தொடர்கள்வரலாறு

சம்புரு பழங்குடிகளின் வாழ்வும் வரலாறும் – தீபா ஜெயபாலன்

உச்சநீ

வட கென்யாவின் சம்புரு மாவட்டத்திலும் அதனைச் சுற்றியுள்ள வெப்பமான, மணற்பாங்கான நிலங்களிலும் காலத்தின் ஓட்டத்துக்கு கட்டுப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இனம், சம்புரு பழங்குடியினர்.

இவர்களின் மக்கள்தொகை சுமார் 2,50,000 முதல் 3,00,000 வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்க்கையோ நம் கண்களுக்கு எளிதில் படாமல் போகலாம். ஆனால், அவர்களின் வரலாறு, பண்பாடு, மற்றும் உயிர்ப்பிரியம் (love for life/living beings) ஆகியவை மண்ணோடு கலந்ததொரு சங்கமம்.

பழங்குடி என்பதே இன்று நாகரிகக் கோடாரிக்கு விழும் மரங்களாய் இருக்க, இதில் சிக்குண்ட இனங்களில் ஒன்றுதான் ‘சம்புரு இனம்’. இவர்களின் பயணம் வெறும் நாட்டுப்புறக் கதை அல்ல.

வெந்நிலத்தின் மடியில் ஒரு இனத்தின் தோற்றம்:

வைகறையைக் கடந்த கதிரவனின் ஒளிக் கீற்று கென்யாவின் வடமேற்குக் காடுகளின் பசுமையைத் தொட்டுவிட்டு, நீரின்றி வாடும் மணலுக்கு அருகில் வீசும் வேளையில், ஓர் இனத்தின் வரலாறு மெல்ல மெல்ல துளிர் விடுகிறது. இந்த இனத்தை ‘சம்புரு’ என அழைப்பது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் அந்தச் சொல்லின் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது நூற்றாண்டுகளைக் கடந்து வந்த வாழ்க்கையின் வழிச்சுவடு. “சம்புரு” என்ற சொல்லுக்கு இவர்களின் மொழியில் “பட்டாம்பூச்சி” (o-sampurumpuri) என்று பொருள் உண்டு எனவும், இது அவர்களின் வண்ணமயமான ஆடை ஆபரணங்களையும், நாடோடி வாழ்க்கை முறையையும் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

இம்மக்கள் ஒரு காலத்தில், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய சூடான் மற்றும் எத்தியோப்பிய எல்லைகளைக் கடந்து, நீரின்றி காய்ந்த மண் மேடுகளின் மேல் காலடி பதித்து, வனாந்தரங்களின் இரவுகளின் ஊடே நடந்து வந்தவர்கள். இவர்கள் பசு, ஆடு, ஒட்டகங்களை வழிகாட்டியாக வைத்துக் கொண்டு, இயற்கையை நம்பி வாழ்பவர்கள். ஒவ்வொரு நகர்வும், ஒவ்வொரு துயரமும், இவர்களது இனக்கதையின் ஓர் இழை.

இம்மக்கள் பேசும் மொழி, வெறும் மொழியல்ல. இவர்களது வாழ்வின் இசையாகும். இது “சம்புரு மொழி” என அன்போடு அழைக்கப்படுகிறது. கிழக்கு நைலோடிக் (Eastern Nilotic) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மொழி, மசாய் மொழிக்கு மிக நெருக்கமானது. சம்புரு மொழியை சுமார் 2,00,000க்கும் மேற்பட்ட மக்கள் பேசுகின்றனர். ஏனென்றால் சில சொற்களும், ஒலிப்புகளும் மற்றும் உரையாடல் நடைமுறைகளும் அனைத்தும் ஒரே மொழியிலிருந்து வந்த கிளைகள்தான் என்று பறைசாற்றுகின்றன.

எடுத்துக்காட்டாக, “உன் பெயர் என்ன?” என்பதற்கான சொற்கள் இருவர் மொழியிலும் மிகச் சாதாரண ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன. (ஒன்றைச் சொல்லப் போனால் இந்தோனேசியாவில் பப்புவாவில் வாழும் பழங்குடிகள் “வா வா” என்று அன்னைத் தமிழில் வரவேற்பதையும் நினைவில் நிறுத்தும் போது மொழிகளின் முடிச்சுகள் எங்கே எங்கே என்று நம்மைத் தேட வைக்கின்றன).

இவர்கள் பேசும் மொழியில் வரலாறும், பாடலும், கதைசொல்லலும் இனிமையாகக் கலந்து இருக்கின்றன. அதுமட்டுமின்றி, ஒரு உழைப்பின் மணமும் அந்த வார்த்தைகளில் இழைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் பசுக்களின் கழுத்தில் கட்டும் மணி ஓசையை, தங்கள் வாழ்வியல் நடைக்கு ஒலி கொடுக்கும் ஒரு உயிருள்ள இசையாகக் கருதுகிறார்கள். அந்த ஓசையில்தான் மரபும் வாழ்வும் ஒளிந்திருப்பதாக நம்புகிறார்கள். இது வெறும் ஓர் இனத்தின் வாழ்க்கை அல்ல. இது மனிதனின் இயற்கையோடு நிகழ்த்திய ஒரு சங்கதியின் தொடர்ச்சியாகும்.

மண் என்ற வேரிலிருந்து மரபும் சமூக கட்டமைப்பும்:

சம்புரு மக்களுக்கு நிலம் என்பது சொத்தல்ல, அது ஒரு உறவு. பசுமை இல்லாத பாலைவனத்திலும், பாறைகளால் சூழப்பட்ட மலையிலும், இவர்கள் வாழ்வதற்கான ஆதாரமே இந்த நிலம் தானே! இவர்களுக்கு வறட்சியான மண்ணும், எரியும் வெப்பமும் எல்லாம் இயற்கை அன்னையின் பாகங்களே. இம்மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கூடி வாழ இவர்கள் உருவாக்கும் குடிசைகளின் தொகுதிக்கு Manyatta (மானியாட்டா) எனப் பெயர் வைத்துள்ளனர். சராசரியாக ஒரு சம்புரு குடும்பம் 50-60 மாடுகளையும், நூற்றுக்கணக்கான ஆடுகளையும் வைத்திருக்கலாம்.

Manyatta என்பதற்கு ‘பல குடும்பங்களின் குடிசைகள் ஒன்றாக இணைந்த சமுதாயப் பகுதி’ என்று பொருள். மரம், புல், விலங்குகளின் சாணம் போன்ற இயற்கை பொருட்களால் கட்டப்பட்ட குடிசைகள் சுற்றியுள்ள பசுமை நிலத்துடன் ஒட்டுமொத்தமாக இணைந்திருப்பது அழகு. இவ்வகையான அமைப்பு, பாதுகாப்பு, சமூக உறவுகள் மற்றும் கலாச்சாரப் பரம்பரைக்கு அடித்தளமாக செயல்படுகிறது.

ஒவ்வொரு பருவமழைக்கும் இடையே, இவர்கள் பசுக்களுக்கு மேய்ச்சல் நிலம் தேடி நகர்கின்றனர். ஆண்டுக்கு சராசரியாக 80-120 கி.மீ வரை இவர்கள் இடம் பெயர்வதுண்டு. காரணம் மேய்ச்சலைத் தொழிலாகக் கொண்டதால்தான். இந்த அலைந்து திரியும் வாழ்க்கைமுறைதான் அவர்களின் அடையாளம். மழை பெய்யும் இடத்தை கணிக்க, அவர்கள் வானத்தை நோக்கிக் கவனிக்கிறார்கள். வானத்தில் உலாவும் மேகத்தின் உராய்வில் வரலாற்றைப் படிக்கிறார்கள்.

இவர்கள் பசுக்கள் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மாடும் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே கருதப்படுகிறது. அதனால்தான் பசுக்களை விற்று பணம் சம்பாதிப்பதை இயன்றவரை தவிர்க்கிறார்கள். பசு ஒரு சொத்து மட்டுமல்ல, அது மரபும் வாழ்வுமாக இணைந்த பிணைப்பு. நிலத்துடன் இவ்வளவு நெருங்கிய உறவு கொண்டதால், இவர்கள் ஒரே இடத்தில் வாழும் பழக்கம் இல்லாதவர்கள். ஆனால், இம்மக்கள் மனதில் ஒரு ஊர் இருக்கும். அது எங்கெல்லாம் தங்கள் காலடி பட்டதோ, அங்கெல்லாம் ஏற்படும் அடையாளமற்ற தாயகம்.

குடும்பத்தின் கட்டமைப்பு:

இவர்களின் குடும்ப அமைப்பு என்பது, ஒரே குடும்பத்தினுள் பல தலைமுறைகளும், பல தாய்மார்களும் இணைந்து வாழும் ஒரு பொதுக் குடும்பம் (நம்ம ஊரில் ஒரு காலத்தில் இருந்த கூட்டுக்குடும்பம் போல). சம்புரு சமூகத்தில் சுமார் 12 முக்கிய குலங்கள் (clans) உள்ளன, ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனி சின்னங்களும், மரபுகளும் உண்டு.

ஆண்கள் பல பெண்களை மணக்க முடியும் (Polygamy). குழந்தைகள் அனைவரும் ஒரே குடும்பமாகவே வளர்க்கப்படுகிறார்கள். இங்கு குடும்பத் தலைவர், சரி தவறுகளை நெறிப்படுத்தும் தலைமையாக இருப்பார். மூத்தோர் சபை (Council of Elders) சமூகத்தின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பு, சுயநலமில்லா சமூகப் பரிமாற்றத்திற்கு முதன்மை அஸ்திவாரம் இதுதான்.

Image


ஒவ்வொரு நபரும் ஒரு மரபுக் குலத்திற்குள் பிறக்கிறார்கள். அந்தக் குலம் தான் அவர்களின் திருமணத் தேர்வுகளையும், விழாக்களில் பங்கேற்பையும், சமூக மரியாதையையும் தீர்மானிக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஒரே குலத்தினர் திருமணம் செய்துகொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. இது, சமூகத்துக்குள் புதிய உறவுகளையும், பரஸ்பர ஊக்கத்தையும் உருவாக்குகிறது.

மோரான்கள் என்ற சம்புரு சமூகத்தின் வீரராகம்:

ஒவ்வொரு சமூகத்திற்கும் தனது இளைய தலைமுறையினர் மீது பெருமை இருக்கிறது அல்லவா? அப்படித்தான் இந்த சம்புரு பழங்குடியினத்தில், இளைஞர்கள் மோரான்கள் (Morans) ஆக மாறும் பருவம். இது வெறும் வீரத்திற்கான பயிற்சி அல்ல. இது ஒரு திட மனநிலை, ஒழுக்கம், மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான பழகும் பயணம்.

சம்புரு இளைஞர்கள், பொதுவாக 15 முதல் 30 வயதுக்குள் திறனாய்வுடன் தேர்வு செய்யப்பட்டு மோரான்களாக ஆகிறார்கள். இது பொதுவாக குல வழிபாட்டுடன், அரைக்கூழ் விழா, மற்றும் வயது அடிப்படையிலான செப்பனிடல் மூலமாக நடைபெறுகிறது. மோரான் பருவம் சுமார் 10-15 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.

இந்த நிகழ்வு ஒரு சிறுவனின் வாழ்க்கையில், “நான் இப்போது சமூகத்திற்கு ஒரு பாதுகாவலன்” என்பதற்கான அதிகாரப்பூர்வ நுழைவாக கருதப்படுகிறது.

மோரான்கள் பொதுவாக சமுதாயத்தில் இருந்து தற்காலிகமாக தனிமைப்படுத்தப்படுகிறார்கள். காரணம்: போர்திறன் பயிற்சி, இயற்கைச் சூழலைக் காக்கும் சபதம், மற்றும் உணவு, உடை, உறக்கம் குறித்த கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டும் என்ற பழக்கமும் காரணம். இது வெறும் படைப்பயிற்சி அல்ல. இது மன உறுதியை கட்டியெழுப்பும் ஒழுக்க முறை என்கிறார்கள்.

இவர்களே மாடுகளைக் காத்தல், வனப்பகுதிகளை அடையாளம் காணுதல், சிங்கம், சிறுத்தைகள், யானைகள் போன்ற விலங்குகளின் நடமாட்டங்களைக் கண்காணித்தல் போன்ற பணிகளிலும் ஈடுபடுகிறார்கள்.


இது மோரான்களுக்கு இயற்கை உலகில் உயிர்வாழ்வது எப்படி என்பதைக் கற்றுத்தரும். மேலும் பசுக்கள் மற்றும் குடும்பத்தைப் பாதுகாக்கும் உன்னதப் பணி இவர்களுடையது என்று மனதில் பதிய வைக்கும்.


இவ்வாறாக இருக்கும் மோரான்களின் உடைகள் மற்றும் உடல் அலங்காரம் அனைத்தும் அவர்கள் தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் சிவப்பு, வெளிர் நீலம் போன்ற வண்ணங்களில் இருக்கும். இவர்கள் தங்கள் உடலில், குறிப்பாக முகத்திலும் கூந்தலிலும் சிவப்பு охер (ochre) பூசிக்கொள்வது வழக்கம்; இது தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதாகவும், வீரத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.


நெற்றி, தாடி, தோள்களில் கறுப்புப் பூச்சு அல்லது மஞ்சள் பொடி பூசுவார்கள். வாள்கள், ஈட்டிகள், கேடயங்கள் போன்ற ஆயுதங்கள் வைத்திருப்பது ஒரு சின்னமாகும். மேலும் இவர்கள் தோற்றம், கம்பீரமான வீரர்களின் நடையாக மாறும்.

இந்த மோரான் பருவத்தில் சிறப்பாக செயல்பட்டவர்கள், பிறகு சமூக வழிகாட்டிகளாக, ஆலோசகர்களாக, மற்றும் திருமணத்திற்கு தகுதியான ஆண்களாக மாறுகிறார்கள். மோரான் பருவம் முடிந்த பிறகுதான், ஒருவர் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்.

அழகும் ஆற்றலும் ஒருங்கிணைந்த சம்புரு பெண்களின் பங்கு மற்றும் உரிமைகள்:

இங்கே மகளிர் என்பது வெறும் குடும்பத்தின் ஒரு பங்கு அல்ல. அவர்கள் ஒரு சமூகத்தின் நெஞ்சமாகவும் நெறியாகவும் விளங்குகிறார்கள். சம்புரு பழங்குடியினத்தில், பெண்கள் இன்றியமையாத சக்தி. அவர்கள் மரபு பேணுநர், வாழ்வியல் நிர்வாகி, மற்றும் உணர்வுகளின் ஊற்றுக்கண்ணாகவும் இருப்பதோடு, அவர்களுடைய உரிமைகள் மற்றும் பங்களிப்புகள் ஒவ்வொன்றும் ஒரு தனி அடையாளம் அமைக்கின்றன.

பெண்கள் குழந்தைகள் பராமரிப்பு, உணவுத் தயாரிப்பு, குடிசை அமைத்தல் போன்ற அனைத்து தினசரி நிர்வாகப் பணிகளையும் மேற்கொள்கிறார்கள். பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் பெண்கள் குடும்பப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

ஒரு பெண் தனது குடும்பத்தின் பசுக்களைக் கண்காணிப்பதிலிருந்து, நீர் நிலைகளைத் தேடுவதுவரை செயலில் இருப்பாள். பெண்களின் பணிவும் பொறுப்பும் குடும்பத்தை ஒரே தூணாகக் கட்டி எழுப்பி வைத்திருக்கிறது.

“Manyatta” குடிசைகளைப் பெண்களே தங்களுடைய கைகளால் கட்டுகிறார்கள். ஏனெனில் இது அவர்களுக்கு ஒரு தனிச்சொத்து உணர்வையும், உரிமை மற்றும் பாதுகாப்பையும் அளிக்கிறது. அந்த இடம் மகளிர் ஆட்சி நடைபெறும் தளமாக கருதப்படுகிறது. பெண்கள் இல்லையெனில் மரபு இல்லை என்பது அந்த சமூகத்தில் வாழும் உண்மை.

நெற்றிச் சங்கிலி, இளஞ்சிவப்பு மற்றும் நீல வண்ண மணிகளால் ஆன கழுத்தணிகள், காதுகளில் பெரிய வளையல்கள் இவையெல்லாம் அவர்கள் சமூக நிலையை விளக்கும். பெண்கள் அணியும் இந்த வண்ணமயமான மணிகளாலான கழுத்தணிகள் (beaded necklaces) அவர்களின் வயது, திருமண நிலை மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கின்றன. சில கழுத்தணிகள் பல கிலோகிராம் எடை கொண்டவையாகவும் இருக்கும். அவர்கள் அழகு என்பது அளவோடு, ஒழுங்கோடு, ஒரு கலாச்சாரப் பதிவாக பார்க்கப்படுகிறது. அழகு என்பது சம்புருவில் தார்மீக பெருமையுடன் கூடிய அடையாளம்.

திருமண மரபுகள்:

திருமணம் என்பது உறவு மட்டுமல்ல, அது சமூகம், மரபு மற்றும் குல மரியாதையின் சங்கமமாகும். அதே போல் மாடு என்பது திருமணத்தின் நாணயம். இம்மக்களுக்கு மாடு என்பது வெறும் செல்வம் அல்ல; அது வாழ்வின் மையம்.

திருமணத்தில் மாப்பிள்ளை, மணமகள் வீட்டிற்கு மாடுகளை கொடையாக (bride price) அளிக்க வேண்டும். மணப்பெண்ணுக்கு வரதட்சணையாக பொதுவாக 10 முதல் 20 மாடுகள் வரை கொடுக்கப்படுகின்றன. இது ஒரு பொருளாதார பரிமாற்றமாக இல்லாமல், மரபு மரியாதையின் அடையாளமாக கருதப்படுகிறது.

மாடு கொடுக்கும் எண்ணிக்கை, பெண்ணின் குடும்பத்தின் மதிப்பையும், சமூக நிலையையும் பிரதிபலிக்கிறது. மக்கள் திருமணத்தை மிகுந்த மரபுக் கட்டுப்பாடுகளுடன் நடத்துகிறார்கள். ஆனால், அதே நேரத்தில் பெண்ணின் சம்மதமும் முக்கியமானது. அது எவ்வாறு என்றால், பெண் பருவ வயது அடைந்ததும், குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனை நடத்துவர். ஆணின் குடும்பம், மாடுகளுடன் வந்து பேசும். பெண்ணின் உணர்ச்சி, சம்மதம், ஆர்வம் ஆகியவை மதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இது பல பழங்குடி சமூகங்களிலிருந்து வித்தியாசமானது. திருமண விழா என்பது வெறும் இரண்டு நபர்களின் இணைவல்ல. அது இரு குலங்களின் உறவு உறுதிப்பத்திரமாகும். திருமணச் சடங்குகள் பல நாட்கள் நீடிக்கலாம், அதில் “Nkui” எனப்படும் ஆசிர்வதிக்கும் சடங்கு முக்கியமானது.

அழகான நகைகள், வண்ண நிறத் துணிகள், பெண்ணின் தலையில் அடர்ந்த செம்மண் (ochre) மற்றும் கொழுப்பு கலந்த பூச்சு அலங்காரம், ஆணின் தலையில் இறகுகள் அல்லது இலைகளால் ஆன அலங்காரம் போன்றவை திருமண விழாவின் சிறப்பம்சங்களாகும். மத்தள இசை, கூட்டுப்பாடல்கள், மற்றும் வீரமிகு நடனம் இவை அனைத்தும் ஒரே நாளில் நிகழ்கின்றன.

திருமணத்திற்கு பிறகு பெண் புதிய குடும்பத்தில் புகுந்து வாழ்கிறாள். அவளுக்கு புதிய குடிசை (Manyatta) அமைக்கப்படும். கணவன் மற்ற மனைவியருடன் வாழ்ந்தாலும், ஒவ்வொரு மனைவிக்கும் தனி இடம், தனி மரியாதை வழங்கப்படுகிறது.

மனைவிகள் ஒருவருக்கொருவர் இடையே நல் உறவு வைத்திருப்பதோடு, கணவன் குடும்பத்துடனும், தன் தாயின் சகோதரர்களுடனும் உரிமையான பந்தம் வைத்திருப்பார்கள். முற்போக்கான சமூகத்துக்கு இணையாக இல்லையென்றாலும், பெண்களுக்கு அசாதாரணமான உரிமைகள் மற்றும் மரியாதை உள்ளதென்று சொல்லலாம்.

கல்விக்கான தேடலும் மரபு மாற்றமும் சந்திக்கும் சவால்கள்:

கல்வி என்பது ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் எதிர்காலத்திற்கு வெளிச்சம் பாய்ச்சும் வழியாகும். ஆனால் இவ்வெளிச்சம் சில சமூகங்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் பல வகைகளில் பரந்து விரிந்த காரணிகள்தான். கென்யாவின் தேசிய சராசரி எழுத்தறிவு விகிதம் சுமார் 82% ஆக உள்ள நிலையில், சம்புரு போன்ற நாடோடி சமூகங்களில் இது 20-30%க்கும் குறைவாகவே உள்ளது.

அனுபவமே ஆசான் என சம்புரு சமூகத்தில், கல்வி என்பது முதலில் குடும்பத்திலிருந்தே தொடங்குகிறது. மூத்தோர் குழந்தைகளுக்கு விலங்குகளை மேய்க்கும் நுட்பம், தண்ணீர் தேடும் உத்திகள், சமூக ஒழுங்குகள், கலாச்சார மரபுகள் போன்றவற்றை நேரடியாக கற்றுத்தருகின்றனர்.

இது வாழ்வியல் கல்வி என்ற வகையில் அமைந்துள்ளது. தவிர, “நூலில் அல்ல, நிலத்தில்தான் பாடம்” என்பதுதான் நிலை.

இம்மக்களுக்கான ஆரம்பப் பள்ளிகள் சில உள்ளபோதிலும், அவை எல்லாம் எல்லோருக்கும் நெருக்கத்தில் இல்லாது, தொலைவில் அமைந்துள்ளன.


சிறிய பள்ளிகள், ஆசிரியர் பற்றாக்குறை, பாடப்பொருள் புரிந்து கொள்ள இயலாமை போன்றவை, கல்வியின் தரத்தையும் அணுகுதலையும் பாதிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதைவிட, பசுக்களை மேய்க்கச் செல்வதே “பொறுப்பு” எனக் குடும்பங்கள் நம்புகின்றன.

இதனால்தான் கென்யா அரசு, பழங்குடியினர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது:

  • 2010 அரசியலமைப்பில் கல்வி அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டது.
  • 2013 – Basic Education Act மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய கல்வி உரிமையை வழங்கியது.
  • Nomadic Education Policy – நாடோடி வாழ்க்கையின் தன்மையைக் கருத்தில் கொண்டு mobile schools (நடமாடும் பள்ளிகள்), alternative learning centers (மாற்றுக் கற்றல் மையங்கள்) உருவாக்கப்பட்டன.
  • Children Act (2001), Anti-FGM Act (2011) – சிறுமிகள் கல்வியைத் தொடரும் உரிமையைப் பாதுகாக்கும் சட்டங்களாகும்.

இவை சம்புரு மாணவர்களின் வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்ற கல்வி வாய்ப்புகளை வழங்கும் முயற்சிகளாக அமைந்துள்ளன. இருப்பினும் இம்மக்கள் கல்வியை நோக்கி எடுக்கும் ஒவ்வொரு அடியும், சவால்கள் நிறைந்ததாகவே இருக்கிறது:

  • நாடோடி முறை: இடம் மாறும் வாழ்க்கை முறை காரணமாக நிரந்தரப் பள்ளியில் படிக்க முடியாது.
  • வறுமை: படிப்புச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் குழந்தைகள் பள்ளியை விட்டுவிடுகிறார்கள்.
  • சிறுமிகள்: குழந்தை திருமணம், FGM (பெண் பிறப்புறுப்பு சிதைப்பு), வீட்டுப்பணிகள் ஆகியவை சிறுமிகளின் கல்வியைத் தடுக்கின்றன. FGM நடைமுறை, 70%க்கும் மேற்பட்ட சம்புரு சிறுமிகளைப் பாதிப்பதாகவும், இது அவர்களின் கல்வியை வெகுவாகத் தடுப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
  • பள்ளி வசதிகள்: பள்ளிகள் மிகுந்த தொலைவில்; நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலை.
  • மொழிச் சிக்கல்: பாடங்கள் ஸ்வாஹிலி அல்லது ஆங்கிலத்தில் உள்ளன. சம்புரு மொழியில் இல்லை.
  • பாதுகாப்புப் பிரச்சனைகள்: சிறுமிகள் பள்ளி செல்லும் பாதையில் பாதுகாப்பின்றி பயணிக்க வேண்டிய சூழ்நிலை.
Image

மாற்றத்துக்கான முயற்சிகளாக சில சமூக அமைப்புகள் மற்றும் அரசாங்கம், மாணவர்களுக்கான உணவுத் திட்டங்கள், மொபைல் பள்ளிகள், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், மரபுடன் பொருந்தும் பாடத்திட்டங்கள் மூலம் கல்வியை அணுகக்கூடியதாய் மாற்ற முயற்சி செய்கின்றன. இதன் விளைவாக சமீப காலங்களில், சில சம்புரு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தொடங்கியிருப்பது மாற்றத்தின் முதல் அடியாக பார்க்கப்படுகிறது.

கென்யா அரசுக்கும் சம்புருக்கும் இடையேயான போராட்டங்கள்:

1990-களில் தொடங்கிய இந்த மோதல், முதலில் அரசு மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்கள் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான திட்டங்களால் தொடங்கியது. குறிப்பாக, லாய்கிபியா (Laikipia) மற்றும் சம்புரு தேசிய ரிசர்வ் போன்ற பகுதிகளில் நிலம் தொடர்பான மோதல்கள் தீவிரமாக இருந்தன. இவர்கள் வசிக்கும் நிலப்பரப்புகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக மாற்றப்பட்டன. இதன் விளைவாக, சம்புரு மக்களுக்குத் தங்கள் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டது. வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் தனியார் கன்சர்வன்சிகள் (conservancies) உருவாக்கம் ஆகியவை சம்புருக்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களை வெகுவாகக் குறைத்துள்ளன.

“எங்களது நிலம் எங்கள் உயிர்,” என்ற நம்பிக்கையில் அவர்கள் எதிர்ப்பைத் தொடங்கினர்.

இதனால் சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டு நீதிமன்றங்கள் செல்ல நேர்ந்தது. இம்மக்கள், தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களைச் சுட்டிக்காட்டி, மனித உரிமை அமைப்புகளின் உதவியுடன் வழக்குகள் தொடர்ந்தனர். குறிப்பாக, “தாய்நில உரிமை” (Indigenous Land Rights) சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் சர்வதேச நீதிமன்றங்களிலும் குரல் கொடுத்தனர்.

2009-இல், UNDRIP (United Nations Declaration on the Rights of Indigenous Peoples) அறிக்கையை மேற்கோளாகக் கொண்டு, சம்புரு மக்கள் தங்கள் உரிமையை வலியுறுத்தினர். 2013-இல், அவர்களது நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டது சட்டவிரோதமாகும் என ஒரு கென்ய நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இருப்பினும், நடைமுறையில் அந்தத் தீர்ப்புகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அரசின் நிர்வாகத் தாமதங்கள், அதிகாரிகளின் உள்நோக்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அழுத்தங்கள் காரணமாக, சம்புரு மக்களின் நில உரிமைகள் இன்னும் சிக்கலான நிலையில் உள்ளன என்பது வேதனை அளிக்கிறது.

Image

எனினும் இம்மக்களின் நில உரிமை மீதான போராட்டம், மெல்ல மெல்ல சமூக விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்தது. இன்று பல சம்புரு இளைஞர்கள் சட்டத்துறையில் பயின்று, தங்கள் சமூகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.

அதேவேளை, அரசு சார்பிலும் சில சிறிய நிலங்கள் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், முழுமையான தீர்வுக்கு இது போதுமானதல்ல.

சம்புரு மக்களின் நில உரிமைக்கான போராட்டம், ஒரு சமூகத்தின் உரிமையைப் பற்றி மட்டுமல்ல; அது உலகின் அனைத்து பழங்குடியினருக்கும் உரிய மனித உரிமை பற்றிய விழிப்புணர்வாகும். சட்டங்கள் எழுதப்படும் போது மட்டுமல்லாமல், நடைமுறையில் அவை மதிக்கப்பட வேண்டும் என்பது இந்தப் போராட்டத்தின் பாடமாகும். தனிப்பட்ட சிலரின் ஆதாயத்துக்காக காட்டு உயிர்களைக் கூண்டிற்குள் அடைத்து வைத்து உணவு ஊட்டுவது போல், இயற்கை அன்னையின் மார்பில் பால் குடித்துக்கொண்டிருக்கும் பழங்குடிகளைப் பிரித்து என்ன உணவுதான் ஊட்டுவீர்கள்…

– தீபா ஜெயபாலன்

தொடரின் முந்தைய கட்டுரைகளை வாசிக்க

(தொடர் தொடரும்…)

1 Comment

  • /// பழங்குடி என்பதே இன்று நாகரிகக் கோடாரிக்கு விழும் மரங்களாய் இருக்க, இதில் சிக்குண்ட இனங்களில் ஒன்றுதான் ‘சம்புரு இனம்’.///
    /// தனிப்பட்ட சிலரின் ஆதாயத்துக்காக காட்டு உயிர்களைக் கூண்டிற்குள் அடைத்து வைத்து உணவு ஊட்டுவது போல், இயற்கை அன்னையின் மார்பில் பால் குடித்துக்கொண்டிருக்கும் பழங்குடிகளைப் பிரித்து என்ன உணவுதான் ஊட்டுவீர்கள்… ////

    🔥💐👏🏽👏🏽👏🏽 அருமை

Leave a Reply