அரசியல்இந்தியா

மகாராஷ்டிர தேர்தல் – முடிவுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதா? – ராகுல் காந்தி

549 (1)

பிப்ரவரி 3ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற விவாதத்திலும், அதைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும், நவம்பர் 2024-ல் நடைபெற்ற மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து என்னுடைய ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தேன். இந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்படும் விதம் குறித்து எனக்கு எப்பொழுதும் அதன் நேர்மைத்தன்மை மீது எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை. ஆனால், தற்போது அது குறித்த சந்தேகம் ஆழமாக ஏற்பட்டுள்ளது. இதைச் சிறிய அளவில் அல்ல, மிகப்பெரிய அளவில் தொழில்முறையாக நடத்தப்படும் ஒரு ஏமாற்று வித்தையாகப் பார்க்கிறேன். அரசியல் சாசன அமைப்புகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இதைச் செய்கின்றனர்.

இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில தில்லுமுல்லுகள் நடந்திருக்கலாம். ஆனால், நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் மிக வெளிப்படையாகவே தில்லுமுல்லுகள் நடந்துள்ளன. இந்தத் தில்லுமுல்லுகளை மறைப்பதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்ட பின்னரும், தனிப்பட்ட தரவுகளைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியமின்றி, அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே அவற்றைக் காட்டிக்கொடுக்கின்றன. அவற்றை ஒவ்வொரு படிநிலையாக விளக்குகிறேன்.

1. தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் சட்டத்தில் திருத்தம்

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இந்தியப் பிரதமர், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகிய மூவர் அடங்கிய குழுவே அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால், ஒன்றிய அரசு, இந்தக் குழுவில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஒன்றிய உள்துறை அமைச்சரை இணைத்துக்கொண்டதன் மூலம், அக்குழுவில் இடம்பெற்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்களைக் கருத்தில்கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் ஆக்கியதோடு, தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்தல் ஆணையர்களாக நியமிக்க முடியும் என்பதாலும், தாங்கள் ஆடப்போகும் ஆட்டத்திற்கு நடுவராகத் தங்களின் ஆட்களே இருந்தால் இன்னும் பல தில்லுமுல்லு வேலைகளை செய்ய முடியும் என்பதாலும் இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தனர்.

2. வாக்காளர் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டுதல்

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவின் வாக்காளர் எண்ணிக்கை 8.98 கோடியாக இருந்தது. மே 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், அந்த எண்ணிக்கை 9.29 கோடியாக உயர்ந்தது. அதாவது, ஐந்து ஆண்டுகளில் 31 லட்சம் வாக்காளர்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், நவம்பர் 2024-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை 9.70 கோடியாக உயர்ந்தது. வெறும் ஐந்து மாதங்களில் 41 லட்சம் வாக்காளர்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், மகாராஷ்டிர மாநில அரசின் மக்கள்தொகை மதிப்பீட்டின்படி, அம்மாநிலத்தில் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையே 9.54 கோடிதான்.

3. வாக்கு சதவீதத்தை அதிகரித்துக் காட்டுதல்

இவ்வாறு அதிகப்படுத்தப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையுடன், பதிவான வாக்கு சதவீதத்தையும் அதிகரித்துக்காட்டியதன் மூலம், அவர்களால் தங்கள் இலக்கை நோக்கிச் சுலபமாக முன்னேற முடிந்தது. தேர்தல் வழக்கம் போல மிகவும் அமைதியாக நடந்து முடிந்தது. வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்திவிட்டு வீடுகளுக்குத் திரும்பினர். மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட்டனர். எந்த வாக்குச்சாவடியிலும் மாலை 5 மணிக்கு மேல் நீண்ட வரிசையோ கூட்டமோ காணப்படவில்லை.

மாலை 5 மணி நிலவரப்படி, 58.22 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னரும் வாக்கு சதவீதம் உயர்ந்து கொண்டே இருந்தது. அடுத்த நாள் காலையில், இறுதி வாக்குப்பதிவு சதவீதம் 66.05% என அறிவிக்கப்பட்டது. இது, முன் எப்போதும் இல்லாத வகையில் 7.83 சதவீதம், அதாவது 76 லட்சம் வாக்குகள் அதிகமாகும்.

Image

4. மிகத் துல்லியமாகக் குறிவைத்து நடத்தப்பட்ட போலி வாக்குப்பதிவு, பாஜகவை வெற்றியடையச் செய்தது

மேலும் சில ஆச்சரியங்கள் நமக்காகக் காத்திருக்கின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் சுமார் ஒரு லட்சம் வாக்குச்சாவடிகள் உள்ளன. 2024 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், பாஜக குறைவான வாக்குகளைப் பெற்ற 85 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 12,000 வாக்குச்சாவடிகளில்தான் இந்த அதிகப்படியான வாக்காளர் எண்ணிக்கை உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 12,000 வாக்குச்சாவடிகளில்தான் மாலை 5 மணிக்கு மேல்  அதிகப்படியான வாக்குப்பதிவு நடந்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கூடுதலாக 600 பேர் வாக்களித்துள்ளனர். ஒருவருக்கு ஒரு நிமிடம் என்று கணக்கிட்டால்கூட, இதற்குக் கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஆகியிருக்க வேண்டும். ஆனால், அப்படி எந்தவொரு அசாதாரண நிகழ்வும் நடைபெறவில்லை. அப்படியென்றால், இந்த அதிகப்படியான வாக்குப்பதிவு எப்படி நடந்திருக்க முடியும்? இந்தத் தில்லுமுல்லுகளின் விளைவாகவே, ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வாய்ப்பிருந்த இந்த 85 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பாலானவற்றில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

அதிகரித்த வாக்குப்பதிவு, இளைஞர்களின் உற்சாகத்தை வெளிப்படுத்துகிறது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், இந்த ‘இளைஞர்களின் உற்சாகம்’ குறிப்பிட்ட 12,000 வாக்குச்சாவடிகளில் மட்டுமே வெளிப்பட்டு, மீதமுள்ள 88,000 வாக்குச்சாவடிகளில் வெளிப்படாதது ஏன் என்பது விந்தையாக உள்ளது அல்லவா? ஆனால் கசப்பான உண்மை இதுதான்.

இதற்கு மிகச் சிறந்த உதாரணமாக, கம்டீ சட்டமன்றத் தொகுதியை நாம் இங்கே காணலாம். 2024 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் 1,36,000 வாக்குகளையும், பாஜக 1,19,000 வாக்குகளையும் பெற்றன. ஆனால், நவம்பர் 2024-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ் 1,34,000 வாக்குகளே பெற்றது. மாறாக, பாஜக 1,75,000 வாக்குகளைப் பெற்றது. இது கிட்டத்தட்ட 56,000 வாக்குகள் அதிகமாகும். இந்த இரு தேர்தல்களுக்கும் இடைப்பட்ட காலத்தில், இத்தொகுதியில் 35,000 புதிய வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாகப் பதிவு செய்யப்பட்ட 35,000 வாக்காளர்களும், ஏற்கெனவே இருந்தவர்களில் ஒரு பகுதியினரும் பாஜகவின் தாமரைச் சின்னத்திற்கே வாக்களித்திருப்பது ஆச்சரியம் அல்லவா! அந்த அளவிற்குத் தங்கள் சின்னத்தில் ஏதோ ஒரு மாயாஜால காந்த சக்தியை வைத்துள்ளார்கள் போலும்.

மேலே குறிப்பிட்ட நான்கு படிநிலைகள் மூலம், தாங்கள் போட்டியிட்ட 149 தொகுதிகளில் 132-ல் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. அதாவது, போட்டியிட்ட தொகுதிகளில் 89% வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இது முன்னெப்போதும், எங்கும் கண்டிராத ஒரு வெற்றியாகும். ஆனால், ஐந்து மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இவர்களின் வெற்றி விகிதம் வெறும் 32% மட்டுமே.

5. ஆதாரங்களை மறைத்தல்

தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் எந்தப் பதிலையும் அளிக்காமல் அமைதி காத்தது. 2024 மே நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நவம்பர் சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றின், வாக்காளர் புகைப்படத்துடன் கூடிய முழுமையான வாக்காளர் பட்டியலை (Marked Electoral Roll) வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைக்கூட தேர்தல் ஆணையம் அகங்காரத்துடன் நிராகரித்தது.

இதைவிட மோசமாக, குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளின் காணொலிப் பதிவுகளையும், கண்காணிப்புக் கேமரா பதிவுகளையும் வெளியிட வேண்டும் என்று மகாராஷ்டிர உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தேர்தல் ஆணையம், ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடன், தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் பிரிவு 93(2)-ல் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்து, தேர்தல் தொடர்பான மின்னணு ஆவணங்களை வெளிநபர்களுக்கு அளிக்க இயலாது என மாற்றியது. இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்ட நேரமும் முக்கியமானது. போலி வாக்காளர் அட்டைகள் தொடர்பான விவகாரம் எழுந்த காலகட்டத்தில் இது கொண்டுவரப்பட்டது, போலி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டதை மறைக்கும் நோக்கத்தை இது உறுதிப்படுத்துகிறது. இது ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் மட்டுமே.

வாக்காளர் பட்டியலும் கண்காணிப்புக் கேமரா பதிவுகளுமே ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள். ஆனால், அவற்றை வெறும் அலங்காரப் பொருட்களாக வைத்திருக்கவே தேர்தல் ஆணையம் விரும்புகிறது.

இந்தியக் குடிமக்களுக்குத் தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பார்க்கும் உரிமை உண்டு. தனிநபர்களோ, அமைப்புகளோ அவற்றை மக்களிடமிருந்து மறைத்துவைக்க முடியாது. அதேபோல, வாக்காளர் பட்டியலிலிருந்து குறிவைத்து நீக்கப்பட்ட வாக்காளர்கள், கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட வாக்குச்சாவடிகள் போன்ற பிற தில்லுமுல்லுகளையும் தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யும்போதுதான் உறுதிப்படுத்த முடியும். மேலும், அந்த ஆவணங்களை ஆய்வு செய்வதன் மூலமே, இந்தத் தில்லுமுல்லுகளை அவர்கள் எவ்வாறு செய்தார்கள், இந்த உத்திகள் வேறு எந்தெந்தத் தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டன, இதற்கு யார் யாரெல்லாம் உடந்தையாக இருந்தனர் என்பன போன்ற உண்மைகளை வெளிக்கொணர முடியும். ஆனால், இந்த ஆவணங்களைப் பெறும் முயற்சியில் ஈடுபட்ட பொதுநல விரும்பிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு முயற்சிக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டது.

2024 நவம்பரில் நடந்த மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் இந்தளவுக்கு மோசடியான வேலைகளை யார் செய்திருப்பார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றல்ல. ஆனால், இது அரசியல் சாசன அமைப்புகள் மீதும், மக்கள் ஜனநாயகம் மீது வைத்துள்ள நம்பிக்கை மீதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் மிக வெளிப்படையாக தெரிகிறது. இது ஒரு திட்டமிட்ட சூதாட்டம். தேர்தலில் சூதாட்டம் என்பது ஜனநாயகத்திற்குக் கிட்டும் மிகக் கொடிய விஷமாகும்.

கட்டுரை ஆசிரியர்: ராகுல் காந்தி

தமிழி: சரவணன் கந்தசாமி

நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

Leave a Reply