
-விஜய்பிரசாத்
தமிழில்: பொன்சங்கர்
சர்வதேச நாணய நிதியம் (IMF) ஜனநாயக நெறிமுறைகளுக்கு மாறாகவே செயல்படுகிறது. இங்கு, ஒரு நாட்டின் வாக்களிக்கும் சக்தி அதன் மக்கள்தொகையைச் சார்ந்தது அல்ல, மாறாக அதன் பொருளாதார வலிமையைச் சார்ந்தது. எந்தவொரு முக்கிய முடிவையும் தடுக்கும் வீட்டோ அதிகாரம் அமெரிக்காவிடம் உள்ளது. இதனால், தன் விருப்பங்களுக்கு ஏற்ப கொள்கைகளை அது வடிவமைக்கிறது.
வாக்களிக்கும் அதிகாரத்தில் ஏற்றத்தாழ்வு
சர்வதேச நாணய நிதியத்தைப் பொறுத்தவரை, வடபுல நாடுகளில் உள்ள ஒருவரின் வாக்கு, தென்புல நாடுகளில் உள்ள ஒன்பது பேரின் வாக்குகளுக்குச் சமம். நிதியத்தின் வாக்களிக்கும் அதிகாரம் குறித்த தரவுகளையும், இரு தரப்பு நாடுகளின் மக்கள்தொகையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தக் கணக்கீடு தெளிவாகிறது. ஒவ்வொரு நாட்டின் ‘ஒப்பீட்டுப் பொருளாதார நிலையை’ (Relative Economic Position) அடிப்படையாகக் கொண்டே, நிதியத்தின் நிர்வாகக் குழுவிற்குப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை வழங்கப்படுகிறது. இந்த நிர்வாகக் குழுவே நிதியத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கிறது. கடன் பெறும் நாடுகளுக்கு முக்கியமான இந்த பலதரப்பு நிறுவனத்தில், வடபுல நாடுகளே அதிகப் பிரதிநிதித்துவம் கொண்டிருப்பதை நிதியத்தின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
அமெரிக்காவின் வீட்டோ அதிகாரமும் செல்வாக்கும்
எடுத்துக்காட்டாக, உலக மக்கள்தொகையில் 4.22% மட்டுமே கொண்டுள்ள அமெரிக்கா, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவில் 16.49% வாக்குகளைக் கொண்டுள்ளது. நிதியத்தின் விதிகள்படி எந்தவொரு முக்கிய மாற்றத்திற்கும் 85% வாக்குகள் தேவை என்றாலும், அமெரிக்கா நடைமுறையில் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இது நிதியத்தின் முடிவுகளில் கணிசமான தாக்கத்தை செலுத்த அனுமதிக்கிறது. இதன் விளைவாக, நிதியத்தின் மூத்த அதிகாரிகள், அமெரிக்கா வகுக்கும் கொள்கைகளுக்கு இணங்கி நடக்கின்றனர். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகம் வாஷிங்டனில் இருப்பதால், அதன் கொள்கை உருவாக்கம் மற்றும் முக்கிய முடிவுகளுக்கு அமெரிக்க கருவூலத் துறையுடன் அடிக்கடி கலந்தாலோசிக்கப்படுகிறது.
வெனிசுலா விவகாரம்: அமெரிக்காவின் தலையீடு
உதாரணமாக, வெனிசுலா அரசை அங்கீகரிப்பதை நிறுத்த அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்தது. தனது முடிவைப் பின்பற்றும்படி நிதியத்திற்கும் அழுத்தம் கொடுத்தது. நிதியம் நிறுவப்பட்ட காலத்திலிருந்தே வெனிசுலா அதில் உறுப்பினராக இருந்து வருகிறது. பலமுறை நிதியத்திடம் உதவியும் நாடியுள்ளது. 2007-ல் நிலுவையிலிருந்த கடன்களை முழுமையாகச் செலுத்திய பின், குறுகால உதவிகளுக்காக நிதியத்தை நாடுவதில்லை என அது முடிவு செய்தது. மாறாக, வெனிசுலா அரசாங்கம் ‘தெற்கு வங்கி’யை (Bank of the South) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது. செலுத்து இருப்புப் பற்றாக்குறையால் (Balance of Payments deficit) அவதியுறும் நாடுகளுக்கு குறுகியகாலக் கடன்களை (Bridge Loans) வழங்கும் நோக்கத்துடன் தெற்கு வங்கியை உருவாக்க முன்மொழிந்தது.
பெரும் தொற்றுநோய்க் காலத்தில், மற்ற நாடுகளைப் போலவே வெனிசுலாவும் தனக்கிருக்கும் சிறப்பு எடுப்புரிமை (SDR) மூலம் 5 பில்லியன் டாலர் நிதியுதவி கோரி நிதியத்தை நாடியது. இந்த நடவடிக்கை, நிதியத்தின் உலகளாவிய பணப்புழக்கத்தை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக, வெனிசுலாவுக்கு அந்தத் தொகையை வழங்க நிதியம் மறுத்துவிட்டது. இதற்கு முன்பும், வெனிசுலாவின் 400 மில்லியன் டாலர் SDR கோரிக்கையை நிதியம் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, ஹுவான் குவைடோவை வெனிசுலாவின் அதிபராக அங்கீகரித்திருந்தாலும், நிதியமோ நிக்கோலஸ் மதுரோவின் அரசில் நிதியமைச்சராக இருந்த சிமோன் அலெயாந்த்ரோ செர்பா டெல்கடோவையே வெனிசுலாவின் பிரதிநிதியாக அங்கீகரித்து, தனது இணையதளத்திலும் தொடர்ந்து காட்டிவந்தது. மார்ச் 2020-ல், நிதி மறுப்பு குறித்து நாங்கள் அனுப்பிய மின்னஞ்சல் கேள்விகளுக்கு, சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ரஃபேல் அன்ஸ்பாச் பதிலளிக்கவில்லை. இருப்பினும், அவர் வெளியிட்ட ஓர் அறிக்கையில், “உறுப்பு நாடுகளின் அரசுகளை சர்வதேச சமூகம் அங்கீகரித்த பின்னரே நிதியம் அவற்றுடன் தொடர்பு கொள்ளும்” என்று தெரிவித்திருந்தார். இந்த அங்கீகாரத்தில் தெளிவு இல்லாத நிலையில், தொற்றுநோய்க் காலத்தில் வெனிசுலாவுக்கான சிறப்பு எடுப்புரிமை ஒதுக்கீட்டை நிதியம் அனுமதிக்காது என்றும் குறிப்பிட்டார். பின்னர் திடீரென, நிதியம் தனது இணையதளத்திலிருந்து செர்பாவின் பெயரை நீக்கியது. இது முற்றிலும் அமெரிக்க அழுத்தத்தின் விளைவே.
IMF கொள்கைகள் மீதான விமர்சனம்
2023-ல், சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள புதிய வளர்ச்சி வங்கியின் (பிரிக்ஸ் வங்கி) கூட்டத்தில் பேசிய பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, “ஏழை நாடுகள் விஷயத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகள் அவர்களை ‘மூச்சுத் திணறச் செய்வதாக’” சுட்டிக்காட்டினார். அர்ஜென்டினாவின் நிலவரம் குறித்துப் பேசுகையில், “கடன் சுமையில் இருக்கும்போது, எந்த அரசாங்கமும் கழுத்தில் கத்தியுடன் செயல்பட முடியாது. வங்கிகள் பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும்; தேவைப்பட்டால் ஒப்பந்தங்களைப் புதுப்பிக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியமோ அல்லது மற்ற நிதி நிறுவனங்களோ வளரும் நாடுகளுக்கு கடன் வழங்கும்போது, கடன் கொடுத்தவர்கள் அந்நாடுகளின் நிதி மீது அதிகாரம் செலுத்தவும், நிர்வகிக்கவும் உரிமை கொண்டிருப்பதாக நினைக்கிறார்கள். இது, நாடுகள் கடன் கொடுத்தவர்களுக்குப் பிணைக் கைதிகளாக மாறுவது போன்றதாகும்” என்றார்.
உலகில் அதிகாரத்தின் உண்மையான அடித்தளம் என்று வரும்போது, ஜனநாயகம் குறித்த அனைத்துப் பேச்சுகளும் பொருளற்றுப் போகின்றன.
மூலதனத்தின் மீதான கட்டுப்பாடு

உலக மக்கள்தொகையில் ஒரு சதவீதத்தினரின் செல்வம், மீதமுள்ள 95 சதவீதத்தினரின் ஒட்டுமொத்த செல்வத்தை விட அதிகமாக உள்ளது என்று ஆக்ஸ்ஃபாம் சுட்டிக்காட்டுகிறது. உலகின் மிகப்பெரிய 50 பெருநிறுவனங்களில், மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை (மொத்த மதிப்பு 13.3 டிரில்லியன் டாலர்) ஒரு பில்லியனரையோ அல்லது பல பில்லியனர்களையோ முக்கியப் பங்குதாரர்களாகக் கொண்டு இயங்குகின்றன. இந்தப் பில்லியனர்களில் டஜன் கணக்கானோர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர். உண்மையில், அவர்கள் மக்கள்தொகையில் ஒரு சதவீதத்தினரைக்கூட பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; மாறாக, பத்தாயிரத்தில் ஒரு பங்கினரையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். தற்போதைய வளர்ச்சி விகிதத்தில் தொடர்ந்தால், இந்த பத்தாண்டுக்குள் உலகம் ஐந்து டிரில்லியனர்களைக் காணக்கூடும். அவர்கள் அரசாங்கங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள். அதனால், பலதரப்பு அமைப்புகளிலும் அவர்கள் அசாதாரண செல்வாக்கைக் கொண்டிருப்பார்கள்.
பன்னாட்டு அமைப்புகளில் ஆப்பிரிக்காவின் நிலை
1963-ல் நைஜீரியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாஜா வச்சுகு, ஐ.நா. மற்றும் பலதரப்பு அமைப்புகள் மீது தனது விரக்தியை வெளிப்படுத்தினார். ஐ.நா.வின் முக்கிய அமைப்புகளில், எந்தவொரு விடயத்திலும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க ஆப்பிரிக்க நாடுகளுக்கு வாய்ப்பில்லை என்றார். லத்தீன் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஐ.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் தகுதி இல்லை. சர்வதேச நாணய நிதியத்திலோ, உலக வங்கியிலோ எந்தவொரு ஆப்பிரிக்க நாடும் முக்கிய முடிவுகளைத் தனியாக எடுக்க முடியாது. “நாங்கள் என்றென்றும் திண்ணைப் பிள்ளைகளாகவே இருக்க வேண்டுமா?” என்று வச்சுகு வேதனையுடன் கேட்டார்.
இருப்பினும், 2024-ல் நிதியம் ஆப்பிரிக்கப் பிரதிநிதிகளுக்குக் கூடுதலாக ஒரு இடத்தைச் சேர்த்தது. ஆனால் இது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. ஏனெனில், சர்வதேச நாணய நிதியத்தில் வேறு எந்தக் கண்டத்தையும் விட ஆப்பிரிக்காவே அதிக உறுப்பினர்களைக் (190 நாடுகளில் 54) கொண்டுள்ளது; மற்ற எந்தக் கண்டத்தையும் விட அதிகக் கடன் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. ஆனாலும், ஓசியானியாவுக்கு அடுத்து, மிகக் குறைந்த வாக்கு விகிதத்தைக் (6.5%) கொண்ட இரண்டாவது கண்டமாக ஆப்பிரிக்கா உள்ளது. ஆப்பிரிக்கா 54 உறுப்பினர்களுடன் 3,26,033 வாக்குகளைக் கொண்டிருக்க, வட அமெரிக்கா இரண்டு உறுப்பினர்களுடன் 9,43,085 வாக்குகளைக் கொண்டுள்ளது.
சீர்திருத்த முயற்சிகளும் கட்டமைப்புச் சிக்கல்களும்

2007 பொருளாதார நெருக்கடி மற்றும் அதைத் தொடர்ந்த பெருநெருக்கடிகள் ஏற்பட்டபோது, சர்வதேச நாணய நிதியம் சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடங்க முடிவு செய்தது. இதன் நோக்கம், ஒரு நாடு குறுகியகாலக் கடன்களுக்காக (Bridge Loans) சர்வதேச நாணய நிதியத்தை அணுகும்போது, நிதியம் பாரபட்சமின்றி அணுக வேண்டும் என்பதாகும். கடன் பெறுவதை ஒரு நாட்டின் ‘மோசமான செயல்பாடு’ எனக் கருதி, அந்நாட்டைக் களங்கப்படுத்தும் மூலதனச் சந்தைகளின் போக்கை இது மாற்றும் என்பதற்காகவே. ஆனால், நிதியம் அதிக வட்டி விகிதங்களில் கடன் வழங்கியதால், நெருக்கடி மேலும் தீவிரமடைந்தது. இதன் விளைவாக, குறுகியகாலப் பாலக் கடன்களுக்கான தேவை அதிகரித்தது.
இந்தப் பிரச்சினைக்கு அப்பால், ஒரு ஆழமான கட்டமைப்புச் சிக்கல் உள்ளது: சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர்கள் அனைவரும் ஐரோப்பியர்களாகவே இருந்து வந்துள்ளனர். அதாவது, நிதியத்தின் உயர்மட்டத் தலைமைப் பதவிகளில் தென்புல நாடுகளைச் சேர்ந்த எவரும் இருந்ததில்லை. ஒதுக்கீட்டு வாக்குகள் (Quota votes) முறையால் (நாடுகளின் பொருளாதார அளவு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கான நிதிப் பங்களிப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது) நிதியத்தின் ஒட்டுமொத்த வாக்களிப்பு முறை சமநிலையை இழந்துள்ளது. இது, ‘ஒரு நாடு, ஒரு வாக்கு’ என்ற ஜனநாயக அடிப்படையிலான வாக்கு கட்டமைப்பைப் பலவீனப்படுத்தியுள்ளது. வாக்கு ஒதுக்கீடுகள் இரண்டு வழிகளில் கணக்கிடப்படுகின்றன:
- கணக்கிடப்பட்ட ஒதுக்கீட்டுப் பங்குகள் (Calculated Quota Shares – CQS): இது ஒரு கணித சூத்திரத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
- உண்மையான ஒதுக்கீட்டுப் பங்குகள் (Actual Quota Shares – AQS): இது அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, 2024 கணக்கீட்டின்படி, சீனாவின் AQS 6.39% ஆகவும், CQS 13.72% ஆகவும் உள்ளது. சீனாவின் AQS-ஐ அதன் CQS-க்கு இணையாக உயர்த்த, அமெரிக்கா போன்ற நாடுகளின் AQS குறைக்கப்பட வேண்டும். அமெரிக்கா தற்போது 17.40% AQS-ஐக் கொண்டுள்ளது. சீனாவின் பங்கை அதன் CQS அளவிற்கு உயர்த்தினால், அமெரிக்காவின் பங்கு 14.94% ஆகக் குறைய வேண்டும். ஆனால், அமெரிக்காவின் AQS குறைந்தால், அது தனது வீட்டோ அதிகாரத்தை இழக்க நேரிடும். இதன் காரணமாக, 2016-ல் நிதியம் முன்வைத்த சீர்திருத்த முயற்சியை அமெரிக்கா தடுத்தது. 2023-லும் அந்த முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது.

“என் கடற்கரை எங்கே? கடல் அதைக் கொண்டுபோய்விட்டது.” – 2019, அன்டோனியோ சௌசா (பிரேசில்)
(ஓவியத்தில் இடது மேலிருந்து வலது கீழாக உள்ள வார்த்தைகள்: “அன்பு”, “அமைதி”, “கடலும் நாங்களும்”, “காப்பாற்று”, “கோள்”)
சீர்திருத்தத்திற்கான பரிந்துரைகள்
பிரேசிலின் பாவ்லோ நொகுவேரா பட்டிஸ்டா ஜூனியர், 2007-2015 வரை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராகவும், 2015-2017 வரை புதிய வளர்ச்சி வங்கியின் (NDB) துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். சீனாவின் சர்வதேச செய்தி இதழான ‘குளோபல் டைம்ஸ்’-ல் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
“சர்வதேச நாணய நிதிய சீர்திருத்தத்திற்கான ஒரு வழி” (A Way Out for IMF Reform, ஜூன் 2024) என்ற தனது ஆய்வுக் கட்டுரையில், சர்வதேச நாணய நிதியச் சீர்திருத்தத்திற்கான ஏழு பரிந்துரைகளை அவர் முன்வைத்துள்ளார்:
- கடன் நிபந்தனைகளின் கடுமையைக் குறைக்க வேண்டும்.
- நீண்டகால கடன்களுக்கான கூடுதல் கட்டணங்களை (Surcharges) நீக்க வேண்டும்.
- வறுமை ஒழிப்புக்கான சலுகைக் கடன்களை வலுப்படுத்த வேண்டும்.
- சர்வதேச நாணய நிதியத்தின் ஒட்டுமொத்த நிதி ஆதாரங்களை அதிகரிக்க வேண்டும்.
- வளரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க, அடிப்படை வாக்குகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
- நிர்வாகக் குழுவில் ஆப்பிரிக்காவிற்கு மூன்றாவது இடம் வழங்கப்பட வேண்டும்.
- ஐந்தாவது துணை நிர்வாக இயக்குநர் பதவி உருவாக்கப்பட்டு, அப்பதவிக்கு வளரும் நாடுகளில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
எதிர்காலக் கணிப்புகளும் எச்சரிக்கைகளும்
பாடிஸ்டா மேலும் வாதிடுகையில், இத்தகைய அடிப்படைச் சீர்திருத்தங்களை வடபுல (வளர்ந்த) நாடுகள் புறக்கணித்தால், “வளர்ந்த நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தை ஒரு வெற்றுக் கட்டிடமாக மாற்றிவிடும்” என்று. தென்புல நாடுகள் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து வெளியேறி, பிரிக்ஸ் (BRICS) போன்ற புதிய முயற்சிகளின் ஆதரவுடன் புதிய நிதி நிறுவனங்களை உருவாக்கக்கூடும் என்றும் அவர் கணிக்கிறார். பிரிக்ஸ் அவசரகால நிதி ஒதுக்கீட்டு அமைப்பு (BRICS Contingent Reserve Arrangement – CRA) போன்ற சில அமைப்புகள், நிதியத்தின் சீர்திருத்த முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 2014-ல் உருவாக்கப்பட்டன. இருப்பினும், CRA இன்னமும் பெரும்பாலும் செயல்பாடற்ற நிலையிலேயே இருப்பதாக பாடிஸ்டா குறிப்பிடுகிறார்.
தற்போதைக்கு, வளரும் நாடுகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய நிறுவனமாக சர்வதேச நாணய நிதியம் மட்டுமே உள்ளது. அதனால்தான், 2025-ல் தனது மொத்தச் செலவினத்தில் 41% வட்டியாகச் செலுத்தவுள்ள இலங்கை போன்ற முற்போக்கு நாடுகள் கூட, வாஷிங்டனின் கதவைத் தட்ட நிர்பந்திக்கப்படுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்திற்குச் செல்லும் வழியில், தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்தி வெள்ளை மாளிகையைப் பார்த்து அவர்கள் புன்னகைக்க வேண்டியுள்ளது.
– விஜய் பிரசாத்
தமிழில்: பொன்சங்கர்