத்தது. மேலும் சில நாட்களில் இலைகள் துளிர்த்தன.” என்றார் தாத்தா.

“ஓ உங்க செடி பெருசா வளந்துச்சா தாத்தா?” என்று ஆச்சர்யம் குறையாமல் கேட்டாள் அமீரா.

“ஆமாம், அமீரா. ஆனால் அது கடினமான காலம். நாங்கள் ஒரு இடத்தில் நிலையாக இருக்க முடியவில்லை. அடிக்கடி வீடு மாற வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் நாங்கள் எங்கு சென்றாலும்  கையோடு அந்த  செடியையும் எடுத்துச் சென்றேன்” என்றார் தாத்தா.

“அந்தச் செடி இன்னும் பெரிதாக வளர்ந்தது. நானும் அதை இன்னும் பெரிய தொட்டி ஒன்றில் மாற்றி நட்டு வைத்தேன்.” என்றார் தாத்தா.

“ஓ, செடி மரமாவே மாறிடுச்சா தாத்தா?” என்று கேட்டாள் அமீரா. 

“அப்போது அது மரமாக மாறவில்லை. ஆனால் குட்டிச் செடி கொஞ்சம் பெரிய செடியாக மாறியது. நாளாக நாளாக நீ சொன்னது போல மரமாக வளரும் அளவிற்கு பெரிதானது. இப்போது நான் மாற்றிய பெரிய தொட்டியை என்னால் தனியாகத் தூக்கவே முடியவில்லை. அந்த அளவுக்குப் பெரிதானது”

“ஐயோ! அப்போ நீங்க என்ன செஞ்சீங்க தாத்தா? வீடு மாறும்போது செடியை எங்கயாவது விட்டுட்டு வந்துட்டீங்களா?” என்று பதட்டமாகக் கேட்டாள் அமீரா.

“இல்லை, அமீரா. தனியாக தூக்க முடியாதுதான். அதனால் உன் பாட்டியையும் துணைக்கு அழைத்துக் கொண்டேன். நாங்கள் இருவரும் சேர்ந்து, அந்த பெரிய தொட்டியை இந்த வீட்டிற்கு எடுத்துவந்தோம். அன்று முதல் உன் பாட்டியும் நானும் இந்த வீட்டில் இருக்கிறோம்.”

“ஓகோ, அப்படியா!”

“ஆமாம்” என்று தலை அசைத்தார் தாத்தா.

“நீ சொன்னபடி, அந்தச் செடி இப்போது மரமாகிவிட்டது. நாங்கள் அதைத் தொட்டியிலிருந்து எடுத்து, ஆழமான குழி தோண்டி, இந்தத் தோட்டத்தில் நட்டோம். அது இப்போது நன்றாக வளர்ந்திருக்கிறது.”

“இங்கேயா இருக்கிறது? நம்ம வீட்டிலா? நாம் போய்ப் பார்க்கலாமா தாத்தா?”

“சரி” என்றார் தாத்தா. உடனே அமீரா ஓடிப் பின்வாசல் கதவைத் திறந்தாள். தாத்தா கைத்தடியை ஊன்றி மெல்ல நடந்து வந்தார்.

தாத்தாவின் கையைப் பிடித்துக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றாள் அமீரா.

அங்கே நின்ற பெரிய ஆலிவ் மரத்தைச் சுட்டிக்காட்டி, “இதுதான், அமீரா, என்னுடைய ஆலிவ் மரம்” என்றார் தாத்தா.


“இதன் அருகே இருக்கும் சிறிய மரம், உன் அம்மாவுடையது. உன் அம்மா சிறியவளாக இருந்தபோது இதேபோல் ஒரு ஆலிவ் விதையை நட்டாள். அது இப்போது இந்தச் சிறிய மரமாக வளர்ந்திருக்கிறது.”

“அப்படியானால், நானும் இந்த ஆலிவ் விதையை நட்டுவிடலாமா?” என்று மகிழ்ச்சியோடு கேட்டாள் அமீரா.

“ஆமாம்” என்று தலை அசைத்தார் தாத்தா.

உடனே அமீரா ஒரு சிறிய மண் தொட்டியை எடுத்துவந்தாள். தோட்டத்தின் ஒரு மூலையில் குவிந்திருந்த செம்மண்ணைத் தன் சிறிய கைகளால் எடுத்துத் தொட்டியில் நிரப்பினாள். தாத்தாவும் உதவினார். பிறகு, அவள் அறையில் இருந்த ஆலிவ் விதையை எடுத்து மண்ணில் ஊன்றி வைத்தாள்.

அன்று முதல், தினமும் தண்ணீர் ஊற்றி அதைப் பராமரித்தாள்.

சில நாட்களில், அந்த விதை முளைத்தது. செடி வளர வளர, ஆலிவ் மரத்தைப் பற்றி அதிகம் அறிய ஆர்வமடைந்தாள். தாத்தாவிடம் இன்னும் பல கதைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.

ஒரு சிறிய ஆலிவ் விதை எப்படி தாத்தாவின் நீண்ட பயணத்திற்குத் துணை நின்றது என்பது அவளுக்குப் புரிந்தது.

பிறகு ஒரு நாள், “தாத்தா முஹமது ஒரு புதிய பயணத்திற்குத் தயாரானார்.”


கண்ணீரோடு அவருக்கு விடை கொடுத்தாள் அமீரா. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, தன் தோட்டத்தின் ஆலிவ் மரத்தடியில் அவர் நிரந்தரமாகத் தூங்கினார்.

தாத்தாவின் நினைவு வரும்போதெல்லாம், அமீரா தன் ஆலிவ் செடியிடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வாள்.

சில மாதங்களுக்குப் பிறகு, ஆலிவ் செடி நன்றாக வளர்ந்ததைக் கண்டாள். தொட்டியைத் தூக்கித் தோட்டத்தில் கொண்டுசென்று, மண்வெட்டியால் ஆழமான குழி தோண்டினாள். பின்பு, செடியைப் பத்திரமாக எடுத்து அந்தக் குழியில் வைத்து மண்ணால் மூடினாள்.

செடியை நட்டு முடித்ததும், தாத்தாவின் மரத்தைப் பார்த்துக் கொண்டே, அவர் சொன்ன கதைகளை நினைவுகூர்ந்தாள்.

நீண்ட நேரம் தோட்டத்தில் இருந்த அமீராவைத் தேடி அவள் அம்மாவும் வந்தார். அவள் தாத்தாவை நினைத்துக் கண்ணீர் வடித்துக்கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டார். இருவரும் கைகளைப் பற்றிக்கொண்டனர்.

அமீராவின் ஆலிவ் செடி, தாத்தாவின் மரத்திற்கும், அம்மாவின் மரத்திற்கும் நடுவில் உறுதியாக நின்றது.

கண்டங்களைக் கடந்து வந்த ஒரு ஆலிவ் விதை, எப்படி அவள் முன்னோர்களின் வரலாற்றைச் சொல்லும் ஒரு பிரம்மாண்டமான மரமாக மாறியிருக்கிறது என்பதை அமீரா உணர்ந்தாள்.

எங்கெங்கோ அலைந்து, இறுதியில் இந்தத் தோட்டத்தில் வேரூன்றிய இந்த மரம், இன்னும் பல ஆண்டுகளுக்கு அவர்களின் வாழ்க்கையின் சின்னமாக நிற்கும்.

தன் ஆலிவ் செடி தாத்தாவின் மரத்தின் விதையிலிருந்து வந்தது என்பதை நினைத்துப் பூரித்தாள் அமீரா.

நாட்கள் ஓடின. அமீராவின் செடியும் மரமாகி, ஆலிவ் காய்களைத் தந்தது.

அமீரா அந்தக் காய்களிலிருந்து ஒரு விதையைப் பத்திரப்படுத்தி வைத்தாள்.

தன் மகனுக்குத் தாத்தா சொன்ன கதைகளைச் சொல்லும் நாளுக்காகக் காத்திருந்தாள்.

இப்போதல்ல… அடுத்த ஆலிவ் மரம் பூக்கும் காலம் வரை.

அதுவரை தாத்தா பிறந்த பாலஸ்தீன நிலத்தை நினைத்துக்கொண்டே இருந்தாள் அமீரா.

– தீபா சிந்தன்

1 Comment

  • மிகவும் உருக்கமான பதிவு. பூமியில் பிறந்த மனிதர்கள் அனைவரும் வாழ்வதற்கான அத்தனை தகுதியும் கொண்டது பூமி. ஆனால் போர் எனும் ஆயுதத்தால் மக்கள் சீரழிக்கப்படுவது மிகுந்த வேதனைக்குரியது. இவற்றைப் பெரியவர்கள் பேசுவதை விட குழந்தைகள் பேசுவது என்பது மிகவும் எதார்த்தமானது; சிறப்பும் வாய்ந்தது. அந்த வகையில் பாலஸ்தீன மக்கள் குறித்த மிகவும் சிறப்பான ஒரு கதை வடிவில் வழங்கிய தீபா சிந்தன் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள் மிக்க நன்றி!

    தோழமையுடன்
    இரா. சண்முகசாமி
    புதுச்சேரி.

Comments are closed.