தொடர்கள்

பசியில் பயத்தில் தொடங்கிய புறப்பாடு… பன்முகக் களத்தில் தொடரும் பண்பாடு… (ஊடக உலகப் பயணம் – 1) – அ. குமரேசன்

Udaga ulaga payanm 1

அவர்களின் பெயர்கள் என்ன? அவர்கள் என்ன இனம்? என்ன மதம்? என்ன சாதி? எதுவும் தெரியாது. அவர்களுக்கே அதெல்லாம் தெரியாது – ஏனென்றால் அப்போது இனம், மதம், சாதி இன்னபிற அடையாளங்கள் கிடையாது. அவர்கள் எந்தச் சொற்களாலும் பேசிக்கொள்வதில்லை -ஆதலால் என்ன மொழி என்ற அடையாளமும் கிடையாது. ஏனென்றால் மொழி எனப்படுவதே உருவாகியிருக்கவில்லை (ஆகவே ஒரு மொழியைத் தள்ளி இன்னொரு மொழி திணிக்கப்படவுமில்லை).

எங்கும் காடாக இருக்க, குழுக்குழுவாக எதையோ தேடிப் புறப்படுகிறார்கள். ஒரு குழுவினர் ஓரிடத்தில் பரவசத்தோடு நிற்கிறார்கள். அங்கே, அவர்களை அதுவரையில் எது அப்படித் தேடுவதற்கு உந்தியதோ அதற்குத் தேவையானது இருக்கிறது. அவர்களை உந்தியது பசி. அவர்கள் அங்கே பார்த்தது உணவு. அதை முதலில் பார்த்தவர், கையை நீட்டி அதை அடுத்தவருக்குக் காட்டுகிறார். அந்த அடுத்தவர் மற்றவர்களுக்குக் காட்டுகிறார். எல்லோருமாக உற்சாகக் கூச்சல் போடுகிறார்கள். அதைக் கேட்டு, வேறு பகுதிகளில் தேடிக்கொண்டிருந்தவர்கள் அங்கே கிடைத்துவிட்டதைத் தெரிந்துகொண்டு வந்து சேர்கிறார்கள். பகிர்ந்துண்டு பசியாறுகிறார்கள்.

இன்னொரு நாள். இன்னொரு குழு. போய்க்கொண்டிருக்கிறபோது எதிரே மரங்கள் தீப்பிடித்து எரிகின்றன. ஒளியும் வெப்பமுமாய் தீப்பிழம்புகள் கவர்ந்து இழுக்கின்றன. அது என்ன செய்யும் என்ற முன்னனுபவம் யாருக்குமே இல்லாத நிலையில் இரண்டு பேர் ஆர்வத்தோடு முன்னேறி நுழைகிறார்கள். அலறிக்கொண்டே நெருப்பில் கருகிப் போகிறார்கள். மற்றவர்கள் மிரண்டு நிற்க அங்கே மற்றொரு குழு வருகிறது. அவர்களையும் கவர்ச்சிகரமான நெருப்பு ஈர்க்கிறது, சிலர் அதை நோக்கி முன்னேற, முதலில் வந்து நிற்பவர்கள் அவர்களைப் பிடித்து இழுக்கிறார்கள். கைகளை அலையலையாய் அசைத்து கால்களை முன்னும் பின்னும் வைத்து, முதலில் உள்ளே இறங்கியவர்களுக்கு என்ன ஆனதெனச் செய்து காட்டுகிறார்கள்.

ஆதி நகர்வு

அடிப்படையில் பசி, பயம் இரண்டு உணர்வுகளும் உந்தியதால்தான் ஆதி மனிதர்கள் நகர்ந்தார்கள், கண்டுபிடித்தார்கள். தாங்கள் தெரிந்துகொண்டதையும் புரிந்துகொண்டதையும் சக மனிதர்களுக்கு இப்படிக் கூச்சலும் கையசைப்பும் காலசைப்புமாகப் பகிர்ந்துகொண்டார்கள். அதுதான் “தொடர்பாடல்” எனும் செயலின் தொடக்கம். “தகவல் தொடர்பு” என்றும் நாம் குறிப்பிடுகிற அந்தச் செயல் தொடங்காமல் போயிருந்தால்? பூமியில் தொடர முடியாமல் போன உயிரிகளோடு மனித இனமும்  சேர்ந்திருக்கும். இனத்தின் பாதுகாப்புடன், உறவு, சமூகம், நாகரிகம், கலை, இலக்கியம், அறிவியல், அரசியல் என பண்பாடுகள் தழைத்துப் பரவியதற்கு இந்தத் தொடர்பாடல்தான் காரணம். மண்ணைப் புவியாய் வழங்கியது இயற்கை. அதை உலகமாய் மாற்றியது மனிதர்தம் செயல் கை. அந்த உழைப்புச் செயலோடு இணைந்ததே தொடர்பாடல்.

இருபது லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில், மனித மூதாதையர்கள் பரிணமித்ததே உழைப்போடுதான். அதுவரையில் நான்கு கால்களையும் ஊன்றி நடந்த விலங்கினங்களிலிருந்து விலகி, முதுகுத்தண்டைக் கொஞ்சம் நிமிர்த்தி முன்னங்கால்களை உயர்த்தினார்கள். தரையிலிருந்து விடுதலைபெற்ற அந்த முன்னங்கால்களின் விரல்கள் பலப்பல தலைமுறைகளில் படிப்படியாக நீண்டு வளர்ந்தன. அந்த உறுப்பால் எதையும் பிடிக்க முடிந்தது, எடுக்க முடிந்தது, அசைக்க முடிந்தது, வளைக்க முடிந்தது, நிமிர்த்த முடிந்தது, ஒடிக்க முடிந்தது, பறிக்க முடிந்தது… இதெல்லாம் ஆதி உழைப்பேயல்லவா? முன்னங்கால்கள் இப்போது முழுக் கைகளாகின. கையை முளைக்க வைத்தது உழைப்பா, அல்லது உழைப்பைத் தொடங்கி வைத்தது கையா? எத்தனை சுவையான பட்டிமன்றம்!

முதுகுத்தண்டு நிமிர்ந்து உழைக்கத் தொடங்கியிருந்த மூதாதையர்களான  ஹோமோ ஹபிலிஸ் (கைதேர்ந்த மனிதர்கள்) இனத்தவர் வேட்டையாடுவது, நிலத்திலிருந்து தோண்டியெடுப்பது போன்ற செயல்பாடுகளுக்குக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர் (லத்தீன் மொழியில் ஹோமோ என்றால் மனிதர், ஹபிலிஸ் என்றால் கைத்திறன் என்று பொருள்). அந்தச் செயல்பாடுகளுக்குச் சில வகையான தொடர்பாடல்கள் அடிப்படைத் தேவையாக இருந்திருக்கும். அது பெரும்பாலும் சைகைகளாகவும் ஒலி எழுப்புவதாகவும் உணர்ச்சிக் குரல்களாகவும் இருந்திருக்கலாம்.

பத்தொன்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்  பரிணமித்த முழுமையாக முதுகுத்தண்டு நிமிர்ந்த ஹோமோ எரக்டஸ் (நிமிர்ந்த மனிதர்கள்) இனத்தவர்களும் அந்தச் செயல்களையும் தொடர்புகளையும் தொடர்ந்தார்கள். நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஹோமோ நியாண்டர்தால் (நியாண்டர் பள்ளத்தாக்கு மனிதர்கள்) இனத்தவர்கள் சமூகமாக வாழ்வதன் தொடக்க நிலைகளை உருவாக்கியிருந்தார்கள். நெருப்பின் பயனை அறிந்திருந்த  அவர்கள் அதை உருவாக்கவும் கற்றுக்கொண்டார்கள் என்று அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கற்றுக்கொண்டதை அவர்கள் சக மனிதர்களுக்குத் தொடர்பாடல் மூலம் கற்பித்திருப்பார்கள் என்று ஊகிக்கலாம்.

ஹோமோ ஹபிலிஸ்

மூன்று லட்சத்திற்குப் பிந்தைய, இரண்டு லட்சத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் பரிணமித்தது நமது இனம் – ஹேமோ சேபியன்ஸ் (அறிவார்ந்த மனிதர்கள்). நெருப்பை உருவாக்குவதிலும் வேட்டையாடுவதிலும், ஒப்பிட்டுப் பார்ப்பது, அனுபவ அறிவிலிருந்து திட்டமிடுவது உள்ளிட்ட மேலும் பலவகைப்பட்ட செயல்களிலும் மேம்பட்ட உத்திகளைக் கையாண்டார்கள்.

திருப்புமுனை

உயர் பழைய கற்காலம் எனப்படும் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய பருவம் ஒரு முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இங்கே பேசிக்கொண்டிருக்கிற ஊடகப் பயணத்திற்கான திருப்புமுனை அது.  அப்போதுதான்  மொழிகள் உருவாகி வளரத் தொடங்கின. மனித மூளையின் வளர்ச்சி, தொண்டைக் குழாய் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள், திரும்பத் திரும்பச் செய்வதைச் சார்ந்து பின்பற்றப்பட்ட சடங்குகள் ஆகியவை சொற்களை உருவாக்கின. குறிப்பிட்ட ஒரு விலங்கு அல்லது பறவை அல்லது பொருளைக் குறிப்பிடுவதற்குக் குறிப்பிட்ட சில ஒலிகளை எழுப்பியதுதான் அவற்றின் பெயர்களாகின – அதாவது சொற்கள் உருவெடுத்தன.

தாயிடம் பால் பருகும் சிசு, வயிறு நிரம்பியதும் வாயை எடுக்கிறபோது நிறைவுணர்வோடு எழும் “ம்”  “ம்மா” என்ற ஒலிகள்தான் அம்மா என்ற உணர்ச்சிகரச் சொல்லானது என்று மொழியியலாளர்கள் கூறுகிறார்கள். அநேகமாக உலகின் எல்லா மொழிகளிலிலும் சிற்சில மாற்றங்களோடு அம்மா ஒரே மாதிரியாக உச்சரிக்கப்படுகிறது – அம்மே, மா, மம்மா, மாதா, மம், மம்மி… என. இப்படி ஒவ்வொரு விலங்குக்கும், ஒவ்வொரு தாவரத்துக்கும், ஒவ்வொரு சூழலுக்கும், ஒவ்வாரு பொருளுக்கும், ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி ஒலிக்குறிகள் உருவாகின. ஒரே ஒலிக்குறிப்பில் அமையும் சொற்களும் (நீ, பூ, வா, போ….), பல ஒலிக்குறிகளின் கூட்டுச் சொற்களும் (காதல், குடும்பம், ஒற்றுமை, போராட்டம்…) சேர்ந்தன. சொற்களைக் கோர்த்து வாக்கியங்கள் வகைப்பட்டன. மொழி பிறந்தது!

பாறை ஓவியம்

பெருமழை கொட்டித் தீர்க்க அதிலிருந்து தப்பித்த கதையைக் குகைப் பாறையில் பதிந்தார்கள். சின்னச் சின்னக் கோடுகளால் மழையையும், சில புள்ளிகள் வளைவுகளால் மரத்தடியையும், வட்டங்கள் சதுரங்களால் மரத்தடியில் நிற்கும் மனிதர்களையும்  சித்தரித்தார்கள். இவ்வளவையும் செதுக்கி முடிப்பதற்கு நிறைய நேரமாகுமே? அதற்குள் மழைநீர் உள்ளே வந்துவிடுமே? அதைத் தவிர்ப்பதற்காக அதே புள்ளிகளையும் கோடுகளையும் வளைவுகளையும் வட்டங்களையும் சதுரங்களையும் சுருக்கிய வடிவங்களுக்குக் கொண்டுவந்தார்கள். சுருக்கிச் சுருக்கி, ஒலிக்குறிகளுக்கும் சொற்களுக்குமான எழுத்து பிறந்தது!

மனிதர்கள்  எங்கெல்லாம் பரவினார்களோ அங்கெல்லாம் மாறுபட்ட சொற்களும் எழுத்துகளுமாக வெவ்வேறு மொழிகள் பரிணமித்தன. வெறும் வெளிப்பாட்டுக் கருவிகளாக அல்லாமல் வரலாற்றுத் தடங்களாகவும் பண்பாட்டுத் தளங்களாகவும் சமூக அடையாளங்களாகவும் மொழிகள் நிலைகொண்டன. ஒரு வகையில், உணர்வுகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குக் கடத்துவதற்கான ஒரு தொடர்பாடல் ஊடகமாகவும் உருவெடுத்தது மொழி. 

கருத்தின் கடத்துக் கருவி

தொடக்கத்தில் பார்த்தோமே, தெரிந்துகொண்டதையும் புரிந்துகொண்டதையும் மற்றவர்களுடன் பகிர்வதே தொடர்பாடல் என்று? அந்தத் தொடர்பாடலுக்கான கடத்துக் கருவிதான் ஊடகம். ஊடு + அகம் என்று பிரித்துப் பார்த்தால், மேலும் தெளிவாகும். சொல்லப்படும் ஒரு செய்தியோ சிந்தனையோ தடைகளை ஊடறுத்து மக்களிடையே சென்றடைவதை “ஊடு” குறிக்கிறது. தனி மனிதர்களின் சமூகத்தின் மனதில் அந்தச் செய்தியும் சிந்தனையும் பதிகிறது. இந்த நிகழ்வுப் போக்கை “அகம்” குறிக்கிறது. தனது ஊரிலிருந்து புறப்படும் ஒருவர் ஊர்தி ஒன்றில் ஏறி, அடுத்த ஊரைச் சென்றடைந்து இறங்குகிறார். அவரது பயணத்திற்கு அங்கே ஊர்திதான் ஊடகம். எண்ணங்களின் பயணத்திற்கு உதவுவதால் இங்கே ஊடகம்தான் ஊர்தி.

உலக மொழிகளில் மூத்தது எது என்று கேட்டால் அறிஞர்களிடமிருந்து மாறுபட்ட கருத்துகள் வரலாம். ஆனால்,  முதலில் பேசப்பட்ட சைகையே முதன்மையான மொழி என்று சொன்னால் யாரும் மறுக்க மாட்டார்கள். பல மொழிகள் மற்ற மொழிகளோடு கலந்துவிட்டன. ஆனால் சைகை மொழி இன்றளவும் உயிர்ப்போடு இருக்கிறது. அதை முறைப்படி பயிலவில்லை என்றாலும், மொழியே  தெரியாத இடத்தில் கூட, ஒரு கையை வயிற்றில் வைத்து இன்னொரு கையை ஏந்திக் காட்டினால், பசியைப் புரிந்துகொண்டு சோறிடப்படும். சாலையில் கட்டைவிரல் காட்டி நின்றால் மனமுள்ளவர் தன் வண்டியை நிறுத்தி ஏற்றிக்கொள்வார். ஒரு பணி சிறப்பாக முடிகிறபோது அதே கட்டை விரலை உயர்த்துவது அந்த வெற்றிக்கான அங்கீகாரமாகிறது. பறக்கும் முத்த சைகை எத்தனை பாசத்தில் ஊறி வருகிறது! 

பலவகைப் பரிணாமங்கள்

திட்டவட்டமான பதிவுகளாக அறியப்பட்டுள்ளவற்றில்- அனுபவப் பகிர்வுக்கான அன்றைய பாறை ஓவியங்களில் தொடங்கி, எச்சரிக்கைக்கான புகை, கூட்டமாகச் சேரும் அழைப்புக்கான மரத்தண்டில் அடிக்கும் ஓசை,சொற்களால் உணர்த்தும் வாய்மொழி, எழுத்து வடிவில் கடத்திய ஓலைச் சுவடி, களிமண் ஓடு, துணியில் எழுதப்பட்ட  திருமுகம், எந்திரங்களை வகுக்கத் தொடங்கியதோடு வந்த அச்சுப்பொறி, காற்றையும் ஊர்தியாக்கிய வானொலி, மின்காந்த அலைகளால் கொண்டுசெல்லும் தொலைக்காட்சி என்று தொடர்ந்து, இன்று பன்முக வலையமைப்பால் பார்க்கவும் கேட்கவும் வைக்கும் இணையம் வரையில் – ஊடகங்கள் இன்று பலப்பல பரிணாமங்களையும் பரிமாணங்களையும் பெற்றுள்ளன.

உலகம் சுற்றும் போட்டியில் தம்பி முருகன் மயிலில் சுற்றிவர, அண்ணன் கணபதி அம்மையையும் அப்பனையும் சுற்றிவந்து ஞானப்பழம் பெற்ற கதை தெரியும். அறிவின் பெயரால் அதுவோர் ஏமாற்று வேலையில்லையா, அதைப் பரமசிவனும் பார்வதியும் ஏற்றுக்கொண்டு பழத்தைக் கொடுத்ததில் நியாயம் இருக்கிறதா என்ற கேள்வியில் நியாயம் இருக்கிறது. ஆனால், இன்று உண்மையிலேயே உள்ளங்கைக்கு வந்து விட்டது உலகம் – இருந்த இடத்திலேயே உலகத்தைச் சுற்றிவந்துவிடலாம். கைப்பேசியில் ஐபிஎல் ஆட்டம் முதல் புல்டோசர் இடிப்பு வரையில் உலகச் செய்திகள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பாகப் பார்க்க முடிகிறது.

அச்சு எந்திரம்

அன்று பெரிய அச்சு ஊடக நிறுவனங்கள் வெளியிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கங்கள் நடவடிக்கை எடுத்தன. இன்று சமூக ஊடகங்களின் வழியாக விடுக்கப்படும் அறைகூவல்களை ஏற்றுப் பொதுப் போராட்டங்களுக்கு மக்கள் திரள்கிறார்கள். கைப்பேசியிலேயே ஜாவா முதல் ஆண்டிராய்டு வரையில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன! சில ஆண்டுகளிலேயே, “இன்னுமா ஆண்டிராய்டு போன் வெச்சிருக்கீங்க,” என்று கேட்கிற நிலை வரும்.

அறிவியல் தொழில்நுட்பப் பங்களிப்பால் பஊடக வடிவங்கள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், அந்த அறிவியல் தொழில்நுட்பப் பங்களிப்பு பற்றிய செய்தியைப் பரப்புவது உள்ளிட்ட அடிப்படையான ஊடகச் செயல்பாடு – தொடர்பாடல் பண்பாடு – மாறாமல் நிகழ்ந்துகொண்டிருக்கும்.

-தொடரும்

1 Comment

  • நன்றி தோழர்… படித்துவிட்டு பின்னர் பேசுகிறேன்

Leave a Reply