வரலாறு

குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் பூணூல் அய்யனார். யார் அய்யனார்?

Process Aws

சூர்யா சேவியர்.

உலகில் தோன்றிய முதல் மதம் எனப்படுவது தமிழகத்தில் தோன்றிய ஆசீவகம் தான். ஆசீவகம் அய்யனாரை தமிழர்களின் அடையாளமாக முன்னிலைப்படுத்தியது. அய்யனாரின் முதல் தோற்றம் காவிரிக்கரையில் உருவானதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகிறது.

ஆசீவகம் என்பது தமிழர்களின் ஆதிச்சமயம். புராணக் கதைகளைக் கொண்டு கட்டமைக்கப்படாத, அறிவார்ந்த வாழ்க்கை முறை அது. இந்திய சமயங்களின் வரலாற்றில் சரணாகதி கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட முதல் சமயம் ஆசீவகம்.

அதற்கு அடுத்து தோன்றிய பௌத்தம், இதே சரணாகதி கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டுதான், “புத்தம், சரணம், கச்சாமி… சங்கம், சரணம் கச்சாமி… தர்மம் சரணம் கச்சாமி…” என்ற முழங்கியது. அதாவது, புத்தனிடம் சரணடைந்தேன், பௌத்த சங்கங்களிடம் சரணடைந்தேன், புத்த தருமத்திடம் சரணமடைந்தேன் என்று அந்த சரணாகதி கோட்பாட்டை அடுத்த எல்லைக்குக் கொண்டுபோனது பௌத்தம்.

பிற்காலத்தில் சைவம், வைணவம் எல்லாம் இந்த சரணாகதி கோட்பாட்டை வலியுறுத்துவதற்கு மூல ஆதாரமாக இருந்தது ஆசீவகக் கோட்பாடுதான். “சாமியே சரணம் அய்யப்பா” என்ற முழக்கம் கூட அந்த அடிப்படையில் உருவானதுதான்.

ஆசீவகத்தை உருவாக்கியவர் மற்கலிகோசாரர். இவரது மற்றொரு பெயர் அறப்பெயர் சாத்தன். சாஸ்தா என்பது, சாத்தன் என்ற தமிழ்ச் சொல்லின் சமஸ்கிருத வடிவம்தான். வேட்டியை சமஸ்கிருதம் கலந்து வேஷ்டி என்று சொல்வது போல, சாத்தனை சாஸ்தா என்று சொல்கிறோம். ஆசீவகத்தை உருவாக்கிய அறப்பெயர் சாத்தன் தான் இன்று தர்ம சாஸ்தாவாக அழைக்கப்படுகிறார். அய்யனார் கோயிலுக்கு முன்பாக ஆடு, கோழி போன்றவற்றைப் பலியிடமாட்டார்கள். அது கொல்லாமை விரதத்தை அடிப்படையாக் கொண்டது. அதுதான் சபரிமலையிலும் கடைபிடிக்கப்படுகிறது.

18 படிகள் என்பவை ஒரு துறவியின் வளர்ச்சியில் ஏற்படக்கூடிய 18 வகையான குற்றங்கள். அந்த 18 குற்றங்களையும் கடந்தவர்கள் அய்யனாராக உயர முடியும் என்று ஆசீவகர்கள் நம்பினார்கள்.

பசி, நீர்வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய் வாய்ப்படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையறவு ஆகிய பதினெட்டுமே அவர்கள் குறிப்பிடுகிற குற்றங்கள் என்கிறது அய்யனார் பிள்ளைத்தமிழ் பாடல்.

தென்மாவட்டங்களில் நடைபெறும் முளைப்பாரி விழா அய்யனார் வழிபாட்டின் தொடர்ச்சிதான். ஒவ்வொரு அய்யனார் கோயிலிலும் மூன்று வகையான வழிபாட்டு முறைகள் உள்ளன. அய்யனார் வழிபாடு என்பது அறிவு வழிபாடு. அந்தக் கோயிலில் உள்ள ஏழு கன்னியர் வழிபாடு என்பது வளமை வழிபாடு, அங்குள்ள கருப்புகளுக்கான கிடாவெட்டு என்பது வீரவழிபாடு. இந்த மூன்று வழிபாட்டு முறைகளின் சங்கமம்தான் அய்யனார்கோயில்.

ஆசீவக மரபில் பின்பற்றப்பட்டும் கோட்பாடுகளில் ஒன்றான பிறப்புக்கோட்பாட்டை 6 வகையாகப் பிரித்திருக்கிறார்கள். கருப்பு, கருநீலம், பசுமை, செம்மை, பொன் நிறம், வெண்மை நிறம். கல்லூரிகளில் ஒவ்வொரு இளங்கலைப் பட்டமும் 3 ஆண்டுகள் படிக்க வேண்டியதிருப்பதைப் போல, இந்த ஆறு வண்ணங்களும் தலா மும்மூன்று படிநிலைகளைக் கொண்டுள்ளன. ஆக மொத்தம் 18 படிகள்.

பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு நிறத்தில் சீருடை இருப்பதுபோல, மும்மூன்று படிகளுக்கு ஒரு நிறம் என்று பிரிக்கப்பட்டிருந்தது. ஆசீவக நம்பிக்கையின்படி, இந்த 18 படிகளையும் கடந்து வீடுபேறடைந்தவர்கள் மூவர் மட்டுமே. ஒருவர் அறப்பெயர் சாத்தன், இன்னொருவர் பூரணர், மூன்றாவது சின்னய்யனார்.

அறப்பெயர் சாத்தன் (மற்கலி) தான் மகாவீரருடன் ஆறு ஆண்டுகள் ஒன்றாகத் தவம் இயற்றி, துறவு நெறி நின்றவர். பின்னர் அவரைவிட்டுப் பிரிந்து தனிச்சமயம் கண்டார். எனவேதான் மகாவீரர் உள்ளிட்ட ஜைனர்கள் மற்கலியை தூற்றவும், இகழவும் செய்தார்கள்.

தர்ம சாஸ்தாவுக்குத் திருமணமாகவில்லை. பூரணர் திருமணமானவர். அவருக்கு பூரணம், பொற்கலை என்று இரண்டு மனைவியர் உண்டு. மூன்றாவது அய்யனார். பாண்டிய மன்னன் பூதப்பாண்டியனின் படைத்தளபதியாக இருந்தவர். ஒரு போரில் பூதப்பாண்டியன் இறந்துவிட, அவனது மனைவியும் தீப்பாய்ந்துவிடுகிறாள். அவர்களுடைய குழந்தைகளை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி, தலைமறைவாக இருந்து மீண்டும் பாண்டியப் பேரரசு நிலைபெறக் காரணமாக இருந்தவர் இந்த அய்யனார் தான்.

மூன்று அய்யனார்களில் இவர் இளையவர் என்பதால்தான் அவரை சின்ன அய்யனார் என்கிறார்கள். சின்னய்யன், வீரய்யன், சின்னச்சாமி என்பதெல்லாம் அவரைக் குறிக்கும் பெயர்கள்தான். இவரும் திருமணமானவரே.

ஆசீவகத்தை உருவாக்கியவர் மற்கலி என்பதை தமிழ் இலக்கியம், பௌத்தம், ஜைனம் ஆகிய மூன்று மரபுகளும் உறுதிசெய்துள்ளன. தமிழ் இலக்கிய, நாட்டார் மரபுகளை ஆராய்ந்தால் மற்கலிதான் தமிழ் மக்கள் வணங்குகிற ‘தர்ம சாஸ்தா’ (அய்யனார்களில் ஒருவர்) வாக இருக்கிறார்.

மற்கலியின் ஆயுதம் செண்டாயுதம். அய்யனார் கையில் இருப்பதுவும் அதுவே. பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ வழியாக அய்யனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் என்கிறது ஆய்வுகள்.

திருப்பட்டூர் அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்தது. அவ்வூரில் சிவாலயமும், அய்யனார் கோயிலும் உள்ளன. சிவாலயத்தை நுட்பமாக ஆராய்ந்தபோது, அதுவும் ஆசீவக ஆலயமாக இருந்து பறிக்கப்பட்டதுதான் என்கிறது ஆய்வுகள்.

‘தர்ம சாஸ்தா’ மரணமடைந்த இடமான சித்தன்னவாசலில், குகைக்குள்ளாக மூன்று சிலைகள் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தில் துறவியர் தொடங்கி போப் ஆண்டவர் வரையில் படிநிலைகள் இருப்பதுபோல, ஆசீவகத்திலும் வண்ணக் கோட்பாடு இருந்தது. கருப்பு, நீலம், பச்சை, செம்மை எல்லாவற்றையும் கடந்து கழிவெண் பிறப்பு நிலையை அடைந்தவர்கள் இவர்கள் மூவரும்.

நடுவில் இருப்பவர் வேளிர் மரபில் பிறந்து சிற்றரசராக வாழ்ந்து, துறவியான அறப்பெயர் சாத்தன் (தர்ம சாஸ்தா). இரண்டாவது நபர் கிராமங்களில் பூரணம், பொற்கலை எனும் இரு மனைவியரோடு அருள்பாலிக்கிற பூரண அய்யனார். மூன்றாவதாக இருப்பவர் அடைக்கலம் காத்த அய்யனார். பாண்டிய மன்னரின் படைத்தளபதியாக இருந்து துறவியானவர்.

ஆசீவகம் தாக்கப்பட்டபோது, ஓவியம் சிதைக்கப்பட்டது. இப்போது மலையடிவாரத்தில் மூன்று அய்யனாருக்கும் கோயில்கள் கட்டி வணங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆசீவகத்தின் வண்ணக்கோட்டுப் படிநிலை யின் குறியீடுதான் 18 படிகள். அந்த அடையாளத்தை முன்பு ஆசீவகத்தலமாக இருந்த திருச்சி திருவெள்ளறை, மதுரை அழகர்கோயில் முதலான இடங்களில் இப்போதும் பார்க்கலாம். சபரிமலை இப்போதும் சாஸ்தா கோயிலாகவே இருக்கிறது.

ஆசீவகம் கடவுள் மறுப்புக் கோட்பாடு கொண்டது. வானத்தையும் பூமியையும் உயிரினங்களையும் படைத்தது இறைவன் என்று மத நிறுவனங்கள் சொல்கின்றன. ஆனால், ஆசீவகம் அணுக்கோட்பாட்டின் அடிப்படையில், தற்செயலாகவே உலகம் தோன்றியதாகச் சொல்கிறது.

இந்தப் பேரண்டத்தின் தோற்றம், பெருவெடிப்பு, கருந்துளை பற்றியெல்லாம் அறிவியல் உலகம் 40, 50 ஆண்டுகளாகத்தான் பேசத்தொடங்கியிருக்கிறது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இலக்கியமான பரிபாடலில் இதுபோன்றதொரு குறிப்பு உள்ளது.

“பாழ்பட்டுப்போன வெட்டவெளியில், அணு கரு நிலையில் இருந்தபோது ஏற்பட்ட பெரிய வெடிப்பின் காரணமாக வெப்பம் தோன்றியது. பிறகு காற்றும் தோன்றியது. வெப்பத்தின் மீது காற்று மோத மோதத் தீயாகியது. தீ எரிந்து எரிந்து அணையத் தொடங்கியபோது ஆவிப்படலம் மேகமாகப் படிந்து, அது குளிர்ந்து மழையாகப் பெய்தது” என்கிறது பரிபாடல். இதுதான் ஆசீவகத்தின் பேரண்டம் பற்றிய கோட்பாடு.

திருவெள்ளறை என்ற ஊரில் ஸ்வஸ்திக் வடிவக் கிணறு இன்றும் உள்ளது. ஸ்வஸ்திக் ஆசீவகத்தின் சின்னம் தான். இதற்கு நாலுமூலைக்கேணி என்று பெயர். மாற்பிடுகு என்ற மன்னன் வெட்டிய கேணி என்பதற்கான கல்வெட்டு கேணியில் பொறிக்கப்பட்டிருக்கும். மாற்பிடுகு என்றால் பேரிடி என்று பொருள்.

பார்ப்பனியம் இந்த மண்ணில் நுழைந்த போது இங்கிருந்த வெகுமக்களின் வழிபாட்டு முறைகளையெல்லாம் தனக்கானதாக மாற்றும் முயற்சியில் இறங்கியது. அதுவே அவதாரம், அம்சம் எனும் கோட்பாட்டை உருவாக்கியது. பார்ப்பனியம் தனது புனிதத்தில் செய்த மாபெரும் கலப்படம் இதுதான்.

ஆதித்தமிழர்களின் வழிபாட்டு முறையானது இறந்தவர்களின் நினைவாக கல்நட்டு,அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளைப் படையலிட்டு வணங்குவதே. இறந்து போனவர்கள் பயன்படுத்திய ஆயுதம் மற்றும் குலத்தின் சின்னம் ஆகியவற்றையும் சேர்த்துப் புதைப்பதே மரபு.

நடுகல் வழிபாட்டின் கருத்தியல் யாதெனில் இறந்தவர்களின் நினைவும்,அவர்கள் மீதான நம்பிக்கையும் தங்களுக்கு பேராற்றலைத் தரும் என்ற நம்பிக்கையே. நடுகல் வழிபாடு குறித்து அகநானூறும்,புறநானூறும் பக்கம் பக்கமாகப் பேசுகிறது.

இல்லடு கள்ளின் சில் குடிச் சீறூர்ப்
புடை நடு கல்லின் நாட் பலி யூட்டி-புறநானூறு:329

நடுகற் பீலி சூட்டி நார் அரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ-புறநானூறு:232

நடுகள் பீலி சூட்டி துடுப்படுத்துத்
தோப்பி கள்ளொடு துரூ உப்பலி கொடுக்கும்-அகநானூறு:35

இறந்தவர்களின் நினைவிடத்தில் அவர்கள் விரும்பி உண்ட மதுவும், பலி கொடுக்கப்பட்ட ஆடும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட செய்தியையே மேலே உள்ள சங்க இலக்கியங்கள் கூறுகிறது. இது சமுதாயத்தின் முதல் கட்டம்.

சமுதாய வளர்ச்சி அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது. அதன் வளர்ச்சியால் புதிய மாற்றங்கள் உருவானது. இக்காலத்தில் தான் அரசு என்ற நிறுவனத்தை ஆதிக்க உடமை வர்க்கம் உருவாக்குகிறது. இந்த உடமை வர்க்கம் உருவாக்கிய முக்கியப் படைப்பு தான் சான்றோர்கள்,உயர்ந்தோர்கள் எனப்பட்டது.

உழைப்போடு நேரடியாக எவ்விதத்திலும் தொடர்பற்ற இந்தக் கூட்டம் தான் ஆதிக்கத்தைக் கையில் வைத்திருந்தது. பொது என்ற இனக்குழு வாழ்க்கை முறையை மாற்றி,இவர்கள் உருவாக்கியதே உயரந்தோர்,தாழ்ந்தோர்,மேலோர்,
கீழோர் என்ற கருத்தும், அதையொட்டிய சமூக வாழ்வும் மற்றும் கடவுள்களும்.

இந்த ஆதிக்கக்கூட்டம் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளவும் சதாசர்வ காலமும் யுத்தங்களை நடத்திக் கொண்டே இருந்தார்கள். யுத்தங்களில் உயிரிழப்புகள் உருவாகின. இப்போது உயர்ந்த சான்றோர்களுக்கு மேல் உலகமும்,வீர சொர்க்கமும் உருவாக்கப்பட்டன. பலியான கீழோர்களுக்கு காட்டுப் பாதைகளில் அதே நடுகல் வழிபாடு தான்.

உடமை வர்க்கம் தங்களுக்காக பலியானவர்களுக்கு மேலே ஒரு உலகத்தைக் கதை கட்டி எழுப்பியது. அவர்களுக்காக வேள்வி யாகங்கள் நடத்தியது. அக்னி வழியாக அவர்களுக்கு மேலே படையலை அனுப்பியது. அந்த மேல் உலகத்திற்குள் ஒரு இடத்தை ரிசர்வ் செய்வதற்குத்தான் இப்போதும் ஒரு கூட்டம் எல்லாப்புறமும் அலைகிறது.

மேல் உலகத்திற்கு ரிஜக்ட் செய்யப்பட்ட கீழ்மக்கள் தங்களுக்காகப் பலியானவர்களுக்கு ஆடு கோழி வெட்டி பலியிட்டு,அதை உண்டு, அவர்களை மனதில் நிறுத்தி தங்கள் வாழ்க்கையை புதிய நம்பிக்கையுடன் தொடர்கின்றனர்.
இந்தத் தெய்வங்கள் தான் சுடலை, விருமன்,கருப்பு,மாடன்,காடன்,மாயன்,
அய்யனார்,முனி,பேச்சி,வீராயி,காத்தாயி,
ஒச்சு போன்றவைகள்.

இந்தத் தெய்வங்கள் உடமை வர்க்கத்தால் மேல் உலகத்திற்கும் வீர சொர்க்கத்திற்கும் அனுமதிக்கப்படாதவர்கள். பார்ப்பனியக் கருத்தியலின் படி ஒடுக்குமுறையின் வடிவங்கள். பார்ப்பனிய சமய மரபின் முக்கிய பகுதி யாதெனில் இந்த கீழோர் தெய்வங்களின் மீதும்,வழிபாட்டு முறைகள் மீதும் நடத்திய தாக்குதலே.

நடுகல் வழிபாடு சார்ந்த வாழ்க்கை முறையிலிருந்த தமிழ்ச்சமூகம் நாகரீகத்தின் வாசத்தை நுகரத் தொடங்கிய காலம் அது. வடக்கே இருந்து சமண,பௌத்த,வைதீகக் கருத்துகள் இங்கே வந்து கலந்தன. பௌத்த சமணக் கருத்தியலின் வேர் எதில் நிலைபெற்றிருந்தது என்றால்,சமூகத்தில் ஏற்பட்ட பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி தான். ஏனெனில் பார்ப்பனியம் தனது பத்தாம்பசலித்தனமான கோட்பாட்டில் அப்போது நின்று கொண்டிருந்தது.

ஆசீவக,பௌத்த சமண மதங்களே தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்தது. தமிழில் தோன்றிய மாபெரும் இலக்கியங்கள் எல்லாம் இம்மதங்களின் சிந்தனைகளையே முன் வைத்துப் பேசின.கிபி 6 ம் நூற்றாண்டு வரை இந்த நிலைதான் தமிழ் சமூகத்தில் நீடித்தது. இந்தியா முழுமையும் இதே நிலைதான் இருந்தது.பார்ப்பனிய ஆதிக்கம் அடியோடு பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆரியக் கட்டுமானம் அடியோடு வீழும் நிலையும் ஏற்பட்டது.

தங்களுக்குச் சாதகமான குப்தப் பேரரசின் மூலம் (கிபி 250-550) பௌத்த சமண மதங்களை வீழ்த்தும் கடமையைப் பார்ப்பனியம் பக்குவமாகச் செய்து முடித்தது.எனவே தான் குப்தர்கள் காலம் இந்தியாவின் பொற்காலம் என புலகாங்கித்தோடு வரலாறு பாடத்தில் படிக்கிறோம்.

ஆசீவகம், பௌத்த மற்றும் சமணத்தின் வீழ்ச்சியைப் பயன்படுத்தி தங்களை புத்துயிர் பெற பார்ப்பனியம் முயன்றது. தனது புனிதப் புடலங்காயில் கள்ளத்தனமான கலப்படத்தைச் செய்ய தயாரானது. அதுதான் ஆரியரல்லாத இனக்குழு மக்களிடையே செல்வாக்குடன் இருந்த லட்சக்கணக்கான தெய்வங்களை தன்னுடைய கடவுளின் அவதாரங்கள் அம்சங்கள் என்று பேசியது. இந்த மாயவலையில் எல்லாத் தெய்வங்களும் நங்கூரம் பாய்ச்சி இழுக்கப்பட்டன.

அதுவரை வேதத்தை மறுத்த சுமேரியக் கடவுளான நாராயணனும்,வேதக் கடவுளான விஷ்ணுவும் ஒன்றென ஆக்கினார்கள். வேதத்திற்கு புறம்பான சிவசங்கரனும்,வேதகால ருத்திரனும் ஒன்றாக ஆக்கினார்கள். ஆரியரல்லாத மக்களிடையே செல்வாக்குடன் இருந்த வாசுதேவகிருஷ்ணனை, பார்ப்பனியக் கடவுளான நாராயண விஷ்ணுவின் அவதாரமாக ஆக்கினார்கள்.

இந்திரனுக்கு எதிராக மேருமலையைத் தூக்கிய இடையர்களின் கடவுள் கிருஷ்ணனையும், விவசாய மக்களின் கடவுளான பலராமனையும் விஷ்ணுவின் அவதாரமாக்கினார்கள். மேய்ச்சல் சமூகம் மற்றும் வேளாண் சமூகத்தின் மீது தனது பண்பாட்டு ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பார்ப்பனியம் அரங்கேற்றிய அரசியல் இது.

ஆரியருக்குப் பகைவனான பன்றி இந்திரனால் கொல்லப்பட்டது என்று ரிக்வேதம் கூறுகிறது. இதன் பொருள் யாதெனில் பன்றியை குலக்குறியாகக் கொண்டு வாழ்ந்த விந்திய மலையைச் சுற்றி வாழ்ந்த பூர்வகுடிகளுடனான பார்ப்பனிய யுத்தம் தான். அவர்களை வீழ்த்தியும் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் உளவியல் ஏற்பாடு தான் வராக அவதாரம்.

பழங்குடி மக்களின் விலங்கு வழிபாட்டில் முக்கியமானது சிங்க வழிபாடு. இந்த மக்களை தன்னுடன் இணைத்த ஏற்பாடு தான் நரசிங்க அவதாரம். நெய்தல் குடிகளின் மீனை தன்னுடன் இணைத்து மச்ச அவதாரம்.கடல்கோளால் அழிந்த துயரத்துடன் தரையில் துள்ளிய மீனைத் தாங்கிப்பிடித்து உருவான பாண்டியப் பேரரசின் கொடியும் மீன் கொடி தான். அந்த மீன் ஆட்சி செய்த இடத்தை தன் கணக்கில் வரவு வைத்தக் கதையே மீனாட்சி என்ற தெய்வம்.இது போன்ற அவதாரக் கோட்பாடுகளின் அரசியல் மூலம் பெரும் முடிச்சுப் போடப்பட்டது.

ஆதி மக்களின் செல்வாக்குப் பெற்ற பெண் தெய்வங்களையெல்லாம் ஒருங்கிணைத்து லட்சுமி என்ற வடிவத்துடன் பொறுத்தி, லட்சிமியை விஷ்ணுவின் பக்கத்தில் அமர வைத்து அவரின் மனைவியாக்கும் முயற்சியையும் பார்ப்பனியம் பக்காவாக செய்து முடித்தது.

தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தெய்வங்கள் கொற்றவையும் அவர் மகன் முருகனும் தான். கிபி 7 ம் நூற்றாண்டில் இவர்கள் இருவரும் ஆரியத்தை நோக்கி இழுக்கப்பட்டனர். ஆரியக் கடவுளான ஸ்கந்தனுடன் முருகன் இணைக்கப்பட்டான். முருகனின் மனைவியாக அதுவரை இருந்த வள்ளி இரண்டாமவளாக ஆக்கப்பட்டு ஸ்கந்தனின் மனைவி தேவசேனை முதல் மனைவியாக ஆக்கப்பட்டாள்.முருக வரலாறு ஸ்கந்த புராணமாக இக்காலத்தில் மாற்றப்பட்டது.

சங்க இலக்கியங்களில் ஆட்டுக்குட்டியின் இரத்தத்தோடு பிசைந்து திணை மாவை படையலிடுவார்கள். அப்போது வேலன் என்ற தனது பூசாரியின் மீது ஆவி உருவில் வந்து குறி சொல்வான் முருகன். பார்ப்பனியம் முருகனைக் கையிலெடுத்த போதுதான் கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட புனிதமான ஸ்கந்தனாக மாறி தேவசேனாதிபதியாக ஆக்கப்படுகிறான். சேயோன், செவ்வேள்,வேலன் என்ற அடையாளங்கள் அகற்றப்பட்டு ஸ்கந்தன்,சண்முகன்,சுப்பிரமணியன் என்ற அடையாளங்கள் முன்னிறுத்தப்படுகின்றன.

கொற்றவை,மாரி,பேச்சி போன்ற பெண் தெய்வங்கள் பார்வதியின் பிம்பங்களாக மாற்றப்படுகிறது. சுடலை மாடன் காடன் ஆகியவை சிவனின் பிம்பங்களாகவும் மாற்றப்படுகிறது.உழைக்கும் மக்களின் லட்சக்கணக்கான கிராம தெய்வங்கள் அனைத்தும் அவதாரம், அம்சம், புராணக்கதைகள் மூலம் பார்ப்பனிய ஆளுமையின் கீழ் கொண்டு வந்ததே கிபி 7 ம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கமும்.அது உருவாக்கிய பெரிய புராணமும்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேல் வழிபாடும், அதன் பிறகு முருக வழிபாடும் நடந்த இடம் பரங்குன்றம்.இலக்கியங்களில் வேற் கோட்டம் என அழைக்கப்பட்ட இடமே பரங்குன்றம். கிபி 7 ம் நூற்றாண்டில் உருவான பக்தி இயக்கத்தின் பிதாமகன்கள் திருநாவுக்கரசர்,திருஞான சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவரும் இதை சிவத்தளமாக மாற்றி தேவாரம் பாடினர்.சிவனுக்கும் முருகனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அவர்கள் பாடலின் மையக்கரு. அன்றிலிருந்து பாண்டி நாட்டின் பதினான்கு பாடல் பெற்ற தளமாக பரங்குன்றம் திருப்பரங்குன்றமாக மாற்றப்பட்டது.

தேவாரத்தின் படியான பூஜை முறையால் இங்கு கடைபிடிக்கும் பூஜை மரபு சிவமரபு தான்.இங்கு ஏற்றப்பட்டுள்ள கொடி முருகனுக்குரிய சேவற் கொடி அல்ல. சிவனுக்கான ரிஷபக் கொடி தான். பள்ளியறையும் சிவனுக்குத்தான்.முருகனுக்கல்ல. ஆனால் பக்தர்கள் முருகன் கோவில் என்றே இங்கு வருகிறார்கள். நேர்த்திக்கடன் கழிக்கிறார்கள். ஆனால் சிவாச்சாரியார்கள் இது ஈஸ்வரத்தலம் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் உள்ளுக்குள் தங்களுக்கான காரியத்தை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

வைதீகக்கூட்டத்தின் மாற்று மரபுக்கும், உழைக்கும் மக்களின் முருக வழிபாட்டிற்கும் இடையே நடக்கும் நிழல் யுத்தப் போர்க்களம் தான் திருப்பரங்குன்றம். இங்கு முருகன் வதம் செய்ய வேண்டியது சூரனை அல்ல. சங்கிகளையே.

மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருந்த ஆசீவகத்தின் அய்யனாரும் ஆரியப் பெருமுடிச்சுக்குள் கொண்டு வர எழுதப்பட்ட கதைதான் சிவனுக்கும், மோகினி தோற்றம் கொண்ட விஷ்ணுவுக்கும் அய்யனார் பிறந்தார் என்ற கதை. மக்கள் வழிபடும் அய்யனாருக்கு இரண்டு கைகள் மட்டுமே இருக்கும். ஆரியம் உருவாக்கிய அய்யனாருக்கு நான்கு கைகள் இருக்கும். அந்த அய்யனாருக்கு பூணூல் போடப்பட்டிருக்கும்.

குடியரசு தின ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்டது தமிழ் மக்களின் அய்யனார் அல்ல. ஆரியம் உருவாக்கிய நான்கு கைகள் கொண்ட அய்யனாரே.

ஆரியத்திடமிருந்து கடந்த காலத்தில் காத்த அய்யனாரும், நிகழ்காலத்தில் காத்த தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், அய்யனாருக்கு அருகில் நிற்க வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். வருங்காலத்தில் எடுத்துச் செல்வோம்.