ஆப்பிரிக்காவின் மையம் போலத் திகழும் நைஜீரியா நாட்டில், ஒரு பாரம்பரியக் குழுவாக விளங்கும் பழங்குடியினர்தான் யொரூபா. உலகின் முக்கியப் பழங்குடி சமூகங்களில் ஒன்றாக இருக்கும் இவர்களின் பழமையான நகரங்கள், மரபுகள், அரசமைப்புகள் ஆகியவை ஒரு சிறந்த பண்பாட்டிற்கு அடையாளமாகத் திகழ்கின்றன.
வாழ்க்கை என்பதே புனிதம் என்னும் கொள்கையை உடைய இம்மக்களின் ஆன்மிகப் பயணத்தின் தொடக்கம், இஃபே (Ile-Ife) என்ற நகரில்தான் நிகழ்ந்தது என அவர்கள் திடமாக நம்புகிறார்கள். இவ்வூர், யொரூபா மத நம்பிக்கைகளின் ஆன்மிகத் தாயகமாகவும், உலகப் புகழ்பெற்ற கலை மற்றும் சிற்பத்தின் உறைவிடமாகவும் விளங்குகிறது. இம்மக்களின் வாழ்க்கை காலடித் தடங்களின் சுவடுகளையும், அவர்கள் சுமந்து வந்த உணர்வுகளையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தும் முயற்சியில் முளைத்த எழுத்துக்கள் உங்கள் முன்னே.
யொரூபாவின் வரலாறு: பேரரசுகளின் காலம்
ஓயோ பேரரசு (Oyo Empire):
யொரூபா வரலாற்றில், 17-ஆம் மற்றும் 18-ஆம் நூற்றாண்டுகளில் உச்சம் பெற்ற ஓயோ பேரரசு மிக முக்கியமான கட்டமாகும். இது ஒரு நாகரிக அரசியல் அமைப்புடன் கூடிய சிறந்த சாம்ராஜ்யமாக ஒரு காலத்தில் இருந்தது. இதில் ஓபா எனப்படும் அரசர்கள் மற்றும் அமைச்சர்கள் குழு ஒற்றுமையாக ஆட்சி செய்தனர். “ஓபா” இப்பழங்குடியினரின் அரசியல் தலைவராகவும் அரசராகவும் இருந்தார். இவர் மக்களால் மதிக்கப்படும் ஒரு ஆட்சியாளர் மட்டுமல்ல, அதற்கும் மேலாக தெய்வீக அதிகாரம் பெற்றவராகவும் கருதப்பட்டார்.
இந்த அரசருக்குத் துணைபுரிவதற்காக, “ஓயோ மெசி” எனப்படும் ஏழு பேர் கொண்ட முதன்மை அமைச்சர்கள் குழுவும் இருந்தது. அவர்கள் ஒரு மந்திரிசபை போன்று செயல்பட்டு, அரசர் எந்தத் தவறும் செய்யாதவாறு தணிக்கை செய்யும் குழுவாக செயல்பட்டனர். இவர்கள் காடுகளால் சூழப்பட்ட கிராமங்களில் வாழ மரவீடுகள், களிமண் கிணறுகள், மற்றும் இயற்கை வழியில் குடிநீர் பாதுகாப்பு ஆகியவை வாழ்க்கையின் ஒரு பகுதிய என்று உருவாக்கி வைத்தனர். இதனால்தான் பழங்காலத்தில் இம்மக்களின் சமூக அமைப்புகள் சிறப்பான ஒழுங்குகளைக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நகரத்திலும் அவர்களின் தனி அரசியல் அமைப்பும், உறுதியான சமூகக் கட்டமைப்பும் இருந்ததே, இன்றும் அவர்களின் வழித்தோன்றல்களின் நினைவில் அவை மறையாமல் இருப்பதற்கான மூலதனம் ஆகும்.
சமூக அமைப்பு
யொரூபா சமூகத்தில், மக்களின் வாழ்க்கை இளைய தலைமுறை, வயதானோர், மற்றும் குடும்பத் தலைவர் ஆகியோரின் அறிவுரை அடிப்படையில் அமைந்திருக்கிறது. இங்கே குடும்பம் என்பது மிகப் பெரிய ஆலமரம் போன்றது. ஒரே வீட்டில் பல தலைமுறையினர் வாழ்கிறார்கள். இதை எவ்வாறு கூறலாம் என்றால், இவர்கள் பெரும்பாலும் விரிவான குடும்ப அமைப்பில் (Extended Family – Ebi) வாழ்கின்றனர். இதில் தாத்தா, பாட்டி, மாமா, மாமி, பித்தா, அத்தை மற்றும் அண்ணன், தங்கை என அனைத்து உறவினரும் இணைந்து வாழ்கிறார்கள்.
ஆண்தான் குடும்பத் தலைவராக இருப்பார், ஆனால் பெண் குடும்ப வாழ்க்கையின் உறுதியான அச்சாணியாக இருப்பார். குடும்பத்தின் பொருளாதாரம், குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் சமூக உறவுகள் அனைத்திலும் பெண்கள் முக்கியப் பங்கு வகிப்பது இச்சமூகத்தின் மேன்மையாகும்.
மொழி, இலக்கியம் மற்றும் பழமொழிகளின் செல்வாக்கு
இவர்களின் மொழி, தனிச்சிறப்பானதும், செறிவான இலக்கிய மரபும், ஆழமான அறிவுப் பழமொழிகளைக் கொண்டதுமாகும். ஒரு அறிவுத்திறன் வாய்ந்த சமூகமாகத் திகழ்கிறார்கள் என்பதை அவர்களின் பேச்சிலும் எழுத்திலும் அறிவின் ஒளி பளிச்சென்று விளங்குவதைக் கண்டு உணர்ந்துகொள்ளலாம்.
தொனி மொழி (Tonal Language):
யொரூபா, ஒரு தொனி மொழி. அதாவது, ஒலிப்பின் உயர்வு, தாழ்வு மற்றும் நடுத்தர ஒலிகள் மூலம் சொல்லின் அர்த்தம் மாறுபடும் (தமிழில் குறில், நெடில் வேறுபாடு பொருளை மாற்றுவதைப் போல).
உதாரணத்திற்கு:
- Owó (உயர் தொனி) – பணம்
- Ọwọ́ (நடுத் தொனி) – கை
- Òwò (கீழ் தொனி) – வர்த்தகம்
காற்றில் பாடல்போல் ஒலிக்கும் இம்மொழி, யொரூபா மக்களின் உணர்வுகளையும் பாவனைகளையும் மிகத் துல்லியமாகக் காட்டுகிறது.
இலக்கிய மரபு:
இவர்களின் இலக்கிய மரபு பல பாடல்களையும் கதைகளையும் பாடுகின்றது. இது இரண்டு முக்கிய வடிவங்களில் பிரிகிறது:
- Oríkì (ஓரிகி – புகழ்ச்சிப் பாடல்): ஒவ்வொரு நபருக்கும், அவருடைய குடும்ப மரபு, தாயின் தந்தையின் புகழ், மற்றும் பூர்வீகங்களை கொண்டாடும் தனிப்பட்ட கவிதையாக பாடப்படும்
- அடுத்து மரபுக் கதைகள்: முன்னோர்களின் வீரக் கதைகள், ஆன்மிக மாயக்கதைகள், மற்றும் நீதிக்கதைகள் என்ற வடிவங்களைக் கொண்டுள்ளன.
பழமொழிகள்:
இம்மக்கள் புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் ஒரே சொற்றொடரில் கூறுவதில் வல்லவர்கள். அவர்கள் பேசும்போது பல பழமொழிகளைப் பயன்படுத்துவதைக் காணலாம். அதற்குச் சில சிறந்த உதாரணங்கள்:
- “Ọmọ tí a kò kọ́ ní yóò gbé ilé tí a kọ́ tà.” (கல்வி தரப்படாத பிள்ளை, அந்த வீட்டையே விற்கும்.)
- “Bí a bá pé ẹni lẹ́tà, ká tó fi ọwọ́ mú, ká fi ẹsẹ̀ kúrò nípò tí a wà.” (ஒருவரை வரவேற்கும்போது, நாமும் நம்மை உயர்த்திக்கொள்ள வேண்டும்)
- “Ẹni tí kò mọ ara rẹ̀, kò lè mọ ẹlòmíràn.” (தன்னை அறியாதவன், பிறரையும் நன்கு உணர முடியாது.)
இந்த பழமொழிகள், வழிகாட்டியாகவும் வாழ்க்கை நெறியாகவும் திகழும் பொக்கிஷங்களாக வழக்கில் உலா வருகின்றன.
யொரூபா மக்களின் உணவு, உடை மற்றும் கலாச்சாரம்:
இம்மக்கள் தங்கள் உணவு, உடை மற்றும் பண்டிகைகளின் வழியாக வாழ்வின் இனிமையைத் தழுவுவதாக எண்ணுகிறார்கள். இதற்கு ஏற்றாற்போல், அவர்களது வாழ்வியலுக்கே உரிய பாணியில், இது கலை, மதம் மற்றும் சமூக உறவுகளின் பிரதிபலிப்பாக அமைகிறது.
உணவு:
யொரூபா உணவுகளில் இனிப்பு, காரம் போன்ற சுவைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. சுவையுடனும் மணத்துடனும் கூடிய உணவுகளை ரசித்து உண்ணுகிறார்கள்
சேனைக்கிழங்கு (Yam) இவர்களின் மிக முக்கியமான முதன்மை உணவாகும். இதைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் “புதிய சேனைக்கிழங்கு திருவிழா” கொண்டாடப்படுகிறது. மேலும், மரவள்ளிக்கிழங்கு (Cassava), மக்காச்சோளம் (Maize) போன்ற வேர் மற்றும் தானிய வகைப் பயிர்களும் இதில் அடங்கும்.
கீரை சூப், வெண்டைக்காய் சூப், மற்றும் எகுசி (Egusi – முலாம்பழ விதைகள்) கொண்டு செய்யப்படும் கூட்டுகள் போன்றவை அமலா (Amala), பாண்டட் யாம் (Pounded Yam), ஈபா (Eba) போன்ற மாவுப் பண்டங்களுடன் சேர்த்துப் பரிமாறப்படும். இத்தகைய உணவுகள் யொரூபா சமூகத்தில் அன்பின் அடையாளமாகவும், விருந்தினருக்கு உணவு வழங்குவது மிகப்பெரிய மரியாதையாகவும் கருதப்படுகிறது.
உடை:
இம்மக்களின் உடைகள் மிகச்சிறந்த கைவினைப் பண்பாட்டின் வெளிப்பாடாக மிளிர்கின்றன.
- அசோ-ஓகே (Aso-Oke): பாரம்பரிய கைத்தறித் துணியான இது, பண்டிகைகளுக்குச் சிறப்பாக அணியப்படுகிறது.
- அங்காரா (Ankara): வண்ணமயமான, பல வடிவங்கள் கொண்ட அச்சிடப்பட்ட துணிகள். சுவாரஸ்யமான தகவல்: இந்த அங்காரா துணி, டச்சுக்காரர்களால் இந்தோனேசிய பாணியில் உருவாக்கப்பட்டு மேற்கு ஆப்பிரிக்காவில் பிரபலமானது.
- இரோ (Iro): பெண்கள் அணியும், புடவையைப் போல இடுப்பில் சுற்றிக்கட்டும் ஆடை. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
- பூபா (Buba) மற்றும் சோகோட்டோ (Sokoto): ஆண்கள் அணியும் சட்டை மற்றும் தளர்வான காற்சட்டை.
- மேலும், பெண்கள் அணியும் தலைப்பாகையான கெலே (Gele) மற்றும் கை, கழுத்து நகைகள் ஆகியவை இவர்களின் உடை அலங்காரத்தைச் சிறப்பிக்கும் பாகங்களாக மிளிர்கின்றன. உடைகள் ஒவ்வொரு விழாவிற்கும் பொருந்திய வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, உடுத்திக்கொண்டு மிடுக்காக இருப்பார்கள்.
திருமணங்கள், உறவுமுறைகள் மற்றும் குடும்ப வாழ்க்கை
இந்த பழங்குடியினரின் வாழ்வியலில் திருமணம் என்பது ஒரு கடவுளின் ஆசீர்வாதமாகவும், சமூக ஒற்றுமையின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. உறவுகள், குடும்ப உற்சாகம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை இங்கே மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

திருமணத்திற்கு குடும்ப ஒப்புதல் மிகவும் முக்கியம்:
இச்சமூகத்தில் திருமணம் என்பது இருவருக்கு மட்டும் இல்லாமல், இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான உறவாகக் கருதப்படுகிறது. அதனால்தான் இவர்கள் திருமணத்திற்கு முன்னதாகவே குடும்ப ஒப்புதல் பெறுவது அவசியமாகிறது..
திருமண முயற்சி ஆரம்பிக்கும்போது, வரன் பார்க்கும் குடும்பம் முதலில் “Introduction Ceremony” (முன்னுரை நிகழ்வு) நடத்துவார்கள். இதில் இருபக்கத்தார் சந்தித்து நன்கு தங்கள் உணர்வுகளை பரிமாறிக் கொள்கிறார்கள். பிறகு திருமண ஒப்புதல் பெற்ற பிறகு, வரனின் குடும்பம் பெண்ணின் குடும்பத்திற்கு “Bride Price” என்ற பரிசுகளையும், பண்டங்களையும் வழங்குவர். இது பணம் அல்ல, ஆனால் மரபு நம்பிக்கையின் அடிப்படையில் பரிமாற்றமாக வழங்கப்படுகிறது. இதில் யாம், எண்ணெய், துணிகள், இரத்தல் மற்றும் சிறப்பு இயற்கை பொருட்கள் அடங்கும்.
திருமண விழா என்பது ஒரு பண்டிகை தினம்தான் யொரூபா மக்களுக்கு. இசை, நடனம், வண்ண நிற ஆடைகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் ஆகியவை இந்த விழாவைச் சிறப்பிக்கின்றன. மாப்பிள்ளை மற்றும் மணமகள் இருவரும் அடிரா, அஞ்சரா எனப்படும் பாரம்பரிய உடைகளை அணிவார்கள்.
குல மரபுகளும் தொழிலும்:
யொரூபா மக்கள் பெரும்பாலும் குல வழிபாடு மற்றும் தொழில்முறை அடிப்படையில் சமூக அமைப்பில் வாழ்கிறார்கள். ஒவ்வொரு குலமும் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் சார்ந்தது; சிலர் கைத்தொழில், சிலர் பாரம்பரிய மருந்து மருத்துவம், சிலர் இசை மற்றும் நடனத்திற்கே உரியவர்களாக இருக்கிறார்கள்.
யொரூபா பெண்களின் மரபும், முன்னேற்றமும்
இப்பழங்குடியினரின் சமூகத்தில் பெண்கள் சிறந்த நிலையைப் பெற்றுள்ளனர். அவர்கள் சமுதாயத்தின் அடித்தள சக்தியாக இருந்துள்ளனர். பழங்காலத்தில் இருந்தே பெண்கள் வணிகம், மரபு வழிகாட்டல் மற்றும் பொதுத்துறை வரை பல துறைகளில் தனித்துவமாக விளங்கியுள்ளனர்.
சில நகரங்களிலும் கிராமங்களிலும் பெண்கள் அரசராக, “Iyaloja” (பொதுமக்கள் வணிகத் தலைவர்), அல்லது மனநல ஆலோசகர் போன்ற முக்கிய நிலைகளை வகிகின்றனர். அதுமட்டுமின்றி, சமுதாய வாழ்வில் நீதிக்குரிய வழிகாட்டிகளாகவும், திருமண மற்றும் குடும்பப் பிரச்சனைகளில் தீர்வுகாணும் நடுவர்களாகவும் இருக்கிறார்கள்.
நகர்ப்புறங்களில் பெண்கள் உணவுப் பொருட்கள், துணிகள் மற்றும் கருவிகள் விற்பனை செய்வதும், பன்னாட்டு வணிகக் கொடுப்பனவுகளில் பங்கு வகிப்பதும், தங்களுக்குச் சொந்தமான சேமிப்புக் குழுக்கள் (Esusu) மூலம் பொருளாதாரத்தை வளர்ப்பவர்களாகவும் உள்ளனர்.
கலை, இசை மற்றும் பாரம்பரியத்தில் பாடல்கள், கதை சொல்லுதல், மந்திரங்கள் ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு பண்டிகையிலும், தெய்வ வழிபாட்டிலும் நடனங்களில் ஆடுகிறார்கள்.
இன்றைய நவீன கலாச்சாரத்தில் கல்வியில் முன்னேறி மருத்துவம், சட்டம், அரசியல் போன்ற துறைகளில் உயர்வடைந்துள்ளது மட்டுமின்றி, சமூக ஊடகங்கள், கலை, வணிகம் மற்றும் திரைப்படங்கள் (நாலிவுட் – Nollywood என அழைக்கப்படும் நைஜீரியத் திரையுலகில்) மூலம் தங்கள் குரலை உலகிற்குத் தெரிவிக்கின்றனர். பெண்கள் உரிமைகள், கல்வி, பாலின சமத்துவம் போன்ற விசயங்களில் தலைசிறந்த ஆதரவாளர்களாக உள்ளனர்.
வாழ்வியல் சமநிலை யொரூபாயொரூபா சமுதாயத்தில் பெண்கள் மனிதாபிமானம், மதிப்புக் கொள்கைகள், குடும்பத்தலைமை ஆகியவற்றின் உட்பொருளாக இருந்து குடும்ப, சமுதாய மற்றும் பண்பாட்டுச் சூழலில் பெண்கள் பாரம்பரியமும், புதுமையும் இணைத்து வழிகாட்டும் வழிகாட்டியாக முன்னேறி உள்ளனர்.
கலை, இசை மற்றும் நடன மரபுகள்
யொரூபா மக்கள் என்றாலே பாரம்பரியக் கலை, அருவி போல ஓடும் இசை மற்றும் உற்சாகம் மிகுந்த நடனங்கள் ஆகியவைதான் மனதில் முதலில் நினைவுக்கு வரும். இவர்கள் கலைசார்ந்த வாழ்க்கை முறையால், இவர்களது சமூகப் பண்பாடு பசுமையாகவும், உயிருள்ளதாகவும் திகழ்கிறது.

சிற்பக்கலை:
களிமண், உலோகச் சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. குறிப்பாக இஃபே நகரம் உருவாக்கிய வெண்கலம், தாமிரம் மற்றும் களிமண் உருவங்கள், மிகுந்த ஒழுங்கும் நுணுக்கமான ஓவிய நுண்புணர்வும் கொண்டவை. மனித உருவங்கள், அரசர் சிலைகள், தெய்வ உருவங்கள் போன்றவை பாரம்பரிய முறையில் செதுக்கப்பட்டு, தெய்வ வழிபாடுகளிலும் மரபு நிகழ்வுகளிலும் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.
துணி வடிவமைப்பு கலை:
மேலே குறிப்பிட்ட அசோ-ஓகே மற்றும் அதிரே (Adire) போன்ற யொரூபா மக்களின் உடைகளில் பயன்படுத்தப்படும் கைத்தறித் துணிகள் கலைமிகுந்தவை. இயற்கை நிறங்கள், கையால் தயாரிக்கப்படும் வடிவங்கள் மற்றும் வார்த்தைச்சொற்களைப் போல மாறும் வண்ண கட்டமைப்புகள் இவற்றின் சிறப்பாக ஜொலிக்கும்
இசை:
யொரூபாயொரூபா இசை என்பது உயிரின் ஓசை. இது வழிபாடு, உற்சவம் மற்றும் சமூகக் கூறுகளுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது. முக்கியமான இசைக் கருவிகள்:
- டுன்டுன் (Dundun) – பேசும் மிருதங்கம் என அழைக்கப்படும்.
- படா (Bata) – இறைவனின் தேவைப்பாடல் இசையில் பயன்படுத்தப்படும்.
- ஷேக்கரை (Shekere) – பூச்சோலைகளால் செய்யப்பட்ட கசக்கக்கூடிய இசைக்கருவி.
இந்த இசைக்கருவிகள், தெய்வ வழிபாட்டிலும், திருமண நிகழ்ச்சிகளிலும், மரணச் சடங்குகளிலும் உள்தள உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
நடன மரபுகள்:
உடல் முழுவதும் உயிரின் இசைக்கு எதிரொலிப்பவையே இவர்களின் நடனங்கள். சீரான உடல் அசைவுகளும், குறிப்பான கையாளல்களும் கொண்டவை. ஒவ்வொரு நடனமும் ஒரு கதையைச் சொல்லும். தெய்வ வழிபாடு, மழை வேண்டுதல் நடனங்கள் மற்றும் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் நடனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவர்களின் நம்பிக்கையில், நடனம் என்பது ஒரு ஆன்மிக வழியாகவும், முன்னோர்களுடன் உறவாடும் நேரத்தையும் பிரதிபலிக்கும் செயல் எனக் கருதப்படுகிறது.
மத நம்பிக்கைகள் மற்றும் ஆன்மிக வாழ்க்கை
இப்பழங்குடி மக்களின் வாழ்க்கையின் நெஞ்சமாகத் திகழ்வது அவர்களின் மத நம்பிக்கைகள்தான். இயற்கையின் சக்திகளைத் தெய்வங்களாகப் பார்த்து வழிபடுவதும், ஆன்மிக ஒழுங்குகளுடன் வாழ்வதும் இவர்களின் வாழ்வியல் வழக்கம்.
ஒரிஷாக்கள் (Orishas) – தெய்வங்களின் பேரினம்: யொரூபா மக்கள் வணங்கும் தெய்வங்கள் ஒரிஷா என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஒரிஷாவும் இயற்கையின் ஒரு குறிப்பிட்ட சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
- ஓபாடாலா (Obatala): படைப்பின் தெய்வம்; மனிதனை உருவாக்கியவர் என நம்பப்படுகிறது.
- ஓஷூன் (Oshun): அன்பு, அழகு மற்றும் ஆற்று நீரின் தெய்வமாக வலம்வருகிறது.
- ஷாங்கோ (Shango): இடி, மின்னல், நெருப்பு மற்றும் நீதியின் வீரத் தெய்வம்.
- ஓயா (Oya): காற்று, புயல் மற்றும் மாற்றத்தின் கடவுள்.
- எஷூ (Eshu): தெய்வங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான தூதுவராகவும் வழிகாட்டியாகவும் செயல்படும் தெய்வம்.
இவர்களில் ஒவ்வொருவருக்கும் தனி வழிபாட்டு முறை, ஆடைகள், இசை மற்றும் விழாக்கள் உள்ளன. தெய்வ வழிபாட்டு முறையில், குறிப்பாக ஒரிஷாக்களை வணங்கும்போது, இசை, நடனம் மற்றும் சடங்கு உணவுகள் மிக முக்கியமானவை. தமிழகத்தில் நாட்டார் தெய்வங்கள் வணங்கப்படுவது போல், ஒவ்வொரு குலத்திற்கும் தங்களது குடும்ப தெய்வம் இருக்கிறது. இளைய தலைமுறை, மூத்தோரிடம் இருந்து இந்த வழிபாட்டு முறைகளைக் கற்றுக்கொள்கிறது.
முன்னோர் வழிபாடு (Ancestor Veneration):
தங்கள் முன்னோர்களுக்கு மிகுந்த மதிப்பளிக்கின்றனர். இறந்தவர்களின் ஆன்மாக்கள் வீட்டிலும் சமூகத்திலும் எப்போதும் இருந்துக்கொண்டே இருப்பதாக நம்புகிறார்கள். முன்னோர்களுக்காகச் சிறப்பு நாள்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இஃபா (Ifá) ஜோதிடம்:
இவர்கள் மதத்தில் இஃபா எனப்படும் தெய்வீக அறிவுக் கோவை முக்கியமானதாகும். யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் இது 2005-ஆம் ஆண்டில் மனிதகுலத்தின் வாய்வழி மற்றும் அருவமான பாரம்பரியத்தின் தலைசிறந்த படைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதை வழிகாட்டும் நபர்கள் பபாலாவோ (Babalawo) என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் ஓபெலே (Opele) எனப்படும் சங்கிலி போன்ற கருவிகளைக் கொண்டு எதிர்காலத்தைப் பார்த்து நெறிகள் கூறும் தீர்க்கதரிசிகள்.
அரசின் திட்டங்களும் சவால்களும்
கல்வி மற்றும் வளர்ச்சி:
ஊரக மற்றும் நகர வளர்ச்சியின் தாக்கம் என்ற வகையில் பார்க்கும் போது நகரங்களில் கல்வி வசதிகள் மிகுந்துள்ளன; ஆனால், ஊரகப் பகுதிகளில் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாகவும் தரமற்றதாகவும் இருக்கிறது. பொருளாதாரத் தடைகள் காரணமாக, சிறிய குடும்பங்கள் கூட கல்விச் செலவுகளைத் தாங்க முடியாமல், குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் நிலை ஏற்படுகிறது. கல்விக்கான உதவித்தொகைத் திட்டங்கள் கூட எல்லோருக்கும் சமமாகப் போய்ச் சேரவில்லை என்பதுதான் உண்மை.
கல்வி அமைப்பில் சிக்கல்கள்:
கல்வி கட்டமைப்பில் குழப்பம், பாடத்திட்டங்களில் அடிக்கடி மாறும் விதிகள், அரசியல் தாக்கங்கள் மற்றும் பாடப்புத்தகங்களின் தரக்குறைபாடுகள் போன்றவை கல்வித் தரத்தைப் பெரிதும் பாதிக்கின்றன. சில பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது வருத்தம் அளிக்கிறது. மேலும், பாரம்பரிய மொழிக்குக் குறைவான இடம் அளித்து, பல பள்ளிகளில் துணை மொழி என்று மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது (மேற்கோள் காட்டுவது என்றால் இந்தித் திணிப்பைப் போல). இது, மாணவர்கள் தங்கள் பண்பாட்டைப் பின்பற்றுவதைக் குறைத்துவிடும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
அரசு மற்றும் யொரூபா மக்களிடையே நிலவும் மோதல்கள்
சுயாட்சிக் கோரிக்கை:
யொரூபா மக்கள் தங்கள் பெரும்பான்மைப் பகுதிகளை ஒன்றிணைத்து, தனி “யொரூபா நாடு” எனப் பிரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது ஒரு முக்கிய அரசியல் கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கையை நைஜீரிய அரசு நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானதாகக் கருதுகிறது.
பாதுகாப்புச் சூழல்:
யொரூபா பிரதேசங்களில் நிலவும் கொலைகள், கொள்ளைகள் மற்றும் பணப் பரிமாற்ற மோசடிகள் போன்றவற்றில் அரசு நடவடிக்கையின்மையே மக்களின் அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளது.
மொழி மற்றும் பண்பாட்டு அடையாளம்:
யொரூபா மொழி, கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை அரசு புறக்கணிப்பதாக மக்கள் நம்புகிறார்கள். கல்வி, ஊடகம் மற்றும் அரசுப் பணிகளில் யொரூபா அடையாளம் குறைவாகவே பிரதிபலிக்கிறது. இதன் விளைவாக, யொரூபா தேசியவாத இயக்கங்கள் உருவாகி, அவை இம்மக்களின் உரிமைகளுக்காகப் போராடுகின்றன. இவ்வியக்கங்கள், யொரூபா பகுதி மக்களிடையே தேசிய இன அடையாளத்தை வலுவாக நிலைநிறுத்த முயற்சி செய்கின்றன.
இதன் எதிரொலியாக, அரசு யொரூபா பிரிவினைவாத இயக்கங்களை அரசியல் தீவிரவாதம் எனக் குற்றம்சாட்டி, யொரூபா போராளிகளைக் கைது செய்தல், ஊடகங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை அதிகரிக்கின்றது. மனம் நொந்த மக்கள், அரசாங்கத்தின் செயலற்ற நிலையை எதிர்க்கின்றனர். அவர்கள் தங்கள் மொழி மற்றும் கலாச்சார உரிமைகளுக்கு ஆதரவு கோருகின்றனர்; அதுவும் சமூக நியாயம் மற்றும் சமபங்குச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டுதான் போராடுகிறார்கள்.
2020-க்குப் பிந்தைய யொரூபா அரசியல் போராட்டங்கள்
2020-ஆம் ஆண்டு நைஜீரியாவில் பல பரபரப்பான நிகழ்வுகள் நடைபெற்றன. குறிப்பாக, #EndSARS எனப்படும் காவல்துறையின் கொடூரத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி, யொரூபா மக்களிடையே அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில் மிகுந்த தளர்வை ஏற்படுத்தியது. இதனையடுத்து, யொரூபா மக்கள் தங்கள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினர்.
#EndSARS மற்றும் யொரூபா மக்களின் கோபம்: SARS (Special Anti-Robbery Squad) எனும் போலீஸ் பிரிவு, மனித உரிமை மீறல்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான வன்முறையால் நாடெங்கும் கண்டனத்தை எதிர்கொண்டது. யொரூபா மக்கள் அதிகம் வசிக்கும் லாகோஸ் போன்ற நகரங்களில் அதிகளவில் இளைஞர்கள் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டங்களில் பலர் படுகாயம் அடைந்தனர், சிலர் உயிரிழந்தனர். அரசு கையாண்ட விதத்தில் அநீதி இருப்பதாக மக்கள் உணர்ந்தனர்.
Ilana Omo Oodua இயக்கத்தின் எழுச்சி: 2021-ல், பிரபல யொரூபா தேசியவாதியான சண்டே இக்போஹோ (Sunday Igboho), யொரூபா நாட்டிற்கான சுயாட்சிக் கோரிக்கையுடன் தலைதூக்கினார். அவர், “Yoruba Nation Rally” எனப்படும் பேரணிகளைப் பல நகரங்களில் நடத்தினார். இது நைஜீரிய அரசை அதிர வைத்தது. இதனால், அவர் மீது பயங்கரவாத மற்றும் பிரிவினைவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் மோசடி செய்து வெளிநாட்டு தப்பிச் செல்வதாக கூறி 2021 ஜூலையில், அவர் மீது அதிகாரிகள் தாக்குதல் நடத்தினர். அதன் பின்னர் பெனின் நாடு (Benin Republic) வழியாகத் தப்பிச் சென்றார். யொரூபா மக்கள் இதைத் தனிநபர் உரிமை மீறல் என்றும், அரசின் வன்முறை என்றும் கண்டனம் தெரிவித்தனர்.
யொரூபா மக்களின் எதிர்பார்ப்புகளும், அரசியல் சூழலும்
பாதுகாப்பு: யொரூபா மக்கள் தங்களது நிலங்களில் மர்மமான தாக்குதல்கள், கொள்ளைகள் மற்றும் உயிர் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பு கோருகிறார்கள். அவர்களின் விருப்பம் பிரிவினை மட்டுமல்ல, கடந்தகால வரலாற்றில் இருந்ததைப் போன்ற தனித்துவமான அடையாளம், மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு வேண்டும் என்பதே. 2022–2024-ல் இது தொடர்பாகப் பல அமைதிப் பேச்சுவார்த்தைகளும், மக்கள் கருத்துக் கேட்புகளும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
அரசியல் மாற்றம்: யொரூபா சமூகத்திலிருந்து முதலமைச்சர் அல்லது தலைமை அதிகாரிகள் வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
அரசின் நடவடிக்கைகள் உள்நோக்கமா அல்லது அடக்குமுறையா? எனக் கேள்வி எழக் காரணமே சண்டே இக்போஹோ, நமாதி கானு (Nnamdi Kanu – இக்போ மக்களின் தலைவர்) ஆகிய இருவரும் பிரிவினைவாத இயக்கங்களை வழிநடத்துகிறார்கள் என்று காரணம் சொல்லி கைது செய்யப்பட்டனர். இதனை யொரூபா மக்கள் அரசின் “கடுமையான அடக்குமுறை” எனக் கண்டிக்கின்றனர். அரசோ, இது நாட்டின் ஒற்றுமையைக் காப்பதற்கான நடவடிக்கை என்று விளக்குகிறது.
இதற்கு என்னதான் தீர்வு?
யொரூபா மக்களும், நைஜீரிய அரசும் ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல. ஆனால், உரிய உரிமைகள் மறுக்கப்படும்போது அந்த எதிர்ப்பு எழுவதில் வியப்பில்லை. சமரசத்திற்கும், உரிமை அங்கீகாரத்திற்கும் இடமளிக்கும் வகையில், மனிதநேயமும் அரசியல் நுட்பமும் நிரம்பிய நடவடிக்கைகள் தேவை. 2020-க்குப் பிறகு, யொரூபா மக்கள் அரசை எதிர்த்துப் போராடும் போக்கில் பல்வேறு புதிய பரிமாணங்கள் உருவாகியுள்ளன. அழிவை நோக்கிய வழியில் அல்லாமல், உரிய உரிமைகளுக்கான போராட்டம், சிந்தனைமிக்க கலந்துரையாடலுடன் தொடர வேண்டும் என்பதே நியாயமான முடிவாக இருக்கும்.
– தீபா ஜெயபாலன்