பாலஸ்தீன காசா பகுதியின் கடல்வழிப் பாதையை சட்டவிரோதமாக கடந்த 18 ஆண்டுகளாக அடைத்து வைத்திருக்கிற இஸ்ரேலைத் தாண்டி நியாயமான முறையில் ஒரு கப்பலை எடுத்துக்கொண்டு உலக மக்களிடம் இருந்து பெறப்பட்ட உணவுப் பொருட்களுடன் 12 பேருடன் இணைந்து சென்ற தியாகோவை இஸ்ரேலிய கடத்திவைத்திருக்கிறது. அதுகுறித்து அவரது இணையர் ஒரு உருக்கமான வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், இறுதியாகத் தங்களுடைய குழந்தைக்கு இஸ்ரேலிய சிறையில் இருந்தே தியாகோ எழுதிய கடிதத்தையும் அவர் வாசித்துக்காட்டினார்.
வீடியோவில் தியாகோவின் இணையர் பேசிய வீடியோவின் தமிழாக்கம்:
என் கணவருக்காகக் காத்திருக்கிறேன்…
நான் தியாகோ அவிலாவின் மனைவி. பிரேசிலில் அவருக்காகக் காத்திருக்கிறேன்.
இஸ்ரேல் அவரைக் கைதுசெய்ததில் இருந்து இன்னும் நான் அவரிடம் பேசவில்லை. அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
இன்று அதிகாலை வேளையில், அதாவது பிரேசிலில் நள்ளிரவு நேரமாக இருக்கையில், அவருடைய வழக்கறிஞர் எனக்கு அலைபேசியில் அழைத்தார். என் கணவர் தியாகோவைப் பார்க்க அவர் செல்வதாகக் கூறினார். சில மணிநேரம் கழித்து மீண்டும் அழைத்தார். அப்போது, என் கணவரைத் தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதாகச் சொன்னார்.
நேற்று அவரைப் பார்த்தபோது, அவர் ஒரு சாதாரண சிறை அறையில்தான் இருந்தார்.
இஸ்ரேலியப் படையினர் தன்னை மிரட்டியதாக வழக்கறிஞரிடம் தியாகோ கூறியுள்ளார். ‘வழக்கறிஞர் உட்பட யாருடனும் பேச அனுமதிக்க மாட்டோம்’ என்றும், ‘வெளிச்சம், காற்றோட்டம் இல்லாத ஓர் இருட்டறையில் தனியாக அடைத்து வைப்போம்’ என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் மிரட்டியுள்ளனர். இது ஒரு உளவியல் சித்திரவதை என்பது உங்களுக்குத் தெரியும்.
அதற்கு எங்கள் வழக்கறிஞர், ‘அது சட்டப்படி தவறு, அப்படிச் செய்ய உங்களுக்கு உரிமை இல்லை, மீறிச் செய்தால் உயர் நீதிமன்றம் செல்வேன்’ என்று உறுதியாகக் கூறியுள்ளார்.
‘அடுத்த விமானத்திலேயே அவரை அனுப்பிவிடுவோம்’ என்று ஒருபுறம் சொல்கிறார்கள். மறுபுறம், ஜூலை மாதம் விசாரணைக்குத் தேதி குறித்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இப்படி முன்னுக்குப் பின் முரணான தகவல்களே வருகின்றன. அதனால், என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மிகுந்த பதற்றத்தில் நான் இருக்கிறேன்.
அவர் கைது செய்யப்படுவதற்கு முன்புவரை நான் நிம்மதியாகவே இருந்தேன். அந்தப் பயணத்தின் நோக்கம் எனக்குத் தெரியும். அந்தப் பயணத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அது தேவையானது மட்டுமல்ல, அவசரமானதும்கூட என்பது எனக்குப் புரியும்.
கைது செய்யப்படும் வரை, நான் தியாகோவிடம் தினமும் பேசிக்கொண்டுதான் இருந்தேன். எல்லாம் நன்றாகவே இருந்தது.
கைதுக்குப் பிறகு, தூதரகம் என்னை அவருடன் பேச வைக்க முயன்றது. ஆனால், இஸ்ரேலியப் படையினர் அனுமதிக்கவில்லை. வழக்கறிஞர் அவரை என்னுடன் பேச வைக்க முயன்றார். அவர் கண்முன்னேதான் என் கணவர் இருந்தார். அப்போதும் இஸ்ரேலியப் படையினர் அனுமதிக்கவில்லை.
எனக்கு தியாகோவைத் தெரியும். அவர் அன்பே உருவானவர். காசாவில் மக்கள் அனுபவிக்கும் துயரங்களோடு ஒப்பிடும்போது, தன் துயரம் ஒன்றுமே இல்லை என்றுதான் அவர் இப்போது நினைத்துக்கொண்டிருப்பார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். 1948 முதல் பாலஸ்தீன மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளுக்கு முன்னால் இது பெரிதல்ல.
அவர் உறுதியாக இருக்கிறார் என்று நம்புகிறேன். என்னைவிடவும் நிச்சயமாக உறுதியாக இருப்பார்.
இன்று, எங்கள் குழந்தைக்காக அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். வழக்கறிஞர் அந்தக் கடிதத்தை வாங்கி, எனக்குப் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார். எங்கள் மகள் தெரசாவிற்கு ஒரு வயதுதான் ஆகிறது.
தனிமைச் சிறையிலிருந்து ஒரு வயது மகளுக்கு தந்தை தியாகோ எழுதிய உருக்கமான கடிதம்
அன்புள்ள தெரசா,
இந்த நாட்களில் அப்பா உன்னுடன் இல்லாததற்கு என்னை மன்னித்துவிடு. ஆனால், உன்னைப் போலவே அழகாக இருக்கும் மற்றக் குழந்தைகளுக்கு உணவு கொண்டு சேர்க்கவே அப்பா முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.
ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரமாக வாழ, தன் சமூகத்தில் மகிழ்ச்சியாக இருக்க, உணவு, தண்ணீர் மற்றும் உயிர்வாழத் தேவையான அனைத்தையும் பெற உரிமை உண்டு என்பதைப் புரிந்துகொள்ளாத சிலரால் அந்தக் குழந்தைகள் பட்டினியில் வாடுகிறார்கள்.
நம் தலைமுறையின் மிகப்பெரிய மனித உரிமை மீறலைத் தடுத்து நிறுத்தப் போராடும் கோடிக்கணக்கான மக்களில் ஒருவன்தான் உன் அப்பாவும். இஸ்ரேலியச் சிறையில், தனிமைச் சிறையில், உண்ணாவிரதம் இருந்து நான் இதைச் செய்வதால், வீதிகளில் போராடுபவர்கள், ஊடகத் தடையை உடைப்பவர்கள், பொருட்களைப் புறக்கணிப்பவர்கள், அதிலும் குறிப்பாக, எட்டு தசாப்தங்களாக இனப்படுகொலையை எதிர்கொண்டு வாழும் ஒவ்வொரு பாலஸ்தீனியரையும் விட நான் உயர்ந்தவன் அல்ல. நம் தலைமுறையின் இந்த வரலாற்றுக் கொடுமைக்கு எதிராக நாமனைவரும் ஒன்றாகவே குரல் எழுப்புகிறோம்.
நான் விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன். அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த பூமி என்று அறியப்படும் நம் தாய்நாடான பிரேசில், இஸ்ரேலுடனான உறவைத் துண்டிக்கும் தைரியத்தைப் பெறும் என்றும், இந்த காலனித்துவ, இனவெறி அமைப்பின் குற்றத்திற்கு அது துணை போகாது என்றும் நம்புகிறேன்.
காசாவில் உணவைக் கொண்டு சேர்ப்பதற்கு சென்ற சுதந்திரக் கப்பல் பயணத்தில் பங்கேற்ற நம் நண்பர்கள் அனைவரும் விரைவில் வீடு திரும்புவார்கள். அப்போது நானும் வீட்டிற்கு வருவேன்.
ஒவ்வொரு நாளும் உன்னையும் உன் அம்மாவையும் பற்றி நினைத்துக்கொண்டேதான் இருக்கிறேன். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். அதனால்தான், நீ வளரும் இந்த உலகம் சுரண்டலாலும், ஒடுக்குமுறையாலும், இயற்கை அழிவாலும் நிறைந்திருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
துனிசியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் காசாவை நோக்கிப் பேரணியாக வருகிறார்கள் என்ற செய்தியை உன் அம்மாவிடமும், இந்தக் கடிதத்தைப் படிக்கும் அனைவரிடமும் சொல். நாம் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
அப்பாவுக்காகப் பயப்படாதே. நான் நலமாக இருக்கிறேன். நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
விரைவில் வீடு திரும்புவேன்.
அன்புடன்,
அப்பா (தியாகோ)
– லாரா (தியாகோவின் இணையர்)
பின்குறிப்பு: இக்கட்டுரை வெளியாகும்போது தியாகோ விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இஸ்ரேலிய நிலத்திற்குளோ அல்லது இஸ்ரேலிய கடல் எல்லைக்குள்ளோ வராத அவரைக் கடத்தி, சிறையில் வைத்து, கொடுமைப்படுத்தியதற்கு எவ்வித விளக்கத்தையும் இஸ்ரேல் கொடுக்கவில்லை. அத்துடன், தன்னுடைய மகளுக்கு தியாகோ எழுதிய கடிதம் இப்போதும் நியாயமானதாகவும் தேவையானதாகவும் இருப்பதால் இக்கட்டுரையை வெளியிடுகிறோம்.
சிறப்பு தோழர்
உருக்கமான கடிதம். விடுதலை என்றவுடன் மனம் சற்று ஆறுதல் அடைந்தது. ஆனாலும் காசா மக்களுக்கு உணவு கொடுக்க விடாத அயோக்கியன் இனவெறியன் நெதன்யாகுவின் வெறித்தனம் கடும் கோபத்தை வரவழைத்தது. நல்ல மனம் கொண்டு கப்பல் வழியாக உணவுப் பொருளை கொண்டு செல்ல துடித்த மனதிற்கு கோடானு கோடி நன்றிகள். அந்தத் தகவலை கட்டுரையாக கொடுத்த தோழர் இ. பா. சிந்தன் அவர்களுக்கு மிக்க நன்றி. உலக மக்கள் கடும் நெருக்கடியை இஸ்ரேலுக்குக் கொடுத்தால் காசா மக்கள் விரைவில் விடுதலை பெறுவர்.